நாட் ரீச்சபிள் ஆன ஓ.பி.எஸ்.ஸின் கடிதம்! பொதுக்குழுவுக்கு செல்வாரா? மாட்டாரா?

ம.பா.கெஜராஜ்,
அ.தி.மு.க.வின் பொதுக்குழுக் கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நாளை காலை நடக்கிறது. ஆகவே அந்த பகுதியில், ஏகப்பட்ட போலிசார் குவிக்கப்பட்டிருக்கிறார்கள்.
அலங்கார வளைவுகள் மற்றும் முகப்பு தோற்றத்தை உருவாக்கும் பணிகளும் மும்முரமாக நடந்து வருகிறது. ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளராக உள்ளதால் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி இணைந்து இருக்கும் படங்களும் பேனர்களில் அச்சிடப்பட்டுள்ளன.
இந்நிலையில் பொதுக்குழுவுக்கு ஓ.பி.எஸ் வரமாட்டார் என்பது தெளிவாகியுள்ளது. ஏனெனில், அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்துக்கு செல்ல வேண்டாம் என பொதுக்குழு உறுப்பினர்கள் 2,640 பேருக்கும் தனித்தனியாக கையெழுத்திட்டு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் அனுப்பியிருக்கிறார்.
இதில் ஒற்றை தலைமை பற்றிய தீர்மானம் கொண்டுவந்து எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளதை தடுக்கும் நடவடிக்கைகயாக ஓ.பன்னீர்செல்வம் இப்படி கடிதம் எழுதியுள்ளார்.
அதில் பொதுக்குழு கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் யாரும் கலந்துகொள்ள வேண்டாம் என்று கூறி உள்ளார்.
பொதுக்குழு உறுப்பினர்களில் 100 பேர் முதல் 150 பேர் மட்டுமே ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக உள்ளனர். எனவே மற்றவர்கள் அனைவரும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உள்ளனர். அவர்களில் பலர் தற்போது எடப்பாடி பழனிசாமி வீட்டிலேயே இருக்கிறார்கள். மற்றவர்கள் வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் ஓ.பன்னீர் செல்வம், பொதுக்குழு உறுப்பினர்களுக்கு கடிதம் எழுதி உள்ளது நாட் ரீச்சபில் என்று தான் சொல்ல வேண்டும்.
இந்நிலையில் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்குகள், சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தன. அப்போது, அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்களின் நகல் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு விட்டதாக ஓபிஎஸ் தரப்பு தெரிவித்தது. கட்சி விதிகளுக்கு முரணாக செயல்பட மாட்டோம் என ஓபிஎஸ் தரப்பு பதில் அளித்தனர்.
பொதுக்குழுவை நடத்த அனுமதிக்கக் கோரி ஈபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் வாதாடினார். பொதுக்குழுவிற்கான நோட்டீஸ் ஜூன் 2ஆம் தேதியே கொடுக்கப்பட்டுள்ளது, இதுவரை பொதுக்குழு, செயற்குழு அஜெண்டாக்கள் வெளியிடப்பட்டது இல்லை, பொதுக்குழுவுக்கு விதிகளை திருத்தம் செய்ய அதிகாரம் உள்ளது என தெரிவிக்கப்பட்டது.
அப்படியிருக்க பொதுக்குழு கூட்டத்திற்கு தடை கோரிய வழக்கு விசாரணை முடிந்ததும் ஓ.பி.எஸ். தரப்பிலிருந்து முக்கிய அறிவிப்பு வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.