.சராசரி மாணவனாக இருப்பது வாழ்க்கையின் அளவுகோல் அல்ல! 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர்!

.சராசரி மாணவனாக இருப்பது வாழ்க்கையின் அளவுகோல் அல்ல! 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர்!

  ஜி.எஸ்.மேத்யூராஜ்,

  சராசரி மாணவனாக இருப்பது வாழ்க்கையின் அளவுகோல் அல்ல, குன்னூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த குரூப் கேப்டன் வருண் சிங் பல சாதனைகளை படைத்த பின்னரும் தனது அடிப்படையை மறக்கவில்லை எனவும், எதிர்கால சந்ததியினர் மீது அக்கறை கொண்டிருந்தார் எனவும் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

  ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறு அன்று ரேடியோ மூலம் 'மன் கி பாத்' நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். அந்த வகையில், இந்த ஆண்டின் கடைசி நிகழ்ச்சியும், மன் கி பாத் துவங்கிய பின்னர் 84வது உரையில் பிரதமர் மோடி பேசியதாவது,

  இந்தியாவில் தடுப்பூசி போடுவோரின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. இது நமது விஞ்ஞானிகள் கொண்ட உறுதியையும்,நமது மக்களின் நம்பிக்கையையும் காட்டுகிறது. உருமாறிய கோவிட் வைரசிற்கு எதிராக நாம் கவனமுடன் இருக்க வேண்டும். கொரோனாவின் புதிய உருவமான ஒமைக்ரானை நம் கதவை தட்ட துவங்கி உள்ளது. அதனை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும் இந்த பெருந்தொற்றை வீழ்த்த, நமது குடிமக்களின் முயற்சி மிகவும் முக்கியமானது.

   குரூப் கேப்டன் வருண் சிங் பறந்த ஹெலிகாப்டர், இந்த மாதம் தமிழகத்தின் குன்னூரில் விபத்திற்குள்ளானது. அதில், நமது முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் பலரை இழந்தோம். வருண் சிங்கும், பல நாட்கள் மரணத்துடன் தைரியமாக போரிட்டு, பின்னர் நம்மை விட்டு சென்றார்.

  அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது, சமூக வலைதளத்தில் நான் பார்த்தது எனது மனதை தொட்டது.

  கடந்த ஆகஸ்ட் மாதம் தான் அவருக்கு, சவுரியா சக்ரா விருது வழங்கப்பட்டது. இந்த விருதை பெற்ற உடன், அவர் படித்த பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு அவர் கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தை படித்த உடன், பல சாதனைகள் படைத்து புகழின் உச்சத்திற்கு வந்த பிறகும் தனது அடிப்படையை வருண் சிங் மறக்கவில்லை என்பது எனது மனதில் வந்தது. எதிர்கால சந்ததியினர் மீது அவர் அக்கறை கொண்டிருந்தார்.

  புத்தகங்கள் நமக்கு அறிவை கொடுப்பதோடு நமது வாழ்க்கையை செதுக்கிறது. பள்ளியில் நீங்கள் சராசரி மாணவனாக இருக்கலாம். ஆனால், வாழ்க்கையில் அது அளவுகோல் அல்ல. எதில் நீங்கள் பணியாற்றுகிறீர்களோ அதில் உறுதியாக இருங்கள். இந்திய கலாசாரத்தை பற்றி தெரிந்து கொள்ளவும் அதை பரப்பவும் பல வெளிநாட்டினர் ஆர்வமாக உள்ளனர். வரவிருக்கும் புத்தாண்டு புதிய வாய்ப்புகளை கொடுத்து புதிய அத்தியாயத்தை எழுதும் என நம்புகிறேன்.

ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களுடன் பல்வேறு பாடங்கள் குறித்து ஆலோசனை நடத்துவேன். இந்த ஆண்டும், தேர்விற்கு முன்பு ஆலோசனை செய்வேன். அந்த வகையில் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைனில் போட்டி ஒன்று நடக்கும் என அவரது உரையில் பேசினார்.