அரசியலாக்கப்படும் நீட் தேர்வு செ.கு.தமிழரசன் பேட்டி!

ஜே.தேவபிரகாசம்,
நீட் தேர்வு தமிழகத்தில் அரசியல் ஆக்கப்படுவதாக இந்திய குடியரசுக் கட்சித் தலைவர் செ.கு. தமிழரசன் பேட்டியின் போது சொன்னார்.
வேலூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் மேலும் கூறுகையில்,
தமிழக அரசியலில் அதிமுக-திமுக என இந்த இரண்டு கட்சிகளும் சமூக நீதியை கடைபிடிக்காமல் இருப்பதில் ஒரே மாதிரியாகத்தான் செயல்படுகிறார்கள்.
திமுக எதிர்க்கட்சியாக இருக்கும்போது மாநகராட்சி, நகராட்சிகளில் துணை பதவிகளில் இட ஒதுக்கீடு வேண்டும் என்று வழக்கு எல்லாம் போட்டது.
அதே கட்சி இன்று ஆட்சிக்கு வந்த பின்னர் அதைப்பற்றி காதில் போட்டுக் கொள்ளவே இல்லை.
குறிப்பாக சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளில் 2% மலைவாழ் மக்களுக்கு ஒதுக்கீடு அளிக்கப்படும் என்று சொன்னது திமுக. ஆனால் ஒரு சீட்டு கூட இம் முறை மலைவாழ்மக்களுக்கு திமுக அளிக்கவில்லை.
ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, பீகார், உத்தரபிரதேசம் போன்ற முன்னணி மாநிலங்களில் எல்லாம் துணைத்தலைவர் பதவிக்கு இட ஒதுக்கீடு உள்ளபோது, தமிழகத்தில் மட்டும் அது கைவிடப்பட்டது இதுவா சமூக நீதி.
தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட,தாழ்த்தப்பட்டவர்களுக்கு, திமுக.வும் திமுகவும் போட்டி போட்டுக் கொண்டு துரோகம் இழைத்துக் கொண்டிருக்கிறது.
திமுக நடத்திய சமூக நீதி கூட்டத்துக்கு பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களின் பேரன் நடத்தும் கட்சிக்கும், முன்னாள் மத்திய அமைச்சர் மறைந்த திரு.ராம்விலாஸ் பஸ்வான் அவர்கள் நடத்திய கட்சிக்கும் அழைப்பு விடுக்கவில்லை.
சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளாக உள்ள 16 வயது வரை கட்டாயக் கல்வி என்கிற திட்டத்தை மாற்றி 25 வயது வரை கட்டாயக் கல்வி என்கிற கொள்கை முடிவை எடுக்க வேண்டும்.
கல்விக் கொள்கைகளில் மாற்றம் ஏற்படுத்தினால் தான் நீட் போன்ற தேர்வுகளுக்கு விடிவு கிடைக்கும், ஆனால் அந்த நீட் தேர்வானது அரசியலாக்கப்பட்டு வருகிறது என்று பேசினார்.