முப்படைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் உட்பட 14 பேர் ஹெலிகாப்டர் விபத்தில் பலி! ஜனாபதிபதி நிகழ்வுகள் ரத்து! முதல்வர் ஸ்டாலின் குன்னூர் விரைந்தார்!

 ம.பா.கெஜராஜ்,

 இந்தியாவின் முதல் முப்படை தளபதியான ஜெனரல் பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி,ராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட 14 பேர் பயணித்த ராணுவ ஹெலிகாப்டர் விமானம் இன்று காலை 11.00 - 11.30 மணியளவில் விபத்துக்குள்ளானது, இந்த விபத்தில் ஜெனரல் பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உட்பட 14 பேர் மரணமடைந்தனர்.

 இந்த விபத்து தொடர்பான தகவல் அறிந்த மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் அவர்கள் பிரதமர் மோடி அவர்களை சந்தித்து அவசர ஆலோசனை மேற்கொண்டிருக்கிறார்.

 இந்த விபத்துக்கு சதி ஏதேனும் காரணமாக இருக்குமோ என விசாரிக்க முடிவெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இன்று மாலை பாதுகாப்பு கமிட்டி கவுன்சிலிங் பிரதமர் தலைமையில் கூடுகிறது.

 இந்நிலையில் ஜனாதிபதி ராம்நாத் சிங்கோவிந்த் கலந்துக் கொள்ளும் மும்பையிலுள்ள கட்ற்படை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன.

 ஊட்டியை அடுத்த குன்னூர் அருகே வானில் பறந்துகொண்டிருந்த ராணுவ ஹெலிகாப்டர் விமானம்விபத்துக்குள்ளாகியுள்ளது. அப்போது காட்டேரி பகுதியில் உள்ள குடியிருப்புக்கு அருகே இரண்டு உடல்கள் சிதறி விழுந்துள்ளன. இந்த விபத்தில் பல உயரதிகாரிகள் உயிரிழந்துள்ளதாக அஞ்சப்படும் நிலையில், முப்படை தளபதி பிபின் ராவத் அவர்கள் இறந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

 அவரது மனைவி மதுலிக்கா ராவத் அவர்களும் உயிரிழந்தார்.

  விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 14 பேர் பயணம் செய்துள்ளனர். ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 14 ராணுவ பேர் உயிரிழந்தனர். ஏற்கனவே 5 பேர் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் மேலும் 2 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.மீட்பு பணி தொடர்கிறது.

 மீட்கப்பட்ட உடல்கள்  வெலிங்டனில் உள்ள ராணுவ மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

 பிபின் ராவத் பயணித்த IAF Mi-17V5 ஹெலிகாப்டர் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து வெலிங்கடன் ராணுவ பயிற்சி மையத்துக்கு சென்றபோது குன்னூர் காட்டேரி பார்க் அருகே விழுந்து நொறுங்கியுள்ளது.

 விமானம் விழுந்து நொறுங்கிய இடம் வெலிங்டனில் இருந்து சுமார் 3.85 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

 இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று இந்திய விமானப்படை தமது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

CDS Bipin Rawat, his staff and some family members were in the Mi-series chopper that crashed between Coimbatore and Sulur in Tamil Nadu. Search and rescue operations launched from nearby bases: Sources pic.twitter.com/kZKBoEV9Ix

— ANI (@ANI) December 8, 2021

 பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடத்துக்கு இந்திய விமானப் படையின் தலைமைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் வி.ஆர். சவுத்தரி விரைகிறார். தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினும் இன்று மாலை அங்கு செல்லவுள்ளார்.

  முப்படை தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் பற்றி பார்ப்போம்.

  ராணுவ தலைமை தளபதியாக 2019, டிசம்பர் மாதம் நியமிக்கப்பட்டார்.ஜெனரல் பிபின் ராவத், சிம்லாவில் உள்ள செயிண்ட் எட்வார்ட் பள்ளியில் படித்தார். பின்னர் கடக்வாஸ்லாவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியில் படித்தார். அவர் 1978-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் டேராடூனில் உள்ள இந்திய ராணுவ பயிற்சி நிலையத்தில் உள்ள பதினோராவது கூர்கா ரைஃபிள்ஸ் பிரிவின் ஐந்தாவது படையணியில் சேர்ந்தார்.

   டேராடூனில் உள்ள இந்திய ராணுவ பயிற்சி நிலையத்தில் இந்திய ராணுவ இயக்குநரகத்தின் தலைமை அதிகாரி உட்பட பயிற்சி அளிக்கும் பொறுப்பை அவர் வகித்தார். மத்திய பிராந்தியத்தில் தளவாடங்கள் பிரிவு அலுவலராக அவர் பணியாற்றினார்.

  ராணுவ செயலர் பிரிவில், துணை ராணுவ செயலாளர் மற்றும் கர்னல் அந்தஸ்தில் ராணுவ செயலாளராக பிபின் ராவத் பணியாற்றினார்.

வெலிங்டனில் உள்ள பாதுகாப்பு சேவை உயரதிகாரிகளுக்கான பயிற்சிக் கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்த பிபின் ராவத், தேசிய பாதுகாப்பு கல்லூரியிலும் பல்வேறு பிரிவுகளில் தேர்ச்சி பெற்றார்.

அமெரிக்காவின் ஃபோர்ட்லீவன்வொர்த்தில் உள்ள ராணுவ தளபதிகளுக்கான பயிற்சி வகுப்புகளிலும் பிபின் ராவத் பங்கெடுத்துள்ளார்.

ஜெனரல் பிபின் ராவத், தேசிய பாதுகாப்பு மற்றும் தலைமைப்பண்பு குறித்து பல்வேறு கட்டுரைகளை எழுதியுள்ளார்.

  அது பல பத்திரிக்கைகளில் வெளியாகியுள்ளது.

 சென்னை பல்கலைகழகத்தில் பாதுகாப்பு குறித்த படிப்பில் அவருக்கு எம்.ஃபில் பட்டம் வழங்கப்பட்டது. மேலாண்மை மற்றும் கணிணி அறிவியலில் பட்டயப்படிப்பை முடித்துள்ளார்.