அ.தி.மு.க. நிலை மாறி தலை நிமிரும் சசிகலா! அ.தி.மு.க.விற்குள் சசிகலாவை அனுமதிக்க மாட்டோம் பொன்னையன்!

Ma.Ba.Gajaraj,
அ.தி.மு.க. நிலை மாறும், தலை நிமிரும்மென்று சசிகலா அறிக்கையில் சொல்லியுள்ள நிலையில், அ.தி.மு.க.விற்குள் சசிகலாவை அனுமதிக்க மாட்டோம் என்று சி.பொன்னையன் பேட்டியளித்துள்ளார்.
சசிகலா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
அரசியல் எதிரிகளின் குழ்ச்சிகளுக்கு இரையாகாமல் அ.தி.மு.க.வையும் அதன் தொண்டர்களையும் காப்பதே தமது முதல் கடமை. இந்த கொள்கையை மனதில் கொண்டுதான் தனது வாழ்க்கை பயணம் இந்த நொடியிலும் சென்று கொண்டிருக்கிறது.
தனிமனித விருப்பு வெறுப்புகளுக்கு அ.தி.மு.க. பயன்பட்டதில் இருந்து அதன் மதிப்பு குறைந்தது. மேலும் தன் தொண்டர்களையும் அக்கட்சி மறந்தது. இதனால் ஏளன பேச்சுகளும் சிறுமைப்படுத்துவதும் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.
ஒதுக்கப்பட்டவர்கள், தாங்களாக ஒதுங்கி கொண்டு செயல்படாமல் இருப்பவர்கள் அனைவரும் கவலைப்படாமல் சிறிது காலம் பொறுத்திருங்கள். விரைவில் அ.தி.மு.க. நிலை மாறும். தலை நிமிரும். இது உறுதி.
ஒரு சிலருடைய தேவைகளுக்காகவும் விருப்பு வெறுப்புகளுக்காகவும் தற்போது அ.தி.மு.க. செயல்பட்டு கொண்டிருக்கிறது. அதை சரி செய்து, மீண்டும் தொண்டர்களுக்கான ஒரு இயக்கமாகவும், அரசியல் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாகவும்
வெளிப்படும் வகையில் விரைவில் அ.தி.மு.க.வை மாற்றிக் காட்டுவோம் என சசிகலா அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
பொன்னையன் பேட்டி!
அ.தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற துணை சபாநாயகருமான மு.தம்பிதுரையின் இளைய மகள் நம்ரதா-கவுதம் திருமணம் சேலம் சூரமங்கலம் மெயின்ரோட்டில் உள்ள திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
இதில் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் பொன்னையன் நிருபர்களிடம் கூறியதாவது:-
அ.தி.மு.க.விற்குள் சசிகலாவை அனுமதிக்க மாட்டோம். சசிகலா அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது. ஜெயலலிதா இருக்கும் போதே சசிகலாவையும் அவருடைய குடும்பத்தையும் வீட்டில் இருந்து ஒதுக்கி வைத்தார்.
அ.தி.மு.க.வின் உட்கட்சி தேர்தல் சட்ட விதிகளின்படி நடைபெறும். அ.தி.மு.க.வின் இரு கண்களாக இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். உள்ளனர். கட்சியிலிருந்து அன்வர்ராஜாவை நீக்கியது சரியான முடிவு. அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை வேண்டும் என யாரும் விரும்பவில்லை.
கட்சியின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும். முன்னாள் அமைச்சர்கள் மீது பொய் வழக்குகள் போடப்பட்டு வருகிறது. ஒரு வழக்கில் கூட எதிர்தரப்பினர் வெற்றி பெற முடியாது. அ.தி.மு.க. கொடியை சாலையில் செல்பவர்கள் பயன்படுத்துவது போல சசிகலா பயன்படுத்துகிறார் என்று சொன்னார் பொன்னையன்.