கஞ்சா கடத்திய 3 பேர் கைது:- 20 கிலோ கஞ்சா மற்றும் கார் பறிமுதல்!

ஜி.கே.சேகரன்,
வேலூர் மாவட்டம், காட்பாடி எல்லைக்குட்பட்ட பகுதியில் தமிழகத்தில் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலை தடுக்க காவல் துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் காட்பாடி அடுத்த கிறிஸ்டியான் பேட்டையில் உள்ள தமிழக - ஆந்திர மாநில எல்லை சோதனை சாவடியில் வேலூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு மற்றும் தனிப்படை காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது திருப்பதியில் இருந்து கடலூர் நோக்கி சென்ற பேருந்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் தளி பகுதியை சேர்ந்த பூவரசன் (25), நாமக்கல்லை சேர்ந்த வினோத் (26) ஆகியோர் பையில் மறைத்து வைத்து கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களிடம் இருந்து 12 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து அவர்களை கைது செய்தனர்.
இதே போல் வேலூர் சத்துவாச்சாரி காவல் துறையினர் கங்கை அம்மன் கோவில் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர் கஞ்சா கடத்தி வந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து கஞ்சா கடத்தி வந்த மயிலாடுதுறை மாவட்டம் ஆண்டிபட்டி கிராமத்தைச் சேர்ந்த ஈஸ்வரன் (60) என்பவரை கைது செய்து 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
அதே போல் வேலூரில் கஞ்சா விற்பனை செய்த பெண் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து கார் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
கைதானவர்கள்ளில் வள்ளி (49), இவர் பல நாட்களாக தலைமறைவாக இருந்து வந்த நிலையில், எஸ்.பி. தனிப்பிரிவு போலீசாரால் சுற்றி வளைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இவருடைய கூட்டாளி ராஜேந்திரன் (36), உடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் இவரிடம் இருந்த செல்போன் , கார், இரு சக்கர வாகனம், நான்கு கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
காவல் துறையினர், வள்ளி மற்றும் ராஜேந்திரனை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.