கஞ்சாவை ஒழித்தால் போதை மாத்திரைக்கு மாறுகிறார்கள்! டிஜிபி பேட்டி!

உ.சசிகுமார்,
கஞ்சாவை ஒழித்தால், போதை மாத்திரைக்கு மாறுகிறார்கள், இதனால் மருந்து கடைகள் கண்காணிக்கப்படுகிறது, போதை பொருள் வழக்குகளில் 100 பேர் கைது செய்யப்பட்டால், அவர்களில் 80 பேருக்கு, நீதிமன்றம் மூலம் தண்டனை பெற்று தருகிறோம் என தமிழக டிஜிபி சங்கர் ஜீவால் பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.
போதை பொருள் விழிப்புணர்வு தொடர்பாக காவல் துறையில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் குழு சார்பாக பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி வகுப்பு முகாம், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டிஜிபி சங்கர் ஜிவால் பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்தார். அந்த நிகழ்ச்சியில், போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு புத்தகத்தையும், விழிப்புணர்வு குறும்படத்தையும் அவர் வெளியிட்டார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அதில், தமிழகத்தில் போதை பொருளை ஒழிப்பது, போதை பொருள் பயன்பாடு மற்றும் தேவையை கட்டுப்படுத்துவது போன்ற 2 வகையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். கஞ்சா விற்பனைக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனால், கஞ்சா பயன்படுத்துபவர்கள், போதை மாத்திரைகளை பயன்படுத்த தொடங்கி விட்டனர். போதை மாத்திரைகள் விற்பனையையும் தடுக்க கடும் நடவடிக்கை எடுத்துள்ளோம். மருந்து கடைகள் மூலம் போதை மாத்திரைகள் விற்பனையைக் கண்டறிந்து 900-க்கும் மேற்பட்ட மருந்து கடைகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. போதை மாத்திரைகள் விற்பனை செய்த மருந்து கடைகளின் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது போதை பொருள் ஒழிப்பு, அதன் பயன்பாடுமற்றும் தேவையை கட்டுப்படுத்துவது போன்றவற்றில் தமிழகம் முதல் மாநிலமாக உள்ளது.
மத்திய போதை பொருள் தடுப்பு போலீஸார், வருவாய் புலனாய்வு அமைப்பு, சுங்கத் துறை, கடலோரகாவல்படை போன்ற மத்திய அமைப்பினருக்கும் போதை பொருளை ஒழிப்பதில் பெரும் பங்குஉள்ளது. அவர்களுக்கு, தொழில்நுட்ப ரீதியிலான புலனாய்வு தகவல்கள், அதிகம் கிடைக்கும். பெரிய அளவில் போதை பொருள் கடத்தப்படுவதை அவர்கள் கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பார்கள். தமிழக போலீஸாரை பொறுத்தவரை கடைசியாக தெருக்கள் வரை விற்கப்படும் போதை பொருளை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கிறோம்.
தமிழக போலீஸார் அதிகளவில் போதை பொருளை கைப்பற்றிநடவடிக்கை எடுத்து வருகிறார்கள். போதை பொருள் வழக்குகளில் 100 பேர் கைது செய்யப்பட்டால், அவர்களில் 80 பேருக்கு, நீதிமன்றம் மூலம் தண்டனை பெற்று தருகிறோம்.
நான் ஒரு அரசாங்க அதிகாரி. பொதுவான கருத்துகளை வெளியிடும் அரசியல்வாதிகளுக்கு நான் பதில் அளிக்க முடியாது. ஒரு நபர் பிடிபட்டதை வைத்து ஒட்டுமொத்த காவல்துறையையும் குறைசொல்வது தவறு. குறிப்பிட்ட அந்த நபரை நான் சென்னை காவல் ஆணையராக இருந்தபோது, சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்துள்ளேன்.
சிசிடிவி கேமராக்களை பொருத்துவதற்கு உதவி செய்த வங்கி உள்ளிட்ட அதிகாரிகளும், பல்வேறு நன்கொடையாளர்களும் அந்தநிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். அவர்களில் ஒருவர்தான் அந்த நபர். தற்போது அந்த நபா ¢நன்கொடையாக கொடுத்த 10 சிசிடிவி கேமராக்கள் திருப்பி கொடுக்கப்பட்டுள்ளன. அதற்குப் பதிலாக, 10 புதிய கேமராக்களை நாங்களே பொருத்தி உள்ளோம்.
அந்த நபரை கைது செய்வதற்கு மத்திய போதை பொருள் தடுப்பு போலீஸாரிடம் இருந்தோ, டெல்லி போலீஸாரிடமிருந்தோ தமிழக போலீஸாரிடம் எந்த உதவியும் கோரப்படவில்லை. டெல்லியில் 50 கிலோ போதை பொருள் (மூலப்பொருள்) தான் பறிமுதல் செய்யப்பட்டது.
அதன் மதிப்பு ஒரு கிலோரூ.4 ஆயிரம் முதல் ரூ.6 ஆயிரம் வரைதான் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அப்படியெனில் அதன் மதிப்பு என்ன என்பதை கணக்கிட்டு கொள்ளுங்கள். ஆனால், ரூ.2 ஆயிரம் கோடி என்று தவறான புள்ளிவிவரம் வெளியாகி உள்ளது.
குறிப்பிட்ட அந்த நபர் மீது சென்னை போலீஸில் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2013-ம் ஆண்டில் அவர் மீதுபதியப்பட்ட வழக்கில் விடுதலையாகி இருக்கிறார். போலி பாஸ்போர்ட் வழக்கில் 2021-ம் ஆண்டு அவர் கைது செய்யப்பட்டதற்கான தகவல்கள் எதுவும் இல்லை என்று சொன்னார்.