திருட்டு மெக்கானிக்குடன் கூட்டு வைத்த டகால்டி நிருபர்:- இருவரையும் கைது செய்த போலிஸ்!
ஜி.சாந்தகுமார்,
டூவீலர்களை திருடிய மெக்கானிக்குடன் டிவி நிருபர் ஒருவர் கூட்டு வைத்ததன் விளைவு அவர்கள் இருவர் மீதும் வழக்கு பதியப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இது குறித்து போலிஸ் தரப்பில் கூறப்படுவதாவது,
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசு மருத்துவமனை பகுதி உள்ளிட்ட முக்கிய இடங்களில் தொடர்ந்து மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்டு வந்தது இது தொடர்பாக மோட்டார் சைக்கிள்களை பறிகொடுத்த பொதுமக்கள் குடியாத்தம் டவுன் போலீசில் புகார் அளித்தனர்.
இதனை தொடர்ந்து வேலூர் சரக டிஐஜி எம். எஸ்.முத்துசாமி,மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் ஆகியோர் உத்தரவின் பேரில் குடியாத்தம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி,சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன்,ஏட்டுகள் ஜெயக்குமார்,சந்திரபாபு உள்ளிட்ட தனிப்படையினர் அரசு மருத்துவமனை உள்ளிட்ட முக்கிய இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை தீவிர ஆய்வு செய்தனர்.
அப்போது ஒரு குறிப்பிட்ட நபர் மோட்டார் சைக்கிளை திருடுவது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து நேற்று தனிப்படை போலீசார் அரசு மருத்துவமனை பகுதியில் மறைந்திருந்து கண்காணித்தினர். அப்போது அந்த குறிப்பிட்ட நபர் மோட்டார் சைக்கிள் திருடிய போது போலீசார் அவரை சுற்றி வளைத்து பிடித்தனர்.
தொடர்ந்து அந்த நபரை காவல் நிலையம் கொண்டு சென்று தீவிர விசாரணை நடத்தியதில் அந்த நபர் குடியாத்தம் தாடி அருணாசலம் தெருவை சேர்ந்த பாலச்சந்தர் மகன் தரணி வயது 33 என்றும், மோட்டார் சைக்கிள் மெக்கானிக் என்பது தெரியவந்தது.
இவர் இப்பகுதியில் ஏராளமான மோட்டார் சைக்கிள்களை திருடியதும் விசாரணை தெரியவந்தது. இவர் திருடிய மோட்டார் சைக்கிள்களை குடியாத்தம் அடுத்த கள்ளூர் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் ஞானவேல் வயது 38 தனியார் தொலைக்காட்சி நிருபர் என்று கூறப்படும் இவரிடம் கொடுத்து மோட்டார் சைக்கிளை விற்றதாக தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து குடியாத்தம் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து மோட்டார் சைக்கிள்களை திருடிய தரணி மற்றும் திருட்டு மோட்டார் சைக்கிள்கள் வாங்கி விற்று திருட்டுக்கு உடந்தையாக இருந்ததாக டகால்டி நிருபர் ஞானவேல் ஆகியோரை கைது செய்து, மேலும் அவர்கள் அளித்த தகவலின் பெயரில் ரூபாய் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பத்து மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர் மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடியாத்தம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மோட்டார் சைக்கிள் திருட்டு போன சம்பவத்தில் நிருபரே உடந்தையாக இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேற்படி திருட்டு சம்பவத்தில் சிக்கிய நிருபர் மீது நடவடிக்கை எடுக்க உள்ளூர் அதிகாரிகளே முடிவெடுத்து வாகன திருடன் மெக்கானிக்கையும், அதற்கு உடந்தையாக இருந்த நிருபரையும் கைது செய்தனர். (இதற்குக்கூட சில டுபாக்கூர்கள் சிபாரிசு சென்று போலிசாரிடம் மொக்கை வாங்கியிருக்கிறார்கள்)
இந்நிலையில் டகால்டி நிருபர் ஞானவேல் மூலமாக நூற்றுக் கணக்கான திருட்டு வண்டிகளை விற்பனை செய்த மெக்கானிக்கை கஸ்டடி எடுத்து விசாரித்தால் இதில் சில போலிசாரின் பங்கு இருப்பது அம்பலமாகும் என்கிறார்கள்.
இது குறித்து ஒய்வு பெற்ற போலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், நிருபர் என்கிற பெயரில் பல வசூலிஸ்டுகள் நடமாடுகிறார்கள். சமூக விரோதிகள் மற்றும் காவல் துறையினருடனும் கூட்டு வைத்துகொண்டு அவர்களுக்கு பாலமாக செயல்பட்டு பல லட்சங்களை ஏமாற்றி சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.
போலிஸ் அதிகாரிகளுடன் நெருக்கமாக இருப்பதைப்போல் காட்டிக் கொண்டு லட்சக்கணக்காக பணம் வசூலிப்பதோடு, அதே ஓதாவில் உள்ளூரில் சக குடியிருப்புவாசிகளுக்கு டார்ச்சர் கொடுத்து வருகிறார்கள்.
எதற்கெடுத்தாலும் உயர் போலிஸ் அதிகாரிகளின் பெயரை சில நிருபர்கள் பயன்படுத்தி போலிசாரை மிரட்டி பணியவைக்கிறார்கள். இதனால் பல நேரங்களில் போலிசார் நியாயமாக பணியாற்ற முடியாத சூழ்நிலைக்கு ஆளாகிறார்கள்.
குறிப்பாக மணல் மாஃபியா, கள்ளச்சாராயம், போலி லாட்டரி முதலாளிகள் என ஒருசில டிவி நிருபர்களின் கூட்டு பலமாக உள்ளது.
இப்படிப்பட்டவர்கள் கிட்டத்தட்ட புரோக்கர்களாகவே மாறியிருக்கிறார்கள். உளவுத்துறையில் உள்ள நியாயமானவர்கள் மூலம் நிருபர்கள் பட்டியலை தயாரித்து அவர்களில் டகால்டி ஆட்களின் நடவடிக்கைகள் குறித்து விசாரித்தால், கொலை,கொள்ளை தற்கொலை,மிரட்டி பணம் பறிப்பு, வேலை வாங்கித்தருவதாக பணம் பெற்றுக் கொண்டு மோசடி செய்தது ஆகியவற்றின் பின்ணணிகள் அம்பலமாகும்.
அதனடிப்படையில் அந்த கிரைம் விவரங்களை அவர்கள் பணியாற்றும் நிர்வாகத்துக்கு அளித்தால் ஒழுங்குபடும், குற்றங்களும் குறையும் என்கிறார் வருத்தமுடன்.