போலி செய்திக்கு முக்கியத்துவமா? ஊடகங்களை சுளுக்கெடுத்த மம்தா!

ம.பா.கெஜராஜ்,
மேற்கு வங்க மாநிலம் தொடர்பாக அவதூறு பரப்பும் ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஏன் இப்படி அவர் பொங்கினார் என்பதைப்பற்றி பார்ப்போம்.
மேற்கு வங்காள மாநிலத்தில் ஹவுரா-புது ஜல்பைகுரி இடையிலான வந்தே பாரத் அதிவேக ரெயிலை பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் 30ம் தேதி தொடங்கிவைத்தார்.
இதற்கிடையே, நேற்று முன்தினம் மாலை அந்த ரெயில் புது ஜல்பைகுரியில் இருந்து ஹவுரா நோக்கிச் சென்றது. மால்டா மாவட்டத்தின் குமார்கஞ்ச் ரெயில் நிலையம் அருகில் சென்றபோது அடையாளம் தெரியாத விஷமிகள் சிலர் வந்தே பாரத் ரெயில் மீது கல் வீசி தாக்கினர்.
அதில் ஒரு பெட்டியின் கண்ணாடி கதவில் விரிசல் ஏற்பட்டது. ஆனால் ரெயில் தொடர்ந்து இயக்கப்பட்டு, அடுத்து வந்த வழக்கமான நிறுத்தமான மால்டா ரெயில் நிலையத்தில்தான் நிறுத்தப்பட்டது.
மேற்கு வங்கத்தில் இந்த கல்வீச்சு நடந்ததாக ஊடகங்கள் மம்தாவை செய்தி வடிவில் பிய்த்துக் குதறினார்கள்.
இந்நிலையில், அண்டை மாநிலமான பீகாரில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மீது கற்கள் வீசப்பட்டதாகவும், தனது மாநிலம் அல்ல என்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேலும், தனது மாநிலத்தை அவதூறு செய்த ஊடகங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மம்தா பானர்ஜி கர்ஜித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:- மூன்று நாட்களாக நிறைய டி.வி. சேனல்கள் வங்காளத்தை அவதூறாகப் பேசி வருவதை நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். போலிச் செய்திகளைக் காட்டி, பொய்யான தகவலைப் பரப்பி வங்காளத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.
சட்டம் அதன் கடமையை செய்யும். இது வங்காளத்தில் நடக்கவில்லை. பீகாரில் நடந்துள்ளது.வந்தே பாரத் ரெயிலில் சிறப்பு எதுவும் இல்லை. இது ஒரு புதிய என்ஜின் பொருத்தி புதுப்பிக்கப்பட்ட பழைய ரெயில் என்று கோபமாக சொல்லியிருக்கிறார்.