கஷ்டடி டெத்:- சிபிசிஐடி பிரிவில் 30 போலீசார் ஆஜராகி விளக்கம்!

ம.பா.கெஜராஜ்,
கஷ்டடி டெத் விவகாரத்தில் 30 போலீசார் சிபிசிஐடி ஆஜராகி விளக்கம் அளித்திருக்கிறார்கள்.
சென்னை, செங்குன்றம், அலமாதி பகுதியைச் சேர்ந்த சவுரி ராஜன் மகன் அப்பு (எ) ராஜசேகர். இவர் மீது பட்டினப்பாக்கம், மணலி புது நகர்,வியாசர்பாடி, எம்.கே.பி நகர்,திருநின்றவூர் உள்ளிட்ட காவல் நிலையங்களில், திருட்டு, வழிப்பறி, கொள்ளை என 27 வழக்குகள் இருந்தன.
அப்படியிருக்க, கொடுங்கையூர் போலீசார், குற்ற வழக்கு ஒன்றில், ராஜசேகரை விசாரணைக்கு அழைத்து வந்தனர். கடந்த 12ம் தேதி அன்று, உடல் நலக்குறைவு ஏற்பட்டு ராஜசேகர் மயங்கினார்.
இதையடுத்து அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு ராஜசேகரை கொண்டுச் சென்று, மேல் சிகிச்சைக்கு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு ராஜசேகரை கொண்டு சென்றபோது அவர் உயிரிழந்தார்.
போலீசாரின் அவரை அடித்து சாகடித்துவிட்டனர் என உறவினர்கள் புகார் எழுப்பினார்கள்.
அதன் பேரில் போலிஸ் இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் மில்லர் பொன்ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் கன்னியப்பன், தலைமைக் காவலர்கள் ஜெயசேகர்,மணிவண்ணன், முதல் நிலைக்காவலர் சத்தியமூர்த்தி ஆகிய 5 பேரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
பின்னர் கெல்லீஸ் சிறார் 12வது நீதித்துறை நடுவர் மன்ற மாஜிஸ்திரேட் லட்சுமி நேரில் விசாரணை நடத்தியதை தொடர்ந்து, வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி, டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் சில்வின் சாந்தக்குமார் தலைமையிலான போலீசார், கொடுங்கையூர் காவல் நிலையத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். இதையடுத்து ராஜசேகர் சிகிச்சை பெற்றதாக கூறப்படும் தனியார் மருத்துவனைக்கும் சென்று விசாரித்தனர்.
பின்னர் சிபிசிஐடி, இந்த சம்பவம் தொடர்பாக புதிதாக ஒரு வழக்கைப் பதிவு செய்து, வழக்கின் விசாரணை அதிகாரியாக காவல் துணைக் கண்காணிப்பாளர் சசிதரன் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் சிபிசிஐடி அதிகாரிகள் இந்த வழக்கின் விசாரணையை நேற்று தொடங்கினர்.
அதில் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் போலீசார் விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிசிஐடி சம்மன் வழங்கினர். இந்த சம்மனை ஏற்று கொடுங்கையூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் 30 போலீசார், எழும்பூரில் உள்ள சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் இன்று ஆஜராகினர்.
அவர்களிடம் விசாரணை அதிகாரியான காவல் துணைக் கண்காணிப்பாளர் சசிதரன் தலைமையிலான போலிஸ் டீம் துருவித் துருவி விசாரணை நடத்தியதில், ராஜசேகரனின் சாவுக்கு என்ன காரணம் என்கிற தகவல் கிடைத்துள்ளதாம்.