வேலூர் மேயர் அதிமுகவுக்கு ஆதரவாக பேசுவதாக துணை மேயர் நேரடி கேள்வி!
ஜி.கே.சேகரன்.
ஆளுங்கட்சியைச் சேர்ந்த மேயர் சுஜாதா என்பவர் அதிமுகவுக்கு ஆதரவாக பேசுவதாக அதே கட்சியைச் சேர்ந்த துணை மேயர் சுனில் மற்றும் 1-ம் மண்டல தலைவ புஷ்பலதாவும் நேரடியாக கேள்வி கேட்டனர். இதனால் மாமன்ற கூட்டத்தில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது!
வேலூர் மாவட்டம், வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் மேயர் சுஜாதா தலைமையில் நடைபெற்றது.
இதில் மாநகராட்சி ஆணையர் அசோக்குமார் மற்றும் துணை மேயர் சுனில் குமார் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் பேசுகையில் பாலாற்றில் குப்பைகளை மாநகராட்சியினர் மக்களும் கொட்டுவதாகவும் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பேசினார்கள்.
மேலும் சாலைகளை சீரமைக்க வேண்டும் தெருவிளக்குகள் எரிவதில்லை அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மண்டலம் ஒன்றிற்கு போதிய திட்டபணிகள் ஒதுக்கவில்லை என கூறி பேசினார்கள்.
வேலூர் மாநகராட்சி முழுவதும் கழிவு நீர் கால்வாய் தூர்வார வேண்டும் என்று அனைத்து கவுன்சிலர்களும் மேயரிடம் கோரிக்கை வைத்தனர்.மேலும், கழிவுநீர் கால்வாய் தூர்வாரிய மண்ணை எங்கு கொட்ட வேண்டும் என்று கவுன்சிலர்கள் கேட்டபோது. அதற்கு பதில் அளித்த வேலூர் மாநகராட்சி ஆணையர் அதை கொட்டுவதற்கு எங்களிடம் இப்போதைக்கு இடமில்லை. நாங்கள் இடத்தை கூடிய விரைவில் தேர்வு செய்வோம் என்று தெரிவித்தார்.
மாநகராட்சி கூட்டத்தில் 10-வது வார்டு கவுன்சிலர் ரமேஷ், மண்டலம் ஒன்றில் இருந்து ஆண்டுக்கு ரூ.3 கோடி வரி வசூல் ஆகிறது. ஆனால், எங்களது வார்டில் செய்யப்படும் பணிகளுக்கு வெறும் 10 முதல் 20 லட்சம் ரூபாய் மட்டுமே ஒதுக்குகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த மேயர், நீங்கள் மண்டலம் ஒன்றின் தலைவரை அணுகவும் என்றார். இதனால் உஷ்ணமான மண்டலம் ஒன்றின் தலைவர் புஷ்பலதா, வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு உறுப்பினர்கள் உங்களிடம் கேட்டால் நீங்கள் தான் பதில் கூற வேண்டும். அதை மறுத்து என்னிடம் நீங்கள் அந்த கேள்வியை திருப்பி விடுவது சரியில்லை என்றார்.
அப்போது மேயர் அதிமுகவுக்கு ஆதரவாக பேசுவதாக கூறி துணை மேயர் சுனில் மற்றும் ஒன்றாவது மண்டல குழுதலைவர் புஷ்பலதா வன்னியராஜா ஆகியோர் மேயர் சுஜாதாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வேலூர் மாநகராட்சியின் மேயர் மாநகராட்சி ஓனராக செயல்படுகிறார் என்று துணை மேயர் சுனில் குமார் மேடையிலேயே சாடினார்.
மேலும், 28-வது வார்டு கவுன்சிலர் மம்தா குமார் காகிதப்பட்டறை பகுதி டாஸ்மார்க் பஜாராக மாறிவிட்டது. சுமார் ஏழு கடைகள் இந்த பகுதியில் உள்ளது இதை கணிசமாக குறைக்க மாநகராட்சி மேயர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இதனால் மன்ற கூட்டத்தில் கூச்சல் குழப்பம் நிலவியதால் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
இதற்கிடையே 225 பக்கங்கள் கொண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.