சேகர் ரெட்டி மகளுடன் திருமணம் நிச்ச்சயிக்கப்பட்ட நிலையில் திருப்பதி அதிகாரி மகன் கவலைக்கிடம்!

ஜி.சாந்தகுமார்,
திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாக அதிகாரியாக இருப்பவர் தர்மா ரெட்டி, இவரது மகன் சந்திரமவுலி (வயது 27). இவருக்கும், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில ஆலோசனைக்குழு தலைவரான சேகர் ரெட்டியின் மகள் பாக்யஸ்ரீக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது.
அதன்படி இருவருக்கும் அடுத்த ஆண்டு (2023) ஜனவரி 26-ந் தேதி சென்னையில் திருமணம் நடைபெற இருந்தது. திருமணத்தை ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி நடத்தி வைப்பதாக ஏற்பாடு ஆகி இருந்தது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக சந்திரமவுலி ரெட்டியும், சேகர் ரெட்டியும் திருமண அழைப்பிதழை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளுக்கு சென்று கொடுத்து வந்தனர்.
இந்த சூழலில் சந்திரமவுலி ரெட்டிக்கு நேற்று முன்தினம் மாரடைப்பு ஏற்பட்டது. அவர் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காவேரி ஆஸ்பத்திரி தரப்பில் அவரது மருத்துவக்குறிப்பு வெளியானது. ஆஸ்பத்திரியின் இணை நிறுவனரும், நிர்வாக இயக்குனருமான டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் வெளியிட்டுள்ள அந்த மருத்துவக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கடந்த 18-ந்தேதி (நேற்று முன்தினம்) மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் சந்திரமவுலி ரெட்டி, காவேரி ஆஸ்பத்திரியின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு சி.பி.ஆர். பரிசோதனைகள் முடிந்த நிலையில், அவர் கேத் லேப் பிரிவில் மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு 'எக்மோ' சிகிச்சை அளிக்கப்பட்டு, இதய தமனியில் 'ஸ்டண்ட்' கருவி பொருத்தப்பட்டது.
உடல் உறுப்புகள் செயலிழந்து வரும் நிலையில் அவர் கவலைக்கிடமாக இருக்கிறார்.
அவரை ஆஸ்பத்திரி டாக்டர்கள், நர்சுகள் குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
கடவுளிடம் செய்யப்படும் பிரார்தனையே இப்போது ஒரே நம்பிக்கை. நலம் பெற நாமும் பிரார்த்தனை செய்வோம்.