காதல் விவகாரம்:- ஆணவக் கொலைக்கு மூன்று ஆயுள் தண்டனை! கோகுல் வழக்கின் முழு விவரம்!

ம.பா.கெஜராஜ்,
காதல் விவகாரத்தினால் ஆணவக் கொலை செய்யப்பட்ட கோகுல் வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது. அதில் வழக்கின் முதல் எதிரியான தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையின் நிறுவன தலைவர் யுவராஜிக்கும், அருண் என்பவருக்கும் தனித்தனியே மூன்று ஆயுட்கால தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.
தமிழகத்தையே உலுக்கிய சாதி ஆணவ கொலை வழக்கின் விவரங்களை சுருக்கமாக பார்ப்போம்.
பொறியியல் மாணவர் கோகுல்ராஜ் சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்தவர் . இவரும், நாமக்கல்லை சேர்ந்த இளம் பெண்ணும் நெருக்கமா பழகி வந்தனர்.
இதை அறிந்த அந்த பெண்ணின் உறவினர்கள் கோகுல்ராஜை மிரட்டினர்.
அப்படியிருக்க கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் 23-ந் தேதி கல்லூரிக்குச் செல்வதாக கூறிவிட்டு சென்ற கோகுல் ராஜ், இரவு வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.
உறவினர்கள் தேடிக்கொண்டிருந்த போது, நாமக்கல் அருகே உள்ள கிழக்கு தொட்டிபாளையம் ரெயில் தண்டவாளத்தில் தலை வேறு உடல் வேறாக கோகுல்ராஜின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அவரது நாக்கும் துண்டிக்கப்பட்டிருந்தது.
வழக்கு பதிவு செய்த போலிசார் விசாரித்த போது கோகுல்ராஜ் ஆணவக்கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இந்த கொலையில் சங்ககிரியை சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையின் நிறுவன தலைவர் யுவராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் 17 பேருக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த வழக்கில் வாட்ஸ்- அப் உள்ளிட்ட சமூக வலை தளங்கள் மூலம் யுவராஜ் தொடர்ந்து ஆடியோ மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வந்தார். அவரை போலீசார் தேடி வந்த நிலையில் 11.10.2015 அன்று நாமக்கல் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் சரண் அடைந்தார்.
சாதி ஆணவப் படுகொலையான இந்த சம்பவம் தமிழகத்தை உலுக்கியது. இந்த நிலையில் இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வந்த திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுப்ரியா, திடீரென தற்கொலை செய்து கொண்டார்.
அதன்பின் கோகுல்ராஜ் கொலை வழக்கு நாமக்கல் சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கில் மேலும் 16 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். பின்னர் நாமக்கல் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 2018 ஆகஸ்டு 30-ந் தேதி விசாரணையும் நடைபெற்றது. இந்த வழக்கில் மொத்தம் 116 சாட்சிகள் சேர்க்கப்பட்டிருந்தனர்.
நாமக்கல் நீதிமன்றத்தில் 72 சாட்சிகளிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்ட நிலையில் கோகுல் ராஜ் தாய் சித்ரா தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், நாமக்கல் நீதிமன்றத்திலிருந்து மதுரை மாவட்ட வன்கொடுமை வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்துக்கு வழக்கு விசாரணையை மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதனடிப்படையில், கடந்த 2019 மே 5-ந் தேதி முதல் 2 ஆண்டுகளாக வழக்கு விசாரணை மதுரை கோர்ட்டில் நடந்து வந்தது. அப்போது யுவராஜ் உள்ளிட்ட 15 பேர் நேரில் ஆஜர்படுத்தப்பட்டனர் இந்த வழக்கின் விசாரணை கடந்த பிப்ரவரி மாதம் முடிவடைந்த நிலையில் கடந்த 5-ந்தேதி நீதிபதி சம்பத்குமார் தீர்ப்பு சொன்னார்.
அதில், தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ், அவரது சகோதரர்கள் அருண், குமார் மற்றும் சதிஸ்குமார், ரகு, ரஞ்சித், செல்வராஜ், சந்திரசேகரன், பிரபு, கிரிதர் ஆகிய 10 பேர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டனர்.
தண்டனை இன்று அறிவிக்கப்படும் என நீதிபதி சம்பத் குமார் தெரிவித்து, வழக்கில் தொடர்புடைய சங்கர், அருள்செந்தில், செல்வகுமார் தங்கதுரை, சுரேஷ் ஆகிய 5 பேரை விடுதலை செய்து உத்தரவிட்டார்.
அப்படியிருக்க இன்று காலை யுவராஜ் உள்பட 10 பேரும் நீதிபதி சம்பத்குமார் முன்னிலையில் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது கோகுல்ராஜின் தாயார் சித்ரா ஆஜராகி, தனது மகன் அநியாயமாக கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் தொடர்புடைய அனைவருக்கும் தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என கூறினார்.
அரசு தரப்பு வக்கீல் மோகன் வாதாடுகையில், குற்றவாளிகள் 10 பேரும் இந்த கொலையில் ஈடுபட்டுள்ளது சாட்சியங்கள், ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே கொலையாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்றார்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் நேரடியாக ஈடுபட்டதற்கான சாட்சியங்கள் எதுவும் இல்லை. எனவே 10 பேரையும் விடுவிக்க வேண்டும் எனகுற்றவாளிகள் தரப்பு வக்கீல் தெரிவித்தார்.
வாதங்கள் அனைத்தையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி சம்பத்குமார் குற்றவாளிகளுக்கான தண்டனை விவரங்கள் இன்று பிற்பகலில் அறிவிக்கப்படும் என்றார்.
பிற்பகல் வழகிய தீர்ப்பில் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜூக்கு 3 ஆயுள் தண்டனையும், மற்றொரு முக்கிய குற்றவாளியான அருண் என்பவருக்கும் 3 ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
குமார், சதிஸ்குமார், ரகு, ரஞ்சித் செல்வராஜ் ஆகியோருக்கு 2 ஆயுள் தண்டனையும் மற்றொரு குற்றவாளியான சந்திரசேகரனுக்கு ஒரு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
பிரபு மற்றும் கிரிதர் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை, 5 வருட கடுங்காவல் தண்டனையும் மற்றும் தலா ரூ.5ஆயிரமும் அபராதம் விதிக்கப்பட்டது.
காதலினால் ஏற்பட்ட சாதி ஆணவக் கொலைக்கு சட்டம் தகுந்த தணடனை அளித்துள்ளது.