தமிழ்நாடு முதல் குஜராத் வரை தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி சுட்டுக் கொலை!போலிசார் அதிரடி!!

தமிழ்நாடு முதல் குஜராத் வரை தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி சுட்டுக் கொலை!போலிசார் அதிரடி!!

                                                                                                     Murugan - File Picture

கே.ஏ.ஜெகதீஷ்வரி, 

 தமிழ்நாடு முதல் குஜராத் வரை பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி நீராவி முருகனை போலீசார் இன்று என்கவுண்டரில் சுட்டுக்கொன்றனர்.

 தூத்துக்குடி மாவட்டம் புதியம் புத்தூர் அருகே உள்ள நீராவிமேடு கிராமத்தை சேர்ந்தவர் நீராவி முருகன் (வயது 45). பிரபல ரவுடியான இவர் மீது சென்னை, தூத்துக்குடி, ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள காவல்     நிலையங்களில் 12 கொலை வழக்கு, 15 க்கும் மேற்பட்ட கொலைமுயற்சி வழக்குகள், கொள்ளை, கடத்தல், வழிப்பறி என சுமார் 38 -க்கும் மேற்பட்டோர் மீது வழக்குகள் உள்ளன.

 குறிப்பாக தூத்துக்குடி மாவட்ட திமுக பிரமுகர் அருணாவை கொலை செய்தது இந்த ரவுடிதான்.

 கல்லூரி  மாணவரை போல் உடையணியும் இவர் ஆரம்பத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சும் தொழிலில் ஈடுபட்டு அதிக பணம் சம்பாதித்து வந்துள்ளார்.

  இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டு சாராய தொழில் படுத்துவிட்டது.

  ஆகவே பணத் தேவையை சமாளிக்க கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளார். இதற்காக மாநிலம் மட்டுமல்ல வட இந்தியாவரை நெடொர்க்கை வைத்திருந்தார். அதே போல் ஒரு ஊரில் ஆறு மாதங்களுக்கு மேல் தங்க மாட்டாராம்.

 

 Murugan

அப்படியிருக்க இவர் நீண்ட காலமாக சென்னையில் வசித்து வந்த நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்து நெல்லையில் பதுங்கி இருந்ததாக கூறப்படுகிறது.

 இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் ஒரு பெண்ணிடம் 20 சவரன் நகையை கொள்ளை அடித்துள்ளார். இந்த வழக்கில் நீராவி முருகனுக்கு தொடர்பு இருப்பதை திண்டுக்கல் தனிப்படை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

 அதனைத் தொடர்ந்து நீராவி முருகனை திண்டுக்கல் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். அவர் நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் இருந்து களக்காடு செல்லும் சாலையில் சுப்பிரமணியபுரம் அருகே பொத்தை பகுதியில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

 ஆகவே சப்-இன்ஸ்பெக்டர் இசக்கிராஜா தலைமையிலான தனிப்படையினர் நீராவி முருகனை கைது செய்வதற்காக இன்று நெல்லை வந்தனர்.

  காலை 11மணியளவில் தனிப்படை போலீசார் பொத்தை பகுதியில் பதுங்கி இருந்த நீராவி முருகனை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர்.

  அப்போது நீராவி முருகன் அரிவாளால் ஒரு போலீஸ்காரரை வெட்டினார். அதனை தடுக்க முயன்ற மேலும் 2 போலீஸ்காரர்களுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

 Murugan body

இதனால் சுதாரித்து கொண்ட போலீசார் தற்காப்புக்காக துப்பாக்கியால் நீராவி முருகனை சுட்டனர். இதில் அவர் மீது குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே நீராவி முருகன் பலியானார்.

 தகவல் அறிந்து நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ் குமார், போலீஸ் எஸ்.பி. சரவணன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் விரைந்து வந்தனர். 

 சம்பவத்தின் போது காயம் அடைந்த 3 காவலர்களையும் மீட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் நெல்லை ரவுடிகளுக்கு பீதியை ஏற்படுத்தியிருக்கிறது.

  இந்த என்கவுண்டரை கண்டித்து எந்த அமைப்பும் கொடிபிடிக்கவில்லை.