கௌரவிக்கப்படும் பெண் போலீசார் 50 ஆண்டுகள்:- விழா எடுக்கும் அரசு!!

கௌரவிக்கப்படும் பெண் போலீசார் 50 ஆண்டுகள்:- விழா எடுக்கும் அரசு!!

 ம.பா.கெஜராஜ்,

   தமிழக காவல் துறையில் பெண்கள் இணைந்து 50 ஆண்டுகள் ஆவதையொட்டி அதை அரசு விழாவாக கொண்டாட திட்டமிடப்பட்டிருக்கிறது. சிறப்பாக பணியாற்றி பெண் போலிசார் பலருக்கு விருதுகள் காத்திருப்பதாக கூறப்படுகிறது.

 1973-ம் ஆண்டு கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது தமிழக காவல்துறையில் பெண் காவலர்கள் முதல்முறையாக பணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். ஒரு சப்-இன்ஸ்பெக்டர், ஒரு போலீஸ் ஏட்டு, 20 காவலர்கள் என மொத்தம் 22 பெண்கள் மட்டுமே போலீஸ் பணியில் முதலில் இணைக்கப்பட்டார்கள்.

   அவர்களில் முதல் சப்-இன்ஸ்பெக்டராக உஷா ராணி பொறுப்பேற்றார். இதன் பின்னர் படிப்படியாக இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.

  பின்னர் 1976-ம் ஆண்டு தமிழக பிரிவில் 2 பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகள் தேர்வானார்கள். இவர்களில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்த திலகவதி இன்னொருவர் கேரளாவைச் சேர்ந்த லத்திகாசரண் ஆவர்.

 தமிழக காவல் துறையில் அப்படி துவங்கப்பட்ட பெண் போலிசாரின் எண்ணிக்கை, ஒரு டி.ஜி.பி., இரண்டு கூடுதல் டி.ஜி.பி.க்கள், பதிநான்கு ஐ.ஜி.க்கள் உள்பட 23,542 பெண் காவலர்கள் என உயர்ந்துள்ளது.    

  அதன் தொடர்ச்சியாக 1992-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியின்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா பெண் போலீசுக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் மகளிர் காவல் நிலையத்தை தொடங்கினார்.

  சென்னை ஆயிரம் விளக்கில் முழுக்க முழுக்க பெண்களையே கொண்ட அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் தொடங்கப்பட்டது.

    பின்னர் இந்த காவல் நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் தற்போது 202 அனைத்து பெண் போலீஸ் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. பின்னர் பெண் போலீஸ் கமாண்டோ படையையும் ஜெயலலிதா உருவாக்கினார்.

   2004-ம் ஆண்டு ஜனவரி மாதம் பெண் போலீசார் அடங்கிய அதிரடிப்படை, கமாண்டோ படை, விரைவு அதிரடிப்படை ஆகியவற்றுடன் கூடிய பெண் போலீஸ் படை ஏற்படுத்தப்பட்டது.

   2009-ம் ஆண்டு தமிழகத்தின் முதல் பெண் டி.ஜி.பி.யாக லத்திகா சரண் 2009-ம் ஆண்டு பணி அமர்த்தப்பட்டார். இவர் சென்னை மாநகர போலீஸ் கமிஷனராகவும் பொறுப்பு வகித்து பெருமை சேர்த்துள்ளார்.

   தற்போது தமிழகம் முழுவதும் காவலர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை காவல்துறையின் அனைத்து பொறுப்புகளிலும் பெண் போலீசாரும் பெண் அதிகாரிகளும் கோலோச்சிக் கொண்டிருக்கிறார்கள்.

   சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு, மத்திய குற்றப்பிரிவு, சி.பி.சி.ஐ.டி., என காவல் துறையில் உள்ள அனைத்து பிரிவுகளிலும் ஆண் காவலர்களுக்கு இணையாக பெண் போலீசார் மெச்சத் தகுந்த பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

  சிறப்பான பணிகளுக்கான பல்வேறு விருதுகளையும் பெற்று பெண் போலீசார் பாராட்டுகளையும் பெற்று வருகிறார்கள். இப்படி தமிழக காவல் துறையில் பெண் போலீசார் பொன்விழா காணும் இந்த நேரத்தில் அவர்களை கவுரவிக்கும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்க உள்ளார்.

   இதுதொடர்பான விழாவை வருகிற 16-ந் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.ரதற்கான ஏற்பாடுகள் தயாராகிக்கொண்டிருக்கிறதாம்.

 குறிப்பு:- முன்னாள் பெண் ஐ.பி.எஸ்.கள் இந்த விழாவில் கவுரவிக்கப்படுவார்கள் என்று பலரும் எதிர்பார்க்கிறார்கள்.