திமுக துணை பொதுச்செயலாளர் யார்? கனிமொழி எம்பியா? புதுக்கோட்டை விஜயாவா??

திமுக துணை பொதுச்செயலாளர் யார்? கனிமொழி எம்பியா? புதுக்கோட்டை விஜயாவா??

ம.பா.கெஜராஜ்,

  தி.மு.க. துணை பொதுச்செயலாளராக இருந்த சுப்புலட்சுமி ஜெகதீசன் கட்சியில் ஓரங்கட்டி வைக்கப்பட்டதால், அவர்ல் அதிருப்தி அடைந்து தனது பதவியை ராஜினாமா செய்தார்.  அவரது ராஜினாமா கடிதத்தை கடந்த ஆகஸ்டு மாதம் 29-ந் தேதியே  தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு அவர் அனுப்பி வைத்திருந்தார்.

  ஆனால் அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்டதாகவோ, ஏற்கவில்லை என்றோ தலையிலிருந்து எந்த அறிக்கையும் வெளியாகவில்லை. அப்படியிருக்க சுப்புலட்சுமி ஜெகதீசன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாகவும், கட்சியில் இருந்து விலகுவதாகவும் தெரிவித்தார்.

 ஆகவே தி.மு.க. துணை பொதுச்செயலாளர் பதவி காலியானது. அப்படியிருக்க அடுத்து அந்த பதவி யாருக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பதவி கட்சி தலைவரால் நியமிக்கப்படும் பதவி என்பதால் மு.க.ஸ்டாலின் யாரை நியமிப்பார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

 இந்த பதவியை பெற பலபேர் முயற்சி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

 இடையே தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி.க்கு துணை பொதுச்செயலாளர் பதவி கிடைக்கும் என்று பரபரப்பாக பேசப்படுகிறது.

 எல்லோரிடமும் சகஜமாக பழகக்கூடிய திறமை கனிமொழி எம்.பி.யிடம் உள்ளதால் அவருக்கு இந்த பதவி கிடைக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

 அதே நேரத்தில் கனிமொழி எம்.பி. இந்த பதவியை ஏற்க மறுத்தால் புதுக்கோட்டை விஜயா பெயர் பரிசீலிக்கப்படலாம் என பேசப்படுகிறது.

 மாநில கொள்கை பரப்பு இணை செயலாளராகவும் தலைமை கழக பேச்சாளராகவும் உள்ள புதுக்கோட்டை விஜயா ஆரம்ப காலத்தில் இருந்து தி.மு.க.வில் உள்ளார். கட்சியிலும் மூத்த நிர்வாகியாக உள்ளார். எனவே இவருக்கு பதவி கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது.

 தி.மு.க.வின் உள்கட்சி தேர்தல் இப்போது நடைபெற்று வருவதால் அடுத்த மாதம் பொதுக்குழு கூட உள்ளது. அந்த கூட்டத்தில் தி.மு.க. தலைவராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதும் அமைப்பு ரீதியாக நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள். அதன் பின்னர் தி.மு.க. துணை பொதுச்செயலாளராக யாரை நியமிப்பார்கள் என்ற விவரம் தெரிய வரலாம்.