எடப்பாடி போன்ற முட்டாள்களை மோடி வழி நடத்தமாட்டார்:- புகழேந்தி கருத்து!

ம.பா.கெஜராஜ்,
எடப்பாடி போன்ற முட்டாள்களை பிரதமர் மோடி வழிநடத்தமாட்டார் என்று அதிமுக முன்னாள் செய்தித் தொடர்பாளர் புகழேந்தி காட்டமாக தெரிவித்துள்ளார். அவர் இந்த கருத்தை இ.பி.எஸ்ஸை மையப்படுத்தி தெரிவித்துள்ளதால் அதிமுகவினர் அப்செட் ஆகியிருக்கிறார்கள்.
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்தில் அதிமுகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் புகழேந்தி பன்னீர்செல்வத்தை சந்தித்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது கூறியதாவது
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு நீண்ட இடைவெளிக்கு பிறகு இன்று பன்னீர்செல்வத்தை சந்தித்தேன். எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக சின்னாபின்னமாகி வருகிறது. அரசியலில் ஒரு சர்வாதிகாரி போல் எடப்பாடி பழனிச்சாமி செயல்படுகிறார். சசிகலா பழனிச்சாமிக்கு ஆட்சியை கொடுத்தார்.ஆனால் அவர் சசிகலாவிடம் விசுவாசம் காட்டவில்லை.
காழ்புணர்ச்சியை வைத்துக் கொண்டு எங்களை போன்றவர்களை கட்சியிலிருந்து நீக்கியவர் தான் எடப்பாடி பழனிச்சாமி. தமிழகத்தில் 4 ஆண்டுகளாக கொள்ளையடித்தவர்தான் பழனிச்சாமி.
இரட்டை இலைச் சின்னம் இல்லாமல் பழனிச்சாமி வெளியே போய் நின்றால் 500 ஓட்டுகள்கூட வாங்க முடியாது. எதிர்க்கட்சிப் பதவியை வாங்கி எடப்பாடி பழனிச்சாமி ஒரு வருடம் ஆகிறது, திமுகவில் ஊழலைப் பற்றிப் பேச எடப்பாடி பழனிச்சாமி தயாராக உள்ளாரா? பாஜக தலைவர் அண்ணாமலையை எதிர்க்கட்சித் தலைவர் என்று சொல்லும் சூழலை உருவாக்கியவர் எடப்பாடி பழனிச்சாமிதான்.
எடப்பாடி பழனிச்சாமி போன்ற முட்டாள்களை பிரதமர் நரேந்திர மோடி வழி நடத்தமாட்டார். அதிமுகவை விட்டு எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் வெளியேற வேண்டும். இரட்டைக் குழல் துப்பாக்கி, இரட்டை கோபுரம் என்று அப்போது கூறிய ஜெயக்குமார், இப்போது எப்படி ஒற்றைத் தலைமையைப் பற்றி பேசுகிறார் என புரியவில்லை.
சேலம் மாவட்ட அதிமுகவை மாற்ற எடப்பாடி பழனிச்சாமி முயற்சி செய்கிறார். எடப்பாடி பழனிச்சாமி ஒரு துரோகி. பொதுக்குழுவை ஓ.பன்னீர்செல்வம் இல்லாமல் நடத்த முடியாது. தொண்டர்கள் மத்தியில் எடப்பாடி பழனிச்சாமி இல்லை ஓ.பன்னீர்செல்வம்தான் உள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம் நினைத்தால் பழனிச்சாமியை கட்சியில் இருந்து நீக்க முடியும் என்று புகழேந்தி அவரது பேட்டியில் சொன்னார்.