மலைகிராமங்களில் தங்கி பணியாற்றுங்கள்! வி.ஏ.ஓ, மருத்துவர், ஆசிரியர்களுக்கு கலெக்டர் அட்வைஸ்!

ஜி.கே.சேகரன்,
மலைப்பகுதிகளில் உள்ள மக்களுக்கு கிராம நிர்வாக அலுவலர், மருத்துவர்கள் ஆசிரியர்கள் தினசரி வந்து அவர்களின் கடமையை சேவை மனப்பான்மையுடன் செய்து அவர்களின் குறைகளை போக்க வேண்டும் - மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப.அவர்கள் பீஞ்சமந்தை மலைகிராமத்தில் பேச்சு.
வேலூர்மாவட்டம்,ஜவ்வாது மலைதொடரில் உள்ள பீஞ்சமந்தை கிராமத்தில் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் பல்வேறு துறைகளின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் தலைமையில் நடைபெற்றது.
முன்னதாக ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பீஞ்சமந்தை ஊராட்சி அலுவலகத்தையும் மாவட்ட ஆட்சியர் குமாரவேல்பாண்டியன் திறந்து வைத்ததுடன் 574 பயனாளிகளுக்கு சுமார் ரூ.4. 30 கோடி மதிப்பிலான பல்வேறு துறைகளின் நலத்திட்ட உதவிகளும் இந்த விழாவில் வழங்கப்பட்டது.
இந்த விழாவில் மலைகிராமங்களான பீஞ்சமந்தை,ஜார்தான் கொள்ளை,குண்டுராணி,உள்ளிட்ட பல்வேறு மலைகிராமங்களை சேர்ந்த மக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.
இதில் மாவட்ட ஊராட்சி தலைவர் பாபு, மற்றும் அரசுத்துறையின் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
இந்த விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் குமாரவேல் பாண்டியன் பேசுகையில் மலைகிராமத்தில் கிராம நிர்வாக அலுவலர் சரியாக வருவதில்லை என புகார் வந்துள்ளது.
அவர் இக்கிராமத்தில் கட்டாயம் தங்கி மக்களுக்கு பணி செய்ய வேண்டும், இதே போன்று ஆசிரியர்களும் பணி நேரத்தில் பள்ளிகளுக்கு வந்து மாணவ,மாணவிகளுக்கு கல்வி கற்றுத்தர வேண்டும் இதே போன்று மருத்துவர்களும் செவிலியர்களும் அவசியம் இங்கேயே தங்கி பணியாற்ற வேண்டும்.
அரசுத் துறையை சேர்ந்த இம்மூவரும் சேவை மனப்பான்மையுடன் இங்கேயே தங்கி பணியாற்ற வேண்டும் தொடர்ந்து புகார்கள் வருகிறது அவ்வாறு வராத வண்ணம் நீங்கள் பணியாற்ற வேண்டும்.
மேலும் மக்களின் கோரிக்கையான சாலை வசதி ஜாதி சான்றிதழ் போன்றவைகள் தீர்த்து வைக்கப்படும் என்று பேசினார் அத்துடன் மாதத்திற்கு ஒரு முறை இம்மலைகிராமத்திற்கு வருவேன் எனவும் மக்களுக்கு உறுதியளித்து பேசினார்.