பாரதத்தின் 15-வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு பதவியேற்றார்! பிரதமர் பங்கேற்பு!

ம.பா.கெஜராஜ்,
பாரத திருநாட்டின் 15-வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு பதவியேற்றார். இதற்கான ராஜ விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி உள்ளிட்ட பல தலைவர்கள் பங்கேற்றனர்.
ஜனாதிபதி தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு 64 சதவீத வாக்குகளை பெற்று அமோக வெற்றி பெற்றார். இதையடுத்து புதிய ஜனாதிபதி பதவியேற்பு விழா இன்று பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்றது. இந்த விழாவுக்காக பாராளுமன்ற மைய மண்டபம் விழாக்கோலம் பூண்டது.
பதவியேற்புக்கு முன்னதாக, மகாத்மா காந்தி நினைவிடத்தில் திரவுபதி முர்மு மரியாதை செலுத்தினார். அதன்பின்னர் ஜனாதிபதி மாளிகைக்கு சென்றார். ஜனாதிபதி பதவியை நிறைவு செய்துள்ள ராம்நாத் கோவிந்த், திரவுபதி முர்முவை வரவேற்றார். அதன் பின்னர் திரவுபதி முர்முவும், ராம்நாத் கோவிந்தும் ஜனாதிபதி மாளிகையில் இருந்து பாராளுமன்றத்துக்கு வந்தனர்.
பாராளுமன்ற மைய மண்டபத்தில் காலை 10 மணி அளவில் விழா தொடங்கியது. நாட்டின் 15-வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அதனைத் தொடர்ந்து திரவுபதி முர்மு பதவி ஏற்பு உரை ஆற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது, நம்பிக்கைக்கு அடையாளமாக விளங்கும் பாராளுமன்றத்தில் இருந்து மகக்ளை வணங்குகிறேன். கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையின் வெளிப்பாடே வாக்குகள். என்னுடைய புதிய பொறுப்புகளை நிறைவேற்ற உங்களின் அன்பும், ஆதரவும் எப்போதும் தேவை. ஒரு சாதாரண பழங்குடியின கிராமத்தில் இருந்துதான் என்னுடைய வாழக்கைப் பயணத்தை தொடங்கினேன்.
நான் வந்த பின்னணியில் இருந்து ஆரம்பநிலை கல்வியை பெறுவது என்பது மிகப்பெரும் கனவாக இருந்தது. ஜனாதிபதி பதவியை அடைந்தது என்பது என்னுடைய தனிப்பட்ட சாதனை அல்ல. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு ஏழையின் சாதனை ஆகும். சாமானிய ஏழை மக்களின் கனவும் நிறைவேறும் என்பதற்கு நான் உதாரணமாக திகழ்கிறேன். வளர்ச்சிக்கான பாதையில் நாடு செல்வதற்கு வழிகாட்டியாக இருப்பேன்.
இளைஞர்கள் மற்றும் பெண்கள் நலனுக்காக பணியாற்றுவேன். கொரோனாவுக்கு எதிரான போரில் மக்கள் காட்டிய ஒத்துழைப்பு, துணிச்சல் வலிமையின் அடையாளம் ஆகும். ஒரு சில நாட்களுக்கு முன்புதான் இந்தியா 200 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்துள்ளது. இளைஞர்களின் தன்னம்பிக்கை மற்றும் ஆர்வத்தை நான் மிக நெருக்கமாக இருந்து உணர்ந்துள்ளேன். இவ்வாறு அவர் உரையாற்றினார். ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றி முடிந்ததும், அவர் ஜனாதிபதி மாளிகைக்கு புறப்பட்டார். அவருக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
முன்னதாக அவர் காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு பின்னர் புறப்பட்டார்.