பாலம் இடிந்து 141 சாவு! தகுதி சான்றிதழ் கொடுக்கப்பட்டதா?

க.பாபு,
குஜராத் மோர்பியில் தொங்கு பாலம் இடிந்து விழுந்ததில் 141-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தில் பல குழந்தைகளும் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, மொத்த அரசு நிர்வாகமும் மோர்பியில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
இதில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு குஜராத் முதல்வர், பிரதமர் நரேந்திர மோதி மற்றும் பல்வேறு அமைச்சர்கள் வழக்கம் போலவே இரங்கல் தெரிவித்துள்ளனர்
இடிந்து விழுந்த தொங்கு பாலம் சில நாட்களுக்கு முன்பு தான் மீண்டும் திறக்கப்பட்டதாக இந்தச் சம்பவத்திற்குப் பிறகு சில செய்திகள் தெரிவிக்கின்றன. பழுதுபார்க்கப்பட்டு மீண்டும் திறக்கப்பட்ட பாலத்திற்கு தீபாவளி விடுமுறை காரணமாக ஏராளமானோர் வந்து சென்றது தெரிய வந்தது.
பாலம் இடிந்து விழுந்த சம்பவத்தை நேரில் பார்த்தவரான அமித் படேல், சுக்ராம் இருவரும் இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி முகமையிடம் பேசியபோது, "இதுவொரு சுற்றுலா தலம். ஆகவே, தீபாவளி விடுமுறை மற்றும் வார இறுதி நாட்கள் என்பதால் ஏராளமான மக்கள் இங்கு வந்திருந்தனர். பாலத்தின் மீது அதிகளவில் மக்கள் கூடியதால் இந்தச் சம்பவம் நடந்திருக்கலாம். பாலம் விழுந்ததும், மக்களும் ஒருவர் மீது ஒருவர் விழத் தொடங்கினர்," என்று சொன்னார்கள்.
விபத்து குறித்து மோர்பி நகராட்சியின் தலைமை அதிகாரி சந்தீப் ஜாலா பேசுகையில், "பாலம் மிகவும் பழுந்தடைந்த நிலையில் இருந்ததால், பொதுமக்கள் பயன்பாட்டைத் தவிர்த்து மூடப்பட்டது. அஜந்தா ஒரேவா குழுமம் பாலத்தின் பழுது, பராமரிப்பு பணிகளை முன்னெடுத்தது," என்றார்.
மேலும், "ஆட்சியரும் கூட இந்த விவகாரம் தொடர்பாகக் கூட்டம் நடத்தினார். கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு, பழுது பார்த்து மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக மார்ச் 7ஆம் தேதியன்று ஒரேவா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் 15 ஆண்டுகள் பராமரிப்பு செய்ய வேண்டிய பணியும் அடக்கம்," என்று கூறினார்.
பிடிஐ செய்தி முகமையிடம் பேசிய சந்தீப் சிங் ஜாலா, "மார்ச் மாதத்தில் பாலம் புதுப்பிக்கும் பணிகளுக்காக மூடப்பட்டது. அக்டோபர் 26ஆம் தேதியன்று புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக திறக்கப்பட்டது. ஆனால், உள்ளூர் நகராட்சி இந்தச் சீரமைப்புப் பணிகளுக்கு எந்த தகுதிச் சான்றிதழையும் வழங்கவில்லை," என்று கூறுகிறார். (அப்படின்னா எப்படி பயன்பாட்டுக்கு வந்தது)
ஆனால், இப்போது பாலம் எப்படி இடிந்தது, அதன் கொள்ளளவு என்ன, தகுதிச் சான்றிதழை எடுத்தார்களா இல்லையா, அதில் என்ன வகையான பொருட்கள் பயன்படுத்தப்பட்டன என்பது எங்களுக்குத் தெரியாது," என்று மேலும் கூறுகிறார்.