ரவுடிகள் மோதல் பழிவாங்குதல் சாதி ரீதியான கொலைகள் குறைந்துள்ளன! டிஜிபி பேட்டி!

ரவுடிகள் மோதல் பழிவாங்குதல் சாதி ரீதியான கொலைகள் குறைந்துள்ளன! டிஜிபி பேட்டி!

ம.பா.கெஜராஜ்,

  தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: தமிழகத்தில் கொலை மற்றும் பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன. புள்ளி விவரங்களைப் பார்க்கும் போது, அது உண்மைக்கு புறம்பானவை என்று தெளிவாக தெரிவரும்.

   2019 முதல் 2024 வரையில் ரவுடிகள் மோதல், பழிவாங்கும், சாதி மற்றும் சமூகவாத அடிப்படையிலான கொலைகள் கணிசமாக குறைந்துள்ளன.

   2025ம் ஆண்டின் முதல் காலாண்டிலும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் குறைவான கொலைகள் பதிவாகியுள்ளன. புள்ளி விவரங்களின்படி, தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான குற்றங்கள் விகிதம் நாட்டில் மிகவும் குறைவாகவே உள்ளது.

  அதிக வழக்குகள் பதிவாகியிருக்கலாம், ஆனால் அது விழிப்புணர்வின் விளைவாகவே ஏற்பட்டுள்ளது. 2023ல் போக்சோ வழக்குகளில் நேரடி புகாரளிப்பு 88 சதவீதமாக இருந்தது. அது 2024ல் 76சதவீதமாக குறைந்துள்ளது. இதன் மூலம், மக்களிடையே விழிப்புணர்வு அதிகரித்திருப்பது தெளிவாகிறது.

  அண்ணா பல்கலைக்கழக வழக்கில், 5 மாதங்களில் தீர்ப்பு கிடைத்தது என்பது காவல் துறையின் விசாரணை மற்றும் வழக்கறிஞர் நடவடிக்கைகளுக்கு சான்றாகும்.

  அரக்கோணம் வழக்கு இன்னும் விசாரணையில் உள்ளது. இந்த வழக்குகளிலும், பிற வழக்குகளிலும் அரசியல் தலையீடு என்பது முற்றிலும் இல்லை.

  கடந்த 2 ஆண்டுகளாக (2022 ஆகஸ்ட் மாதம் முதல் இன்று வரை) 22 மாதங்களுக்கும் மேலாக எந்த காவல் மரணங்களும் பதிவாகவில்லை. இது ஒரு தேசிய சாதனையாகும். போதைப் பொருள் விநியோகத்தை கட்டுப்படுத்தும் பணிகளில் காவல்துறையும், அரசும் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகின்றன என்று சொன்னார்.