துரைமுருகனின் முறத்தால் அடி பேச்சு? பொங்கிய ஓட்டுநர்கள்!மாணவர்களுக்காக பணிக்கு திரும்பினர்!

துரைமுருகனின் முறத்தால் அடி பேச்சு? பொங்கிய ஓட்டுநர்கள்!மாணவர்களுக்காக பணிக்கு திரும்பினர்!

G.பாலகுரு, 

துரைமுருகன் பேசும் இடங்களிலெல்லாம் சர்ச்சையை விதைத்துவிட்டு செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

  சமீபத்தில், திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார் பேட்டையில் அவர் பேசுகையில், எம். ஜி. ஆருக்கு துரோகி பட்டத்தை கொடுத்தார். இதனால் உள்ளூர் அதிமுக விஐபிகள் பொங்கவில்லை. எனினும், மாநில அளவிளான தலைவர்கள் கண்டன அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார்கள்.

 அது அடங்குவதற்குள் போக்குவரத்து தொழிலாளர்களை தரக்குறைவாக பேசிய அமைச்சர் துரைமுருகனை கண்டித்து, தஞ்சை பேருந்து பணிமனைகளில் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துநர்கள் சுமார் 3 மணி நேரம் பேருந்துகளை இயக்காமல் போராட்டம் நடத்தினர்.

  நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், அரசு ஓட்டுனர்களை நடத்துநர்களையும் பெண்கள் முறத்தால் அடிக்க வேண்டும் என தரக்குறைவாக பேசியதற்கு கண்டனம் தெரிவித்து, தஞ்சை நகர்புறம் 1 மற்றும் 2 ஆகிய பணிகளில் உள்ள பேருந்துகளை இயக்காமல் ஓட்டுனர்களும் நடத்துனர்களும் பேருந்து பணிமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  அமைச்சர் மன்னிப்பு கேட்கும் வரை போராட்டத்தில் ஈடுபடுவோம் என தொடர்ந்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  இதையடுத்து காவல்துறையினர் வந்து பேச்சுவார்த்தை ஈடுபட்டதை தொடர்ந்து  சுமார் மூன்று மணி நேர கால தாமதத்திற்குப் பிறகு பணிமனையில் இருந்து பேருந்துகளை எடுத்துச் சென்றனர்.

  இதுகுறித்து போக்குவரத்து தொழிலாளர்கள் கூறுகையில் தற்போது காலை நேரத்தில் கல்லூரி பள்ளி மாணவர்கள் பேருந்தில் செல்வதால் அவர்களுக்கு எந்த இடையூறு வரக்கூடாது என்பதற்காக தற்போது பேருந்துகளை இயக்குவதாகவும்  அமைச்சர் துரைமுருகன் மன்னிப்பு கேட்காவிட்டால் இந்த போராட்டம் நாளை தமிழகம் முழுவதும் நடைபெறும் என சொன்னார்கள்.