தொடர் பெட்ரோல் பாம் வீச்சு:- கோவைக்கு புதிய உளவு அதிகாரி! டிஜிபி நியமித்தார்!!

தொடர் பெட்ரோல் பாம் வீச்சு:- கோவைக்கு புதிய உளவு அதிகாரி! டிஜிபி நியமித்தார்!!

  ஜான்.மரிய ஜோசப்,

  கோவை பாஜக அலுவலகத்தில்  நடைபெற்ற பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தை அடுத்து டிஜிபி சைலேந்திர பாபு கோவை மாநகர உளவுத்துறை உதவி ஆணையாளராக சிறப்பு புலனாய்வுப் பிரிவு உதவி ஆணையாளர் பார்த்திபனை நியமித்தார். 

    தேசிய புலனாய்வு முகமை தமிழகம் உள்ளிட்ட 15 மாநிலங்களில் நேற்று பாப்புலர் பிரண்ட் ஆஃப் அமைப்பின் அலுவலகங்கள், நிர்வாகிகள் வீடுகளில் சோதனை நடத்தியது. அதன் பேரில் தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் கைதாகியிருக்கும் நிலையில், கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் ஆர்எஸ்எஸ், பாஜக, இந்து முன்னணி அலுவலகங்கள், நிர்வாகிகளின் வீடுகளில் பெட்ரோல் வெடிகுண்டு வீச்சு சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்தன.

  அதனை அடுத்து கோவை, சித்தாபுதூர் பகுதியில் உள்ள பா.ஜ.க அலுவலகம் மீது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசிச் தப்பினர்.

   ஒப்பணக்கார வீதியில் உள்ள துணிக்கடைமீதும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. காலையில் பொள்ளாச்சி பாஜக பிரமுகர் சிவக்குமார் என்பவர் வீட்டில், மர்ம நபர்கள் பிளாஸ்டிக் கவரில் டீசல் நிரப்பி வீசினர். சென்னை தாம்பரம் அருகே சிட்லபாக்கம் ராஜராஜேஸ்வரி நகரில் ஆர்எஸ்எஸ் அமைப்பு தலைவர் சீதாராமன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது.

  இந்தச் தொடர் சம்பவங்கள் தொடர்பான சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், காலியாக இருந்தகோவை மாநகர உளவுத் துறை உதவி ஆணையாளர் பணிக்கு, சிறப்பு புலனாய்வுப் பிரிவு உதவி ஆணையாளர் பார்த்திபன் நியமிக்கப்பட்டுள்ளார்.

   அதே போல் சிங்காநல்லூர் சரக உதவி ஆணையாளராக பணியாற்றும் அருணை, சிறப்பு புலனாய்வுப் பிரிவு உதவி ஆணையாளராக நியமித்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.