மீன்கார மூதாட்டியை இறக்கிவிட்டதால் மூவர் சஸ்பெண்டு!
ஆர்.ரவிகாலேப்,
மீன்கார மூதாட்டி ஒருவரை பேருந்தில் இருந்துஇறக்கியதற்கு காரணமான மூவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிடப்பட்ட நிலையில், இந்த சம்பவம் குறித்து முதலமைசர் ஸ்டாலின் டுவிட் பதிவு செய்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் அருகே வாணியக்குடி மீனவ கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் (65). தலைச் சுமையாக மீன்களை கொண்டு குளச்சல் பகுதியில் சென்று வியாபாரம் செய்து பிழைப்பு நடத்தி வருகிறார்.
மீன் விற்ற பின்னர் மாலையில் மகளிருக்கான இலவச அரசு பேருந்தில் ஊர் திரும்புவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்நிலையில், நேற்று மாலை மீன்களை விற்றுவிட்டு குளச்சல் பேருந்து நிலையத்தில் இருந்து நாகர்கோவிலில் இருந்து கோடிமுனை செல்லும் மகளிருக்கான அரசுப் பேருந்தில் செல்வம் ஏறியுள்ளார்.அப்போது அந்த பேருந்து நடத்துனர் செல்வத்தின் மீது மீன்நாற்றம் வீசுவதாக சொல்லி பேருந்தில் இருந்து இறக்கிவிட்டுள்ளார்.
இதனால் ஊர் சேரமுடியாமல் தவித்த மூதாட்டி செல்வம், குளச்சல் பேருந்து நிலைய நேர கட்டுப்பாட்டு அலுவலகம் முன்பு வந்து நின்று அழுதவாறு கூச்சலிட்டார். இந்த வயசான காலத்துல வாணியக்குடி வரை நான் நடந்து தான் போணுமா?" என ஆதங்கத்துடன் அங்கிருந்த பயணிகளிடம் புலம்பினார். மேலும் அழுதவாறு பேருந்து நிலைய சுவரிலே சாய்ந்தவாறு நின்றார்.
இதை அங்கு நின்ற பயணிகள் சிலர் செல்போனில் படம்பிடித்து அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பரவவிட்டனர்.
மீன்விற்கும் மூதாட்டி செல்வம் பேருந்தில் இருந்து இறக்கி விடப்பட்டதாக கதறி அழும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதைப் பார்த்த சமூக ஆர்வலர்கள் அரசு போக்குவரத்து கழகத்திற்கு கண்டனத்தை தெரிவித்தனர்.
இதுகுறித்து குமரி அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
குமரி அரசுப் போக்குவரத்து கழக பொதுமேலாளர் அரவிந்த் உத்தரவின் பேரில் நாகர்கோவில் இயக்குதல், மற்றும் ஆய்வு அதிகாரி ஜெரோலின் லிஸ்பன்சிங் பாதிக்கப்பட்ட பெண் செல்வத்தின் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினார்.
அப்போது சம்பந்தப்பட்ட ஓட்டுனர், நடத்துனர் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தபோது, தனது மகன்களை போன்ற அவர்கள் மீது பாதிக்கும்படியாக எதுவும் செய்துவிடாதீர்கள் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்நிலையில் ஓட்டுனர் மைக்கேல், நடத்துனர் மணிகண்டன், நேரக் காப்பாளர் ஜெயகுமார் ஆகிய 3 பேரையும் நேற்றி இரவு பணியிடை நீக்கம் செய்து குமரி அரசுப் போக்குவரத்து கழகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதற்கிடையில் குமரி சம்பவத்துக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து டுவிட் செய்திருக்கிறார்.
அதில் "குமரி மாவட்டத்தில், மீன் விற்பனை செய்து வந்த தாய் ஒருவரைப் பேருந்து நடத்துநர் இறக்கிவிட்டதாகக் கூறப்படும் நிகழ்வானது என்னை அதிர்ச்சி அடைய வைத்தது.
மகளிர் மேம்பாட்டுக்காகக் கட்டணமில்லா உரிமைச் சீட்டை வழங்கி, அதை நடத்துநர்கள் திறம்படச் செயல்படுத்தி வரும் இக்காலத்தில், ஒரு நடத்துநரின் இச்செயல் கண்டிக்கத்தக்கதாக உள்ளது.
எல்லோரும் சமம் என்ற பரந்த உள்ளத்துடன் நம் அனைவரது எண்ணமும் செயலும் அமைய வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
இந்த விஷயத்தில் அரசின் நடவடிக்கையை பலரும் பாராட்டி வருகின்றனர்.