பெண் எஸ்.ஐ.க்கு கத்திக்குத்து - பின்னணி விவரங்கள்!

கே.ஏ.ஜெகதீஷ்வரி,
பெண் எஸ்.ஐ.க்கு கத்திக்குத்து விழுந்துள்ளது. அவரை ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில் அவரை முதல்வர் ஸ்டாலின் தொடர்புகொண்டு நலம் விசாரித்துள்ளார்.
அப்படியிருக்க இந்த கத்தி குத்துக்கான பின்னணி குறித்து பார்ப்போம்.
நெல்லை மாவட்டம் சுத்தமல்லி அருகே கோயில் திருவிழாவின் பாதுகாப்பு பணியில் பெண் உதவி காவல் ஆய்வாளர் மார்க்ரெட் தெரசா பாதுகாப்பு பணியில் இருந்தார். நெல்லை மாவட்டம் சுத்தமல்லி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிபவர் மார்க்ரெட் தெரசா. இவர் நேற்று வெள்ளிக்கிழமை இரவு சுத்தமல்லி அடுத்த பழவூரில் கோயில் திருவிழா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார்.
அப்போது அந்த பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் திடீரென உதவி ஆய்வாளர் மார்க்ரெட் தெரசாவை கத்தியால் சரமாரியாக குத்தினார்.
இந்த தாக்குதலில் உதவி ஆய்வாளருக்கு இடது கன்னம், இடது கழுத்து மற்றும் வலது மார்பு பகுதியில் காயம் ஏற்பட்டதாகவும் போலீசார் கூறுகின்றனர். உடனடியாக சக போலீசார் அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
சில நாள்களுக்கு முன்பு உதவி ஆய்வாளர் மார்க்ரெட் தெரசா, வண்டித் தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது, மது அருந்திவிட்டு பைக் ஓட்டி வந்த ஆறுமுகத்துக்கு அபராதம் விதித்தார்.
இதனால், ஏற்பட்ட ஆத்திரம் காரணமாகவே எஸ்.ஐ. மார்க்ரெட் தெரசாவை ஆறுமுகம் கத்தியால் குத்தியதாக கூறும் போலீசார், அவரிடம் தற்போது விசாரணை செய்து வருகின்றனர்.
தொலைபேசியில் நலம் விசாரித்த ஸ்டாலின்
இந்நிலையில், தாக்கப்பட்ட பெண் உதவி ஆய்வாளரை தொலைபேசி வாயிலாக தாம் நலம் விசாரித்ததாக, தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
மேலும், "சகோதரி மார்க்ரெட் தெரசாவிற்கு உயர்தர மருத்துவ சிகிச்சை வழங்க அறிவுறுத்தியுள்ளேன்" என்றும் அந்த ட்வீட்டில் முதல்வர் தெரிவித்துள்ளார்.
அதோடு மட்டுமல்லாமல், மார்க்ரெட் தெரசாவுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க திருநெல்வேலி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளதோடு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக ஐந்து இலட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கிடவும் ஆணையிட்டுள்ளார்.