முறுக்கு சுண்டல் வியாபாரிகளிடம் பறக்கும்படையினர் டார்ச்சர்! அடேங்கப்பா தேர்தல் வேட்டை!!

ம.பா.கெஜராஜ்,
நடைபெற இருக்கும் நகர்புற உள்ளாட்சி தேர்தலில், வாக்காளர்களுக்குபணம் மற்றும் பரிசு கொடுப்பது, அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக தேர்தல் செலவு செய்தல் போன்றவை கண்காணிக்கப்படுகின்றன. அதற்காக அமைக்கப்பட்டிருகும் பறக்கும் படையினர் முறுக்கு சுண்டல் வியாபாரிகளை டார்ச்சர் செய்து வருவதாக சொல்லப்படுகிறது.
மேற்கண்டவைகளுக்காக பெருமளவில் பணம் ரகசியமாகக் கொண்டு செல்லப்படுவதைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
ஆனால் இதில் வேடிக்கை என்னவென்றால் ஆளுங்கட்சியினர் இப்போதே இனிப்பு பெட்டிகளையும் முன் பணமும் கொடுத்து வாக்குகளை அட்வான்ஸ் புக்கிங் செய்து வருகிறார்கள்.
இதையெல்லாம் கண்டு கொள்ளாத சம்மந்தப்பட்ட தேர்தல் பார்வையாளர்கள் அப்பாவிப் பொதுமக்களும் சிறு , நடுத்தர வியாபாரிகளையும் மடக்கி கிழிந்த கோணிப்பைகளை கொட்டி அலசி டார்ச்சர் கொடுத்து வருகிறார்கள்.
சொற்ப பணமாக இருந்தாலும் கூட, அதை வேறு என்ன காரணத்துக்காகப் எடுத்துச்சென்றாலும் அது தேர்தலுக்காக லஞ்சம் கொடுக்கவே கொண்டு செல்லப்படுவதாக அவர்கள் சீறிப் பாய்கிறார்கள்.
வியாபாரத்துக்காக கொண்டு செல்லப்படும் பொட்களைக்கூட அன்பளிப்பாகவே தேர்தல் அலுவலர்கள் கருதுகிறார்கள். வியாபாரிகளிடமிருந்து பணத்தை மட்டுமல்லாமல் வியாபாரத்துக்கு எடுத்துச்செல்லப்படும் பொருட்களையும் பறக்கும் படையினர் பறிமுதல் செய்கின்றனர் .
காவல் துறை,வருவாய்த் துறை உள்ளிட்ட அதிகாரிகள் இணைந்த பறக்கும் படை உருவாக்கப்பட்டு, அது தேர்தல் நடக்கும் இடங்களில் ரோந்து வந்துகொண்டிருக்கின்றனர். அவர்கள் தான் இந்த நல்ல காரியத்தை செய்து மக்களை துன்புறுத்தி வருகிறார்கள்.
அந்த வகையில் இந்தப் பறக்கும் படையிடம் அதிகம் சிக்கிக்கொண்டு வியாபாரிகள் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
அந்தப் பொருட்களை இன்ன நிறுவனத்திடமிருந்துதான் வாங்கிச்செல்கிறேன் என்பதற்கான ரசீதைக் காட்ட வேண்டும் என்கின்றனர் . அதாவது , ஜி.எஸ்.டி. செலுத்தப்பட்டிருக்க வேண்டும் என்கிறார்கள்.
முரண்பாடு இங்கேதான் தொடங்குகிறது . ' ஆண்டுக்கு ரூ . 40 லட்சம் வரை செய்யும் தொழில் வியாபாரம் அரசுக்கு நிறுவனங்கள் ஜி.எஸ்.டி. வரி செலுத்தத் தேவையில்லை.
அதாவது , - சிறிய அளவில் வியாபாரம் செய்யும் வியாபாரிகள் , ஜி.எஸ்படி என்னும் ஒருமுகவரியை அரசுக்குச் செலுத்த வேண்டியதில்லை ' என்பதுதான் ஜி.எஸ்.டி விஷயத்தில் மத்திய அரசின் அறிவிப்பு.
ஆனால் , தேர்தல் நேரத்தில் என்ன செய்கிறார்கள் ? ' ரூ . 50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களைத் தேர்தல் நேரத்தில் வெளியே எடுத்துச்சென்றாலும் , அதற்கு உரிய ஜி.எஸ்.டி. வரி செலுத்தப்பட்ட ரசீதைக் காட்ட வேண்டும் ' என்கின்றனர்.
அரசு உத்தரவு என்னவாக இருந்தாலும் , அதைப் பற்றி தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளாமல் அவர்கள் தனி ரூட்டு எடுத்து, புதிய விதிமுறைகளையும் நடவடிக்கைகளையும் மேற்கொள்கிறார்கள்.
பறக்கும் படையினரின் இந்த செயல்பாடுகள், வியாபாரிகளைத் தொழில் செய்ய முடியாத அளவுக்கு மிதிக்கிறது.
இதனால் , தொழில் பாதிப்பு ஏற்பட்டு , பலரது வாழ்வாதாரமும் முடங்கிச் சிரமப்படும் நிலை ஏற்பட்டுவிடுகிறது .
மேலும் இதில் சில தில்லாலங்கடி வேலைகளையும் பறக்கும் படையினர் செய்து வருகிறார்கள். ஆம் ரசீது இல்லாமல் பிடிபட்ட பொருட்களுக்கு ஜி.எஸ்டியுடன் கூடிய ரசீதை உருவாக்கப் பறக்கும் படை அதிகாரிகளே வழி சொல்லிக்கொடுக்கிறார்கள் என்றும் குற்றம்சாட்டப்படுகிறது.
அதாவது ஆடிட்டர்களை அவர்களே காட்டுகிறார்களாம்.
அவர்கள் ' சர்வீஸ் சார்ஜ் ' வாங்கிக்கொண்டு ரசீதுகளைத் தயார்செய்து கொடுத்துவிடுகிறார்கள் என்றும் , அந்த ரசீதைப் பறக்கும் படையினரிடம் ' அன்பளிப்போடு ' சேர்த்துக் கொடுத்தால் பிடிபட்ட அத்தனை பொருட்களும் சேதாரம் இன்றித் திரும்பக் கிடைத்துவிடும் என்றும் சிறு வியாபாரிகள் வருத்தப்பட்டு சொல்கிறார்கள்.
அதேபோல, தேர்தல் நேரத்தில் திருமணச் செலவுக்காகப் பழைய 5 கிராம் நகையை விற்பனைக்காக ஒருவர் எடுத்துச் செல்கிறார் என்றால், பழைய நகை என்பதையெல்லாம் பறக்கும் படையினர் ஏற்பதில்லை.
அதற்கும் ரசீது இருக்க வேண்டும். இல்லையென்றால், பறிமுதல் செய்து டார்ச்சர் செய்கிறார்கள்.
ஆகவே பறக்கும் படையிடம் சிக்காமல் , நகையை எடுத்துச் சென்று , அதை விற்று , பணத்தை எடுத்துக்கொண்டு வீடு திரும்புவதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது.
அட இது கூட பரவாயில்லீங்க முறுக்கு, சுண்டல் , கடலை மிட்டாய் வியாபாரி போன்றவர்களிடம் கூட, ரசீது கேட்டுத் தொந்தரவு செய்த நிகழ்வுகள் தொடர்ந்து நடந்துவருகின்றன.
அதே போல் ஆடு,மாடு விற்பனை செய்பவர்களிடமும் பணத்துக்கான ரசீது கேட்டுப் பறக்கும் படையினர் பிடித்துள்ளனர் . ஆடு , மாடு வியாபாரத்துக்கெல்லாம் நீ எங்கேயிருந்து யார் ரசீது கொடுப்பது ? என்று கேட்டால் அதற்கு தனி கவனிப்பாம்.
தேர்தல் நேரத்தில் அதிகாரிகள் பலரும் லஞ்சத்தில் திளைப்பதாகவும் குற்றம்சாட்டுகிறார்கள்.
கடந்த 2021 - ல் நடந்த சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் பறக்கும் படையினரிடம் பிடிபட்ட பணம் மட்டும் ரூ .450 கோடி . இப்படிப் பிடிபட்டவற்றில் 98 % அளவுக்கு , உரிய ஆவணம் காட்டி , பொதுமக்கள் வியாபாரிகள் பொருட்களைத் திரும்பப் பெற்றுச் சென்றுவிட்டனர் எனபது தேர்தல் ஆணையத்தின் புள்ளிவிவரம்.
இதுல பாருங்க பிடிபடும்போது இல்லாத ஆவணம் , பிடிபட்ட பின் சில நாட்கள் கழித்து எங்கிருந்து வருகிறது ? பெரும்பாலான ஆவணங்கள் போலியாக உருவாக்கப்பட்டவைதான் என்று கூறுகிறார்கள்.