ஏடிஜிபி ஜெயராமன்:- சீருடையில் கைது! சைரன் வைத்த காரில் சிறுவ ன்கடத்தல்!

ம.பா.கெஜராஜ்,
சைரன் வைத்த காரில் சிறுவனைக் கடத்திய ஏடிஜிபி ஜெயராமன் சீறுடையில் இருந்த போதே கைது செய்யப்பட்டிருக்கிறார்.
ஆள்கடத்தல் வழக்கில் புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான பூவை ஜெகன்மூர்த்திக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்த உயர் நீதிமன்றம், இந்த வழக்கு விவகாரத்தில் ஏடிஜிபி ஜெயராமனை கைது செய்து விசாரிக்க உத்தரவிட்டது.
திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த இளைஞர், தேனியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து பதிவுத் திருமணம் செய்துள்ளார். பெண் வீட்டாருக்கு ஆதரவாக கூலிப்படையினர் மூலம் இளைஞரின் சகோதரரை புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏவுமான ஜெகன்மூர்த்தி கடத்தியதாக புகார் எழுந்தது.
காதல் விவகாரத்தில் இளைஞரை கடத்தியதாக கே.வி.குப்பம் எம்.எல்.ஏ பூவை ஜெகன்மூர்த்தி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் பெண்ணின் தந்தை உள்பட 5 பேர் கைதாகியுள்ளனர்.
அப்படியிருக்க, பூவை ஜெகன்மூர்த்தி முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், கடத்தல் வழக்குக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதால் தனக்கு முன்ஜாமீன் வழங்க உத்தரவிடக் கோ£யிருந்தார்.
இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க தலைமை நீதிபதியிடம் முறையீடு செய்யப்பட்டது. இதற்கு அனுமதி அளித்த தலைமை நீதிபதி, வழக்கை நீதிபதி வேல்முருகன் விசாரிப்பார் என தெரிவித்தார். இதையடுத்து நீதிபதி பி.வேல்முருகன் முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
பூவை ஜெகன்மூர்த்தி சார்பில் மூத்த வழக்கறிஞர் பிரபாகரன் ஆஜராகி வாதிட்டார். காவல் துறை தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் தாமோதரன் ஆஜராகி, இந்த சம்பவத்தில் காவல் துறை ஏடிஜிபி ஜெயராமனுக்கு தொடர்புள்ளதாகவும் பணம் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் வாதிட்டார்.
இதையடுத்து நீதிபதி, பூவை ஜெகன்மூர்த்தி மற்றும் ஏடிஜிபி ஜெயராமன் ஆகியோர் பிற்பகல் 2.30 மணிக்கு ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.
ஆனால், நீதிபதி குறிப்பிட்ட நேரத்தில் பூவை ஜெகன்மூர்த்தி ஆஜராகவில்லை. அதனால், வழக்கை 45 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி தெரிவித்தார். பிற்பகல் 3.30 மணிக்கு நீதிபதி முன்னால் பூவை ஜெகன்மூர்த்தி ஆஜரானார்.
அப்போது நீதிபதி, "நீங்கள் ஒரு சட்டப் பேரவை உறுப்பினர்தானே. உங்கள் சட்டப் பேரவை தொகுதி எதுவென்று நினைவிருக்கிறதா? அந்தத் தொகுதியில் நீங்கள் எத்தனை வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றீர்கள் என்று தெரியுமா? உங்களை மக்கள் பணிக்காகவே வாக்களித்து தேர்ந்தெடுத்தனர்.
கட்டப்பஞ்சாயத்து செய்யத் தேர்ந்தெடுக்கவில்லை. உங்களிடம் போலீஸார் விசாரணைக்கு வந்தால் அதற்கு ஒத்துழைக்க வேண்டியதுதானே. அதைவிடுத்து, நீங்கள் முன்ஜாமீன் கோருவதும், அதை அவசரமாக விசாரிக்க வலியுறுத்த நீதிபதி வீட்டை சுற்றிவருவதும் சரியான செயலா?
உங்களுடைய செயலால் நீதிபதி அஞ்சிவிடுவார் என நினைத்தீர்களா? ஒரு சட்டப்பேரவை உறுப்பினர் சாமானிய மக்களுக்கு முன் மாதிரியாக நடந்துகொள்ள வேண்டுமே தவிர இப்படி நடந்து கொள்ளக் கூடாது " என்று கடும் கண்டனங்களைப் பதிவு செய்தார்.
மேலும் இந்த வழக்கில், ஏடிஜிபி ஜெயராமனை கைது செய்து விசாரிக்கும்படியும், தேவைப்பட்டால் பூவை ஜெகன்மூர்த்தியை விசாரித்துக் கொள்ளலாம் என்றும் உத்தரவிட்டார்.
ஏடிஜிபி ஜெயராமன்,
தமிழக காவல் துறையில் 1996 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியாக இணைந்த ஜெயராம் நாமக்கல், தர்மபுரியில் எஸ்.பியாகவும், வேலூரில் டிஐஜி உள்பட பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார் தற்போது ஆயுதப்படை ஏடிஜிபியாக பணியாற்றி வரும் ஜெயராம் சீருடையில் கைது செய்யப்பட்டார்.
சிறுவன் கடத்தல் விவகாரத்தில் ஏடிஜிபி சிக்கியது எப்படி என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன. விஜயஸ்ரீ என்கிற பெண்ணை தனுஷ் என்பவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
விஜயஸ்ரீயின் தந்தை தேனியில் தொழிலதிபராக இருந்து வருகிறார். தனுஷுடன் விஜயஸ்ரீ வாழ்வது பிடிக்காமல் அவரை பிரித்து அழைத்துச் செல்ல முயற்சி செய்துள்ளார். இதற்காக எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்வதற்கு அவர் தயாராக இருந்துள்ளார். அப்போதுதான், போலீசில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற எஸ்.ஐ மகேஸ்வரியின் அறிமுகம் அவருக்கு கிடைத்துள்ளது.
மகேஸ்வரி மூலமாக ஏடிஜிபி ஜெயராம் உதவியை வனராஜா நாடியுள்ளார். அத்துடன், பூவை ஜெகன் மூர்த்தியையும் சந்தித்து பேசியுள்ளார். தனுஷின் வீட்டிற்கு சென்றபோது அங்கு தனுஷ் - விஜயாஸ்ரீ இல்லாததால் மொட்டை மாடியில் படுத்து உறங்கிய அவரின் சகோதரரான 17வது சிறுவனை கடத்திச் சென்றுள்ளனர். சைரன் வைத்த காரில் கடத்திச் சென்று அதே காரில் திரும்ப கொண்டு வந்துவிட்டுள்ளனர்.
சைரன் வைத்த காரை ஒட்டி வந்து சிறுவனை இறக்கி விட்டதும் ஒரு போலீஸ்காரர் என்பது தெரியவந்தது. இதனால்தான் ஏடிஜிபி கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளார். கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்ட ரூ.7 லட்சமும் காவல் துறையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அரசியல்வாதிகளுடன் கள்ளக்கூட்டு வைத்துக் கொண்டு பலர் இப்படித்தான் துறையின் பெயரை கெடுத்துவருகிறார்கள்.