தி.மு.க. - எம்.எல்.ஏ. பா.ஜ.,வில் சேருகிறாரா?!!

ம.பா.கெஜராஜ்,
திமுக எம்.எல்.ஏ. வான கடலூர் அய்யப்பன் பா.ஜ.,வில் சேரவுள்ளார் என்பது தான் தற்போதைய ஹாட் டாப்பிக்காக உள்ளது.
ஏனெனில் தி.மு.க.வில் இருந்து 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ள கடலூர் எம்.எல்.ஏ. அய்யப்பன் பா.ஜ.வில் இணைவது குறித்து ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய தகவல் வெளியாகி இருக்கிறது.
கடலூர் தொகுதி எம்.எல்.ஏ. அய்யப்பனுக்கும் கடலூர் கிழக்கு மாவட்ட செயலரும் வேளாண் துறை அமைச்சருமான பன்னீர்செல்வத்திற்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம் தான்.
இந்நிலையில் நகர்புற உள்ளாட்சிகளில், கடலூர் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கிய நகராட்சி தலைவர் உள்ளிட்ட சில பதவிகளை தி.மு.க.வினர் கைப்பற்றினர். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் புகார் தெரிவித்தார். அக்கட்சிக்கு ஒதுக்கிய இடங்களில் வெற்றி பெற்ற தி.மு.க.வினர் ராஜினாமா செய்ய ஸ்டாலின் உத்தரவிட்டார். ஆனால் அய்யப்பன் ஆதரவாளர்கள் ராஜினாமா செய்யவில்லை.
கடலூர் மாநகராட்சி மேயராக தன் ஆதரவாளரை கொண்டு வருவதற்காக கவுன்சிலர்களை கடத்தி தன் கட்டுப்பாட்டில் அய்யப்பன் வைத்திருந்தார். அவரது முயற்சியை பன்னீர்செல்வம் முறியடித்து தன் ஆதரவாளரை மேயராக தேர்வு செய்ய வைத்தார்.
இது தொடர்பான புகார் முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு சென்றதும் கட்சி கட்டுப்பாட்டை மீறிய அய்யப்பன் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
அதன் பின்னர் அவர் ஓரங்கட்டப்பட்டே வைக்கப்பட்டுள்ளார்.
அப்படியிருக்க தன் ஆதரவு கவுன்சிலர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளை அழைத்து அய்யப்பன் ஆலோசனை நடத்தினார். அப்போது பா.ஜ.வில் சேருவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அப்படி நடந்த ஆலோசனைக்கூட்டத்தில், பா.ஜ.வில் அதிகாரப்பூர்வமாக சேர்ந்தால் எம்.எல்.ஏ. பதவியை இழக்க நேரிடும் என்பதால் பா.ஜ. அனுதாபியாக இருந்து விட்டு சட்டசபையில் அதிருப்தி தி.மு.க. எம்.எல்.ஏ.வாக செயல்படலாம் என ஆதரவாளர்கள் கூறினார்களாம்
இந்நிலையில் அதிருப்தியில் உள்ள அய்யப்பனை தமிழக பா.ஜ. தரப்பிலிருந்தும் அணுகியுள்ளதாக கூறப்படுவதை அறிந்த தி.மு.க. தலைமை அய்யப்பனிடம் மன்னிப்பு கடிதம் கேட்டு வருகிறதாம்.
அதனால் மனுஷன் குழம்பிப்போய் உள்ளாராம்.