அடி.. தூள்....தடைகளை மீறி உதயமான விளையாட்டு அரங்கு! முதல்வருக்கும் ஆட்சியருக்கும் நன்றி சொல்லும் வீரர்கள்!

ம.பா.கெஜராஜ்,
புதிய திறந்தவெளி விளையாட்டு அரங்கத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொளி காட்சி மூலம் திறந்ததை - வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தார்.
வேலூர் மாவட்டம்,காட்பாடியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் ரூ19.24 கோடி மதிப்பீட்டில் புதியதாக வேலூர் மாவட்டத்திற்கான திறந்த வெளி விளையாட்டு அரங்கை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இதன் பின்னர் வேலூர் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப. குத்துவிளக்கேற்றி துவங்கினார். இவ்விழாவில் மாநகராட்சி ஆணையர் அசோக்குமார், பயிற்சி ஆட்சியர் செல்வி ஐஸ்வர்யா, மேயர் சுஜாதா, மற்றும் அரசு அதிகாரிகள் பலரும் பங்கேற்றனர். விளையாட்டு வீரர்கள் நீண்ட காலமாக தனி மைதனாம் வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று இன்று துவங்கப்பட்டுள்ள இந்த விளையாட்டரங்கு அதிக அளவில் பார்வையாளர்கள் அமரும் வசதி புட்பால்,வாலிபால்,பேஸ்கட் பால்,ஹாக்கி ,டென்னிஸ் உள்ளிட்ட விளையாட்டுகள் விளையாடும் வசதிகள் நீச்சல் குளம் உள்ளிட்டவைகளுடன் திறக்கப்பட்டுள்ளது . இது வேலூர் மாவட்ட விளையாட்டு வீரர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்படி விளையாட்டு மைதானம் அமைவதற்காக பல்வேறு தரப்பினரின் போராட்டம் பின்னணியில் இருந்துள்ளது என்பது வரலாறு.
வேலூர் மாவட்டத்தில் விளையாட்டு மைதானம் அமைக்க பலதரப்பினர் கோரி வந்த நிலையில், கடந்த 1996 ஆம் ஆண்டு வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவராக வந்த ப.வி.சா.டேவிதார் இ.ஆ.ப அவர்கள் அதற்கான முன்னெடுப்பு முயற்சிகளில் இறங்கி, ஆய்வுகள் நடத்தினார். அதில் வேலூர் காட்பாடி அருகே 557,771 முதல் 778/3 வரையுள்ள சுமார் 15 சர்வே எண்களில் உள்ள 42.92 ஏக்கர் அரசு நிலத்தை தேர்வு செய்தார்.
அதில் "மல்டி லெவல்" விளையாட்டு அரங்கம் கட்ட திட்டம் வகுத்தார். ஆனால் அதற்கு சில பிரஷர்கள் வந்ததன் காரணமாக திட்டம் நொண்டியது.
அவருக்கு பின்னர் இரா.சிவக்குமார் என்பவர் 98 ஆம் ஆண்டு கலெக்டராக வந்தார், அவரிடம் பத்திரிகையாளர்களில் சிலரும், விளையாட்டு ஆர்வலர்களும் மேற்படி விளையாட்டு அரங்கு அமைப்பது குறித்து கோரிக்கை வைத்தனர். சுமார் மூன்று ஆண்டுகள் இங்கு குப்பை கொட்டிவிட்டு பிரஷர் கொடுப்பவர்களுக்கு மட்டுமே அவர் செவி சாய்த்தார்.
பிறகு 2001-ல்.ஏ.சி.மோகன்தாஸ் கலெக்டராக வந்தார். அவர் பேசிப் பேசியே காலத்தை ஓட்டினார். இருப்பினும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு மக்கள் பணிகளை செய்தார்.
அவருக்கு அடுத்து 2004-ல் வந்தவர் எஸ்.கோபாலகிருஷ்ணன். பல பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த அவர் விளையாட்டு மைதானம் அமைக்க குறுக்கீடாக வந்தவர்களைக் குறித்தும், முக்கியமாக அவர்களுடைய ஆக்கிரமிப்புகள் குறித்தும் பைல்களை புரட்டி நடவடிக்கை எடுத்தார்.
மைதானத்தை கையகப்படுத்த அதிகாரிகளை முடுக்கிவிட்டார்.
அந்த வகையில் விளையாட்டு அரங்கு அமைக்க விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் முயற்சிகளை மேற்கொண்டார்.
அப்போது விளையாட்டு மேம்பாட்டுத் துறை ஆணையராக ஏற்கனவே வேலூர் ஆட்சியராக இருந்த ப.வி.ச. டேவிதார் ஐஏஎஸ் அவர்கள் பதவியில் இருந்தார்.
அவர் ஆட்சியராக இருந்தபோது துவக்கி வைக்கப்பட்ட இந்த மைதான அரங்கு விவகாரத்திற்காக முதல்கட்டமாக 20 லட்சம் ரூபாயை ஒதுக்கினார்.
அதை மையப்படுத்தி மேற்படி 42.91 ஏக்கரில் சாலை அமைக்கும் பணி துவங்கப்பட்டது
அதை அறிந்த கி தனியார் நிர்வாகம் மாவட்ட நிர்வாகத்துக்கு பல இடையூறுகளை செய்தனர். மைதானத்தில் அவர்களுக்கு சொந்தமான பேருந்துகளை நிறுத்தினர். மேலும் பங்களாவில் இருந்து ஆட்சியர் மைதானம் வருவதை தடுக்கும் நோக்கில் தோட்டப்பாளையம் பகுதியில் திடீர் சாலைமறியல் எல்லாம் நடத்தப்பட்டது.
ஒரே களேபரம், இதனை பருவ இதழியலாளர்கள் கடுமையாக சாடி எழுதினர்,
அதன் பின்னர் மேற்படி மைதானம் தொடர்பாக தனியார் சார்பில் நீதி பேராணைகள் தாக்கல் செய்யப்பட்டது.
இடையே தர்மேந்திர பிரதாப் யாதவ், சி.ராஜேந்திரன், வி.பழனிக்குமார், இ.சரவண வேல்ராஜ், எஸ்.நாகராஜன், அஜய்யாதவ், பிசங்கர், ஆர்.நந்தகோபால். ராஜேந்திர ரத்னு, கே.பலராமன் ஆகியோர் ஆட்சியர்களாக இருந்தனர்.
அவர்கள் மேற்படி நீதிபேராணைகளை காரணம் சொல்லி விளையாட்டு மைதான மேட்டரை தட்டிக்கழித்தனர். அவர்களில் நாகராஜன் மட்டும் தனியார் ஆக்கிரமித்துள்ள இடங்களை தடாலகியாக அளந்து கல் நட்டார். கல் நட்டு அலுவலகம் வருவதற்குள் அவருக்கு பணியிட மாறுதல் பரிசாக கிடைத்தது.
அவர்களுக்கு பின்னர் 2016 ஆம் ஆண்டு முதல் 2019 ஆண்டு வரை எஸ்.ஏ.இராமன் இ.ஆ.ப. ஆட்சியராக வந்தார்.
அப்போது தான்W.P.No.23619 of 2005 and WPMP.Nos.1733 to 1735 of 2005கீழ் இருப்பினும் 31.01.2019 அன்று மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் இது தொடர்பான ஒரு ரிட் பெட்டிஷனை தள்ளுபடி செய்ததோடு வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியது.
அவ்வாறு வெளியான தீர்ப்பின் அடிப்படையில் விளையாட்டுத்துறை நிலத்தை அளந்து அங்கு விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணியை துவங்கிய போது, அதற்கு மாவட்ட நிர்வாகம் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்தது.
முன்னதாக மக்கள் தொலைகாட்சி செய்தியாளர் திரு.ஜி.குலசேகரன், காலைக்கதிர் செய்தியாளர் திரு.தினகரன், பருவ இதழ்களின் செய்தியாளர்கள் ம.பா.கெஜராஜ் மற்றும் தணிகைவேல் ஆகியோர் பரபரப்பு செய்திகளை வெளியிட்டனர்.
அப்படியிருக்க நீதிமன்ற தீர்ப்பின்படி விளையாட்டு அரங்கு அமைக்க வலியுறுத்தி விளையாட்டு வீரர்கள், விளையாட்டுத்துறை அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள், வழக்கறிஞர்கள் உட்பட பலர் இணைந்து 18.02.2019 ஆம் தேதி ஆட்சியர் அலுவலகம் எதிரில் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் நடத்தினர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் மக்கள் சேவை மைய்ய இயக்குநர் வி.எம்.பி.அப்புபால் பாலாஜி, மனித உரிமை காப்பாளர்கள் காட்பாடி பிலிப், வேலூர் ஈஸ்வரன், விளையாட்டு ஆர்வலர் பொறி.கே.பி.ஆறுமுகம், ஊடக உரிமைக் குரல் அமைப்பின் அப்போதைய ஒருங்கிணைப்பாளர்கள் ராபர்ட்ராஜ், தமிழன்வடிவேல், சிவக்குமார், ஆனந்த், சுரேஷ், சிவயோகி ம.ராஜ்குமார், வழக்கறிஞர் புகழேந்தி,பத்திரிகையாளர் ம.பா.கெஜராஜ், இறகு பந்து பயிற்சியாளர் சசிகுமார், குத்துச்சண்டை பயிற்சியாளர் ராஜேஷ், தமிழன் தொலைக்காட்சியைச் சேர்ந்த ப.ரவிச்சந்திரன் , கராத்தே சக்திவேல் மற்றும் கபடி, ஹாக்கி, சிலம்பு, குத்துச்சண்டை வீரங்கள் மற்றும் அதன் பயிற்சியாளர்கள் கலந்துகொண்டனர்.
ஆர்பாட்டத்தின் முடிவில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அதை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் இராமன் மனுவின் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
அதன் பேரில் மைதானம் அளந்து கொடுக்கும் பணியை துவக்க முடிவானது.
இந்நிலையில் 2019 ஆம் ஆண்டு வேலூர் ஆட்சியராக அ.சண்முகசுந்தரம் இ.ஆ.ப அவர்கள் பொறுப்பேற்றார். அதன் பின்னர் மேற்படி விளையாட்டு அரங்கு அமைக்கும் பணிகள் மும்முரம் அடைந்தது. கிட்டதட்ட ஒரு ஷேப்புக்கு அதை கொண்டு வந்த சூழலில் அவருக்கு பின்னர் 2021 ஆம் ஆண்டு பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப. அவர்கள் வேலூர் ஆட்சியராக பணியமர்த்தப்பட்டார்.
இந்த சூழலில் விளையாட்டு மைதான பணிகள் நிறைவடைந்து தற்போது முதல்வர் மற்றும் ஆட்சியரின் கரங்களால் அரங்கு திறந்து வைக்கப்பட்ட்டிருக்கிறது.
இந்நிலையில் இதற்காக போராடியவர்களும், மாவட்ட விளையாட்டு வீரர்களும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துள்ளனர்.
மேற்படி விளையாட்டு அரங்கம் அமைக்க நடந்த போராட்டங்களுக்கு விளையாட்டு துறையில் இருந்து ஓய்வு பெற்ற திரு பீட்டர் மற்றும் திரு நாகராஜ் அவர்கள் உறுதுணையாக இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது