லுங்கியுடன் புகார் அளிக்க சென்றவரை விரட்டிய போலிஸ்! வேட்டி வாங்கி தந்த பத்திரிகையாளர்கள்!

ம.பா.கெஜராஜ்,
கடந்த ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான 'ஜெய்பீம்' திரைப்பட படத்தின் முக்கிய கதாபாத்திரத்துடன் தொடர்புடைய தஞ்சாவூரைச் சேர்ந்த குளஞ்சியப்பன் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்க அனுமதி கோரி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு அளிக்க சென்றார்.
பட்டியல் இனத்தைச் சேர்ந்த அவர், லுங்கி, சட்டையுடன் வந்ததால் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை உள்ளே அனுமதிக்க மறுத்தனர்.
அதனால் அவர் அங்குள்ள பத்திரிகையாளர்களிடம் முறையிட்டார்.
அப்போது அங்கிருந்த மனிதாபிமானம் கொண்ட பத்திரிகையாளர்கள் சிலர், நடந்த விவரங்களை குளஞ்சியப்பனிடம் கேட்டறிந்து, அருகில் உள்ள கடைக்கு சென்று வேட்டி ஒன்றை வாங்கி அவரிடம் கொடுத்தனர். அதை அணிந்துக் கொண்ட பின்னர் அவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கும் பகுதிக்கு அனுமதிக்கப்பட்டார்.
இங்கு சாமானிய மக்களும் அவரவர் உடைகளில் வந்து செல்ல அனுமதி வழங்க வேண்டும் என்று சொன்ன குளஞ்சியப்பன், இது சட்டத்துக்கு புறம்பானது என்று கண்கலங்கினார்.
இந்நிலையி அவர் அளித்த புகார் மனுவில் தெரிவித்துள்ளதாவது:-
'நான் பட்டியல் இன சமூகத்தைச் சேர்ந்தவன். எனது கதையை திருடி 'ஜெய்பீம்' திரைப்படத்தை 2டி திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் எடுத்து வெளியிட்டிருப்பது தொடர்பாக சென்னை சைதாப்பேட்டை 9-வது சிட்டி கோர்ட்டில் முறையீடு அளிததில், அந்த முறையீட்டை முதல் தகவல் அறிக்கையாக பதிவு செய்து விசாரித்து அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்யும்படி சாஸ்திரிநகர் போலீஸ் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
ஆனால் அந்த உத்தரவு இதுவரை நிறைவேற்றப்படவில்லை. ஆகவே, கோர்ட்டு உத்தரவை போலீசார் நிறைவேற்றும் நிமிடம் வரை ஆகஸ்டு 15-ந்தேதி காலை 9 மணி முதல் சென்னை அடையாறில் உள்ள அம்பேத்கர் நினைவு இல்லம் முன்பு காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்க நான் முடிவு செய்திருப்பதால், எனக்கு போலீஸ் அனுமதி வழங்க வேண்டும்.' இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்காக சட்ட போராட்டம் நடத்தியவரை, லுங்கி அணிந்து வந்ததற்காக போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தடுத்து நிறுத்திய சம்பவம் தவறுதானே.
ஆனாலும் வேட்டி வாங்கித் தந்த பத்திரிகையாளர்களை பாராட்டலாமே.