பிரதமர் பிறந்த தினத்தை அலங்கரித்த புலிகள்!

ஜார்ஜ்.ரவி,
ஆண்டு தோறும் தம்முடைய பிறந்த நாளை குஜராத்தில் தன் தாயாருடனோ அல்லது எல்லையில் ராணுவ வீரர்களுடனோ, சில சமயம் குழந்தைகளுடனோ தன் பிறந்தநாளைக் கொண்டாடும் இந்திய பிரதமர் நரேந்திர மோதி, இந்த ஆண்டு இந்தியாவுக்கு சிவிங்கிப் புலிகளைக் வரவழைத்து அவரது, பிறந்த தினத்தை கொண்டாடினார்.
மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசியப் பூங்காவின் மையத்தில் உள்ள பகுதி ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதியாக மாறியுள்ளது. அதற்கா அங்கு ஒரு ஹெலிகாப்டர் இறங்கு தளமும் உருவாக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த ஹெலிபேடில் இருந்து 200 மீட்டர் தொலைவில், 150 மீட்டர் சுற்றளவுள்ள தனிமைப்படுத்தப்பட்ட மண்டலம் உருவாக்கப்பட்டுள்ளது. இன்று (செப்டம்பர் 17) நமீபியாவிலிருந்து எட்டு சிவிங்கிப் புலிகள் இந்த கட்டுப்பாட்டு பகுதிக்கு கொண்டுவரப்பட்டன.
பிரதமர் நரேந்திர மோதி இந்த ஹெலிபேடில் தரையிறங்குவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு இந்த சிவிங்கிப் புலிகள் இங்கு வந்துசேர்ந்தன. பிரதமர் இரும்பு லீவரை இழுத்து, அவற்றில் இருந்து மூன்று சிவிங்கிப் புலிகள் தனிமைப்படுத்தப்பட்ட மண்டலத்திற்குள் விடுவிவித்தார்.
1.15 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் உள்ள குனோ தேசிய பூங்காவில் விடுவிக்கப்படுவதற்கு முன்பாக, இந்த ஐந்து முதல் ஆறு வயதுள்ள சிவிங்கிப் புலிகள், ஒரு மாதத்திற்கு தனிமைப்படுத்தப்பட்ட மண்டலத்தில் வைக்கப்படும். இங்குள்ள காலநிலைக்கு அவை பழகுவதற்கு இது உதவிடும்.
"இந்த ஒரு மாதத்தில் சிவிங்கிப்புலிகள் அந்தந்த மண்டலங்களுக்குள்ளேயே இருக்கும். அவற்றால் வேட்டையாட முடியாது. எனவே இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை அவைகளுக்கு எருமை இறைச்சி அளிக்கப்படும். ஒரு மாதத்திற்குப் பிறகு சிவிங்கிப் புலிகள் 500 ஹெக்டேர் பரப்பளவில் உள்ள 'கே' மண்டலத்திற்கு அனுப்பப்படும். இதனால் அவை ஒன்றுடன் ஒன்று நெருக்கமாக வாழலாம். தேவைப்பட்டால் அவற்றை பிரிக்கவும் முடியும்," என்று மத்தியப் பிரதேச வனத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
2014ஆம் ஆண்டு பிரதமராக பதவியேற்றதில் இருந்து நரேந்திர மோதி தனது பிறந்த நாளை (செப்டம்பர் 17) குஜராத்தில் கொண்டாடுவது வழக்கமாக உள்ளது.
தனது பிறந்த நாளன்று அவர் பெரும்பாலும் தனது தாயாரைச் சந்திப்பார். கடந்த ஆண்டுகளில் இதே நாளில் அவர் சர்தார் சரோவர் அணை போன்ற முக்கியமான இடங்களைப் பார்வையிட்டுள்ளார். 1965இல் நடந்த இந்திய-பாகிஸ்தான் போர் குறித்த போர்க் கண்காட்சியை திறந்துவைத்துள்ளார். தூய்மை தினத்தை துவக்கி வைத்துள்ளார் அல்லது பள்ளி மாணவர்களுடன் தனது பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளார்.
ஆனால் இந்த முறை இந்தியாவிற்கு சிவிங்கிப் புலிகளை வரவழைத்து கொண்டாடியிருக்கிறார்.