புட்டுக் கொண்ட அ.தி.மு.க. - பாஜக! யாருக்கு லாபம்!

ம.பா.கெஜராஜ்,
கடந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் வரை கூட்டாளிகளாக இருந்த அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் தற்போது நடைபெற உள்ள நகப்புற உள்ளாட்சி தேர்தலில் எதிராளிகளாகிவிட்டனர்.
அதிமுக எடுத்த முடிவு ஜெயலலிதா பாணி என்று கூறப்படுகிறத
ஆம்,தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி தனித்து விடப்பட்டிருக்கிற சூழலில், யாருக்கு லாபம் நஷ்டம் என்றெல்லாம் தற்போது அலசப்பட்டு வருகிறது.
இது பற்றின விவரம் வருமாறு,
தமிழக நகர்புற ஊராட்சி தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி நடக்க உள்ளது.
அதற்காக அரசியல் கட்சிகள் கூட்டணி செட்டப் உள்ளிட்ட பணிகளை பரபரப்பாக மேற்கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ஜ.க. தங்களுக்கு 20 சதம் சீட்டுகளை ஒதுக்க வேண்டும் என்று அ.தி.மு.க.வுடன் பேச்சு வார்த்தை நடத்தியது.
ஆரம்பம் முதலே இழுபறியாக இருந்த பேச்சு வார்த்தையின் இடையே அ.தி.மு.க.முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.
அந்தப் பட்டியலில் கடலூர் மாநகராட்சி, சிதம்பரம், விழுப்புரம், விருத்தாச்சலம், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, திட்டக்குடி, தருமபுரி ஆகியவை இடம் பெற்றிருந்தன.
பா.ஜ.கவுடன் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் போதே அ.தி.மு.க வெளியிட்ட வேட்பாளர் பட்டியல் அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக ஆனது.
இதனால் பா.ஜ.க.வுக்கு மனக்கஷ்டம் ஏற்பட்டது.
அதை சுதாரித்துக் கொண்டு யோசிப்பதற்குள் இன்று (31.01.22) இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை அ.தி.மு.க வெளியிட உள்ளதாக பா.ஜ.க.வுக்கு இடி இடித்தது.
எனவே அண்ணாமலை, கட்சியின் மூத்த தலைவர்களுடன் இன்று அவசர ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் சுதாகர் ரெட்டி, பொன்.ராதா கிருஷ்ணன், சி.பி. ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் ஆகியோரும் பங்கேற்றனர்.
அப்போது 'அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில், பா.ஜனதா-வுக்கு மிகக்குறைந்த எண்ணிக்கையில் இடம் கொடுத்தால் ஏற்க வேண்டியதில்லை என்று சிலர் கருத்து தெரிவித்தனர்.
சிலர் கோபாவேசமாக பேசினார்கள். அப்போது அவர்கள் தேவைக்கு நம்மை பயன்படுத்திக் கொண்டார்கள். இப்போது நமது சிறு எதிர்பார்ப்பை கூட நிறைவேற்ற தயாரில்லை. எனவே நாம் அவர்கள் தருவதை வாங்கிக்கொண்டு இருக்க வேண்டிய அவசியமில்லை என்று ஆவேசமாக கூறினார்கள்.
இருந்த போதும், அ.தி.மு.க. தரப்பில் இருந்து அழைப்பு வரும் என்ற நம்பிக்கையுடன் காத்து இருந்தனர். ஆனால் அழைப்பு எதுவும் வரவில்லை. எடப்பாடி பழனிசாமியும் சேலம் சென்று விட்டார். இதையடுத்து தனித்து போட்டியிடுவதற்கான ஏற்பாடுகளில் மும்முரமாக இறங்கியது பா.ஜ.க. இந்நிலையில் மதியம் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு பா.ஜனதா தலைவர் அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக பரபரப்பான அறிவிப்பை வெளியிட்டார்.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், `அ.தி.மு.க தலைவர்களுடன் முதல் கட்ட பேச்சுவார்த்தையை நடத்தினோம். எங்கள் கட்சி நிர்வாகிகளும் அதிக இடங்களில் போட்டியிட விரும்புகின்றனர். தொண்டர்களின் குரலுக்கு செவிசாய்க்க வேண்டும் என்பது தலைமையின் முடிவு.
இதனை டெல்லியில் உள்ள தலைவர்களும் ஏற்றுக் கொண்டனர். அதைவைத்துத்தான் அ.தி.மு.க தலைமையிடம் பேச்சுவார்த்தை நடத்தினோம்,'' என்கிறார்.
``நகர்ப்புற உள்ளாட்சியில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் எங்கள் கட்சியின் தொண்டர்கள் நிற்க வேண்டும் என விரும்புவது நியாயமான கோரிக்கை. அ.தி.மு.கவுக்கும் நிறைய பிரச்னைகள் உள்ளன. இந்தத் தேர்தலில் பா.ஜ.க தனித்துப் போட்டியிடுவது என முடிவு செய்துள்ளோம். அனைத்து இடங்களிலும் நிற்கப் போகிறோம். அதே நேரம், 2024 தேர்தல் வரையில் தொடர்ந்து இந்தக் கூட்டணியில் இருப்போம்.
வேட்பாளர்களின் முதல் பட்டியலை வெளியிட இருக்கிறோம்.
கட்சியின் அடுத்தகட்டப் பயணத்துக்கு இலக்கை அடைவதற்கு வாய்ப்பாக இருக்கும். அனைத்து இடங்களிலும் வெற்றி பெறுவதற்காக கடுமையாக உழைப்போம். தமிழ்நாட்டில் இல்லம்தோறும் தாமரை மலர வேண்டும். தொண்டர்களின் குரலுக்கு செவிசாய்க்க வேண்டும் என்பது எங்கள் எண்ணம். வரும் நாள்களில் அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணி தொடரும்,'' என்றவரிடம்,
` நயினார் நாகேந்திரனின் பேச்சுதான் கூட்டணி முறிவுக்குக் காரணமா?' என செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.
`அனைத்துக் கட்சியிலும் தலைவர்களின் கருத்துகள் முரண்பாடாக இருக்கும். நயினார் நாகேந்திரன் பேசியதற்காக வருத்தம் தெரிவித்திருந்தார். அதனை இரு கட்சிகளும் பெரிதுபடுத்தவில்லை. இந்தத் தேர்தல் மூலம் பா.ஜ.க அடுத்தகட்டத்துக்குச் செல்ல வேண்டும். அ.தி.மு.க தலைவர்கள் மீது எந்த வருத்தமும் கிடையாது.
மிகவும் கடினமான நேரங்களில் அ.தி.மு.க தலைவர்கள் கட்சியை வழிநடத்தி வருகின்றனர். நாங்களும் அடுத்தகட்டமாக கட்சியைக் கொண்டு செல்வதற்கான பணியாகப் பார்க்கிறோம்.
கடந்த உள்ளாட்சியில் 8 மாவட்டங்களில் கூட்டணியில் நின்றோம். கள்ளக்குறிச்சியில் தனித்துப் போட்டியிட்டோம். இந்தமுறை அ.தி.மு.க தரப்பில் 10 சதவீதம் ஒதுக்கியிருந்தனர். நாங்கள் கூடுதலாகக் கேட்டோம். நாங்கள் எதிர்பார்த்த இடங்கள் கிடைக்கவில்லை' என்று சொன்னார்.
இது குறித்து பா.ஜ.க முக்கியஸ்தர்கள் சிலர் தெரிவிக்கையில், எங்களுக்கு வெற்றிவாய்ப்புள்ள இடங்களை கேட்டதற்கு, அதற்கு அ.தி.முக முன்வரவில்லை.
எங்கள் பட்டியலில் கோவை, திருப்பூர், காஞ்சிபுரம், மதுரை புறநகர், திருநெல்வேலி, நாகர்கோவில் என சில மாநகராட்சிகளின் மேயர் இடங்களையும் கேட்டிருந்தோம்.
இதற்கு அ.தி.மு.க தரப்பில் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை. எங்களுக்கு பத்து சதவீத இடங்களுக்கு மேல் அவர்கள் ஒதுக்கவில்லை. அதற்கு பின்னர் தான், தனித்துப் போட்டி என்ற முடிவை தலைமை எடுத்தது என்கிறார்கள்.
அ.தி.மு.க தரப்பில் இதற்கான சில தகவல்கள் கூறப்பட்டது, அந்த வகையில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டியளித்தார்.
அதில், ``ஒவ்வொரு கட்சிக்கும் எதிர்பார்ப்புகள் இருக்கும். அதனைப் பூர்த்தி செய்யக் கூடிய அளவுக்கு எங்கள் கட்சியின் நலனையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியாத சூழலை தெரிவித்தோம். குறிப்பாக, தற்போது அதிகப்படியான இடங்களை ஒதுக்க முடியாத நிலையில் இருக்கிறோம். தனித்துப் போட்டி என்பது அவர்கள் கட்சி எடுத்த முடிவு'' என்றார்.
யாருக்கு லாபம்
அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியில் பிளவு ஏற்பட்டிருக்கும் நிலையில் அதிமுகவுக்கு அதிக லாபம் கிடைக்கும் என்பதே அரசியல் நோக்கர்களில் கருத்தாக உள்ளது.
தமிழகத்தில் ஆளுங்கட்சியின் மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
அரசு அலுவலகங்களில் பெரும்பாலும் சரியாக வேலைகள் நடப்பதில்லை. அரசு அலுவலர்கள் மக்களை இழுத்தடிப்பதாவும், அதே போல் ஆளுங்கட்சி பிரமுகர்கள் நில புலன்கள் மீது ஆசையாய் கண் வைத்து போன்ற பல்வேறு பிரச்சனை வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
போதாக்குறைக்கு பொங்கல் கிப்ட் பை தொடர்பாக ஏகப்பட்ட குறைபாடுகளை சோஷியல் மீடியாக்கள் வாயிலாக மக்கள் வெளுத்து வாங்கிவிட்டனர்.
மிளகுக்கு பதில் பப்பாளி விதையும், பப்பாளி கொட்டையையும் கலந்து கொடுத்ததாக சர்ச்சைகள் வெளியாயின. வெல்லம் பாக்கெட், மஞ்சள் தூள் ஆகியவற்றை தரையில் கொட்டிக் காட்டி மக்கள் அவர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்கள்.
அப்படியிருக்க, அரசாங்கம் ஆங்காங்கே பொறுப்பாளர்கள் சிலரை சஸ்பெண்டு செய்த விஷயம் இதையெல்லாம் உறுதிபடுத்தும் விதமாக அமைந்தது.
அதே போல் பொங்கல் கொண்டாட்டத்துக்கு அரசு பணம் கொடுக்கும் என்று எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
இதெல்லாம் ஒருபக்கம் இருக்க சிறுபாண்மையினர் பா.ஜ.க.வினரின் பல்வேறு அட்டாக்கினால் திணறிக் கொண்டிருப்பதாக சொல்கிறார்கள்.
இது போன்ற சூழலில் மக்களுக்கு ஆதரவு கரம் கொடுக்க வேண்டிய இடத்திலிருந்த அ.தி.மு.க., இது நாள்வரை பா.ஜ.க.வுடன் நட்பாக இருந்தது. ஆகவே மக்கள் அ.தி.மு.க.மீது வெறுப்பை உமிழ்ந்து வந்தனர்.
இப்படிப்பட்ட சூழலை இந்த கூட்டணி பிளவு என்பது மாற்றியமைத்துள்ளது.
உண்மையில் பார்த்தால் அ.தி.மு.க. என்கிற பிரதான அரசியல் கட்சி தற்போது மக்களை நம்பி தேர்தல் களம் இறங்கியுள்ளது.
இதை மக்கள் எப்படி பார்க்கப்போகிறார்கள் என்பது ஒருபுறம் இருக்க
தேர்தல் பணிகளில் ஆளுங்கட்சிக்கு கண்டிப்பாக கூடுதல் பலம் இருக்கும் என்பது தானே யதார்த்தம்.
இந்த நேரத்தில் மத்திய அரசின் பலமும் அ.தி.மு.க.வுக்கு இல்லை என்கிற நிலையில் வாக்காளர்களின் நம்பிக்கையை மட்டுமே நம்பி அ.தி.மு.க.களம் காண்கிறது.
அப்படியெனில் லாபம் யாருக்கு என்பது புரிந்த விஷயம் தானே.
ஆக எது எப்படியோ, அதிமுக எடுத்த முடிவு ஜெயலலிதா பாணி என்பது மட்டும் புரிகிறது.