கஞ்சா விற்க பயன்படும் சிறுவர்கள்! 3 பேர் மீது வழக்கு!

ஜி.சாந்தகுமார்,
சமீப காலமாக சமூகத்தில் நடைபெறும் குற்றச்செயல்களுக்கு சிறுவர்கள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்த்துக்களை சப்ளை செய்வதற்காக அவர்களை பயன்படுத்துவது கொடுமையிலும் கொடுமையாக உள்ளது.
இந்நிலையில், சென்னையில் கஞ்சா விற்பனை செய்த 3 சிறுவர்கள் போலிசிடம் பிடிபட்டார்கள்.
இது பற்றின விவரம் வருமாறு,
போதை பொருட்களை தடுக்க சென்னை போலிஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அப்படியிருக்க திருவொற்றியூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட எண்ணூர் எக்ஸ்பிரஸ் சாலையில் மோட்டார் சைக்கிளில் கடத்திச் சென்று கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட குணசேகர் கைது செய்யப்பட்டார். இவரிடமிருந்து 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் தரமணி பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட திரிபுராவை சேர்ந்த பிலால்மியா என்பவர் பிடிப்பட்டார். இவரிடமிருந்து 2 கிலோ கஞ்சா மற்றும் ரூ.3650 ரொக்க பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. வில்லிவாக்கம் அகத்தியர் நகர் பூங்கா அருகில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஹரிகரன், அஜய் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
மடிப்பாக்கம் ஐயப்பா நகர் பகுதியில் போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகளை விற்பனை செய்த மகாவீர் என்ற வாலிபரும் கைது செய்யப்பட்டார்.
இவரிடமிருந்து 105 மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்களை தவிர கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட குற்றத்துக்காக 3 சிறுவர்களும் கைது செய்யப்பட்டு, பின்னர் போலீசார் அறிவுரை சொல்லி சிறுவர் சீர்திருத்த காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர்.