சசிகலா - ஓ.பி.எஸ். விரைவில் சந்திப்பு:- தூது சென்ற தோழி!

ம,பா,கெஜராஜ்,
ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மரணமடைந்த தினம் செப்டம்பர் 1-ந் வருவதால் அன்று சொந்த வீட்டில் பூஜைகள் நடத்த அவரது குடும்பத்தினர் திட்டமிட்டு உள்ளனர்.
ஆகவே ஓ.பன்னீர்செல்வம் தனது சொந்த ஊரான பெரிய குளத்துக்கு சென்று தங்கி உள்ளார். அங்கு அவர் தனது ஆதரவாளர்களை அழைத்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளார். இதற்கிடையே சசிகலாவுடனும், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனுடனும் இணைந்து செயல்பட ஓ.பன்னீர்செல்வம் முடிவு செய்து இருக்கிறார். அவர்களை மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்க்க வேண்டும், சசிகலாவும், டி.டி.வி. தினகரன் இணையும் பட்சத்தில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களை முழுமையாக ஓரம் கட்ட முடியும் என்று ஸ்கெட்ச் போடுகிறார்.
ஆகவே சசிகலாவையும், டி.டி.வி. தினகரனையும் விரைவில் சந்தித்து பேச ஓ.பன்னீர்செல்வம் திட்டமிட்டு உள்ளார். இதை உறுதிப்படுத்தும் வகையில் நேற்று ஓ.பன்னீர்செல்வத்தை சசிகலா அனுப்பிய தூதர் ஒருவர் சந்தித்து பேசினார். சசிகலாவின் ஆதரவாளரும், மகளிர் அணியின் முக்கிய பிரமுகருமான அந்த பெண் ஓ.பன்னீர்செல்வத்துடன் சசிகலாவின் வியூகங்கள் குறித்து தெரிவித்துள்ளாராம்.
குறிப்பாக அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு எப்படி வந்தாலும் அதற்கு ஏற்றபடி செயல்பட வேண்டும் என்று சசிகலா தூதருடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசித்ததாக கூறப்படுகிறது. பொதுக்குழு தீர்ப்பு சாதகமாக வரும் பட்சத்தில் அதிரடியாக சசிகலாவை சந்தித்து அடுத்தகட்ட நடவடிக்கையை அறிவிக்கவும் இந்த சந்திப்பின் போது விவாதிக்கப்பட்டது.
இந்நிலையில், சசிகலாவை ஓ.பன்னீர்செல்வம் விரைவில் சந்திப்பார் என்று தெரிகிறது.
அப்போது அ.தி.மு.க.வை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர என்னென்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் அவர்கள் ஆலோசிக்க உள்ளனர்.
குறிப்பாக அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றுப் பயணம் செய்ய ஓ.பன்னீர்செல்வமும், சசிகலாவும் விரும்புவதாகவும், தேவைப்படும் பட்சத்தில் அவர்கள் இருவரும் இணைந்து மாவட்ட வாரியாக சென்று ஆதரவு திரட்டவும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
இதனால் ஓ.பன்னீர்செல்வத்துடன் சசிகலா தூதர் சந்தித்தது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. பெரியகுளத்தில் தங்கி இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் அடுத்தடுத்து பூஜைகள் செய்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
கேரளாவில் இருந்து அழைத்து வரப்பட்டுள்ள நம்பூதிரிகள் மிகப்பெரிய யாகங்களை நடத்தி வருவதாக சொல்கிறார்கள். அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இந்த சிறப்பு பூஜைகளாம்.
சசிகலாவுடன் கை கோர்க்க ஓ.பன்னீர்செல்வம் தீவிரமாகி விட்டதால் அவர்களது கை ஓங்கும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது. இதை தடுப்பதற்காக எடப்பாடி பழனிசாமி தரப்பினரும் அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கு தயாராகி வருகிறார்கள். அவர்களும் அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கு தீர்ப்பைத்தான் ஆர்வமாக எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறார்கள்.
தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வந்தால் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப் பயணத்தை தொடங்குவார் என்று கூறப்படுகிறது. இல்லையெனில் டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்ய வேண்டியதுதான் தலையாய கடமையாக இருக்கும்.