பிரதமர் மோதி வர்த்தக தொழில் அதிபர் முன்னிலையில் கைக்கட்டி நின்றது ஏன்?

பிரதமர் மோதி வர்த்தக தொழில் அதிபர் முன்னிலையில் கைக்கட்டி நின்றது ஏன்?

ம.பா.கெஜராஜ்,

 பிரதமர் மோதியை சந்திக்க வந்த பிரபல பங்கு வர்த்தகரும், தொழில் அதிபருமான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா முன்பு கைகட்டி நிற்கும் படம் வைரலாக மாறியது. கூடவே அதை நெட்டிசன்கள் மின்னல் வேகத்தில் பகிர்ந்து ட்ரோல் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இது பற்றின விவரம் வருமாறு,

 இந்திய பங்கு வர்த்தக முதலீட்டாளர்களில் ஒருவரான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா தமது மனைவி ரேகாவுடன்  பிரதமர் நரேந்திர மோதியை அக்டோபர் 5ஆம் தேதி சந்தித்தார். இந்த தம்பதி தன்னை சந்தித்துச் சென்றபோது எடுக்கப்பட்ட படம் ஒன்றை பிரதமர் நரேந்திர மோதி அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார்.

 "நிகரில்லாத ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவை சந்தித்ததில் மகிழ்ச்சி, இந்தியா பற்றிய கலகலப்பான, ஆழமான, மிக உற்சாகமான சந்திப்பாக அது இருந்தது என  புகைப்படத்துடன் பிரதமர் மோதி பகிர்ந்திருந்தார்.

 அதில்,பிரதமர் மோதி தமது இரு கைகளையும் கோர்த்தபடி நின்று கொண்டிருக்க  அவரது அருகே ரேகா நின்றிருக்க,அவர்களின் எதிரே ராகேஷ் ஜுன்ஜுன்வாலா நாற்காளியில் அமர்ந்திர்ந்து பந்தாவாக பேசிக் கொண்டிருந்ததைப் போலிருந்தது.

 அதை பார்க்கும்போது ஜுன்ஜுனாவாலா ஏதோ பேச, அதை பிரதமர் மோதி  கேட்பது போல  அந்த படம் அர்த்தம் சொன்னது.

 இந்நிலையில், சமூக ஊடகங்களில் மற்றொரு படம் வேகமாக பகிரப்பட்டது. அந்த படத்தில் மோதியின் வலது புறமாக ரேகாவும், இடதுபுறமாக ராகேஷ் ஜுன்ஜுன்வாலா நின்று கொண்டிருப்பதை போலவும் இருந்தது.

 இதைப் பார்த்த மோதியின் ஆதரவாளர்கள் சிலர், இந்த படத்தை அதிகமாக பகிர்வதில் ஆர்வம் காட்டினர். இது பிரதமரின் தாழ்மையான பண்பு என்று புகழ்ந்து தள்ளினர்.

 குறிப்பாக, பாஜகவைச் சேர்ந்த அகில இந்திய இளைஞர் அணி துணைத் தலைவர் ஏ.பி. முருகானந்தம், "சிறந்த ஆளுகை" என்று குறிப்பிட்டிருந்தார்.

  இது ஒரு பக்கம் இருக்க, இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர் பி.வி. ஸ்ரீனிவாஸ், "இந்தியாவின் மிகப்பெரிய அரசு சொத்துகளின் வர்த்தகர், இந்தியாவின் மிகப்பெரிய பங்கு வர்த்தகரை சந்தித்தார்," என்று தலைப்பிட்டு நக்கலடித்திருந்தார்.

 ட்விட்டர் பயனர் ஒருவர், "ஜுன்ஜுன்வாலா இத்தனை சக்தி வாய்ந்தவர் என்பது இப்போதுதான் தெரியும். இப்போது எனக்கு புரிகிறது என்று கருத்துச்சொன்னார்.

 சஞ்சய் நிரூபம், என்கிற காங்கிரஸ் பிரமுகர் கூறுகையில் "எதிர்காலத்தில் ஹர்ஷத் மேத்தாவாகவோ கேத்தன் பதக் ஆகவோ ஜுன்ஜுன்வாலா வரலாம் என்கிறார்.

 அதே போல் ஒரு பங்கு வர்த்தக முதலீட்டாளர் முன்பு இந்திய பிரதமர் கைகட்டி நிற்பதா என்று சிலர் கேள்வி எழுப்பியிருந்தனர்.

 அதற்கு பதிலளிக்கும் விதமாக பணம் பேசுகிறது என்று ஒரு ட்விட்டர் பயனர் பதிவிட்டிருந்தார்.

 பிரதமர் மோதி பெரும் தொழிலதிபர்களுக்கு சாதகமாக செயல்படுபவர் என பேசப்பட்டு வரும் நிலையில், அவர் இப்படி கைகட்டி பவ்வியமாக நின்று படத்துக்கு போஸ் கொடுக்கலாமா என்று பலர் அதிருப்தியை வெளியிட்டிருந்தனர்.

 ஆனால் இந்த இந்த படத்தின் உண்மைத்தன்மையோ வேறு ஆகும்.

 மேற்படி வைரலாகி வரும் இந்த படம் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா பிரதமரை சந்தித்தபோது எடுக்கப்பட்ட படம் என்பது உண்மைதான்.

 வர்த்தக ஜாம்பாவான் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா நிறுவனம் சார்பில் விடுக்கப்பட்ட வேண்டுகோளின்படியே இந்த சந்திப்புக்கு பிரதமர் அலுவலகம் நேரம் ஒதுக்கிக் கொடுத்தது.

 "ஜுன்ஜுன்வாலா கடந்த சில ஆண்டுகளாக உயர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

 அவர் கடந்த ஆண்டு கொரோனாவாலும் பாதிக்கப்பட்டு மீண்டுள்ளார். நீரிழிவு நோய் பின்னணியிலேயே அவர் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஷூவை அணிந்து சக்கரநாற்காளியில் வந்தார்.

  பிரதமரை ஜுன்ஜுன்வாலா சந்திக்க வந்தபோது, அவராகவே சக்கர நாற்காலியில் இருந்து எழுந்து பார்வையாளர் நாற்காலியில் அமர்ந்தார். அப்போது பிரதமர் அங்கு வந்தபோது அவர் அணிந்திருந்த ஷூவை பார்த்து விட்டு எழுந்து நிற்க வேண்டாம் என கூறி நலம் விசாரித்தார்.

   ஒரு சில நிமிடங்கள் நடந்த உரையாடலுக்குப் பிறகு மூன்று பேரும் அமர்ந்து பேசினர். பின்னர் அவர்கள் புகைப்படத்துக்கு எழுந்து நின்று காட்சி கொடுத்தனர். அந்த படத்தைத்தான் பிரதமர் தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார்," என்பதே உண்மை.

   மேலும் அதே தேதியில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை தமது அலுவலக பிரதிநிதிகளுடன் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா சந்தித்த புகைப்படத்தை நிர்மலா சீதாராமனின் அலுவலகம் அதன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

  அதில் வித்தியாசமான ஷூவை அணிந்தபடி சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறு ஜுன்ஜுன்வாலா நிர்மலாவிடம் பேசுவது போன்ற காட்சி இருந்தது.

  இதன் மூலம் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா மருத்துவ காரணங்களுக்காக சக்கர நாற்காலியில் கடந்த சில நாட்களாக அமர்ந்து தமது அலுவலக நிகழ்வுகளை மேற்கொண்டு வருவதும், பிரதமர் அலுவலகத்திலும் அவர் சக்கர நாற்காலியிலேயே அமர்ந்தபடி பேசியதும் யதார்த்தமாக நடந்த நிகழ்வுகள் ஆகும்.

  இந்நிலையில் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா கடந்த மாதம் தமது குடும்பத்தின் தனியார் நிகழ்ச்சியொன்றில் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி இந்தி பாடல் ஒன்றுக்கு நடனமாடும் காணொளியும் சமூக ஊடகங்களில் காண முடிகிறது. இதன் மூலம் அவர் சக்கர நாற்காலியிலேயே அன்றாட நிகழ்வுகளில் பங்கெடுப்பதும் உறுதியாகியிருக்கிறது.

ஆக மேற்படி போட்டோவுக்கான காரணம் என்னவென்று வாசகர்களுக்கு புரிந்திருக்கும் என்று "லைவ்லுக்" நம்புகிறது.