நடிகர் சிவாஜி சொத்தில் பங்கு விவகாரம்:- சகோதரிகள் தொடர்ந்த வழக்கை நீதிமன்றம் தள்ளிவைத்தது!

க.முகில்,
நடிகர் சிவாஜி சொத்தில் பங்கு கேட்டு, மகள்கள் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளது.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகனான நடிகர் பிரபுவின் சகோதரிகள் சாந்தி, ராஜ்வி ஆகிய இருவரும், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:எங்கள் தந்தை சிவாஜி சுயமாக சம்பாதித்த, 270 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை, சகோதரர்கள் ராம்குமார், பிரபு ஆகியோர் முறையாக நிர்வகிக்கவில்லை. பல சொத்துக்களை விற்று, எங்களை மோசடி செய்து விட்டனர். எங்களுக்கான பங்கை வழங்கவில்லை.
தந்தையின் சொத்துகளில் எங்களுக்குரிய பங்கை மீட்டு தர வேண்டும். மேலும், எங்கள் இருவரையும் ஏமாற்றி விற்ற சொத்துகளை செல்லாது என அறிவிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன், நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, பிரபு சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.ஆர்.ராமன் ஆஜரானார்.'சாந்தி தியேட்டர் கட்டிடம் தொடர்பான ஒப்பந்தங்கள் பல ஆண்டுகளுக்கு முன் போடப்பட்டது. அது மனுதாரர்கள் இருவருக்கும் நன்றாக தெரியும். அப்படி இருந்தும், இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளனர்' என்று வாதிட்டார்.
சாந்தி தியேட்டர் கட்டுமான ஒப்பந்தம் செய்த தனியார் நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், 'குடும்பத்தில் உள்ள பிரச்னையில் வழக்கை தொடர்ந்துள்ளனர். இதனால் எங்களுக்குத்தான் பாதிப்பு'என வாதிட்டார். தொடர்ந்து மனுதாரர்கள் தரப்பில், வழக்கை தள்ளி வைக்க கோரியதால், விசாரணையை வரும் 19ம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.