நீதிமன்றத்தை நோக்கி அ.தி.மு.க. ஒற்றைத் தலைமை விவகாரம்!

ம.பா.கெஜராஜ்,
அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை வேண்டும் என எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களும், தற்போது உள்ள நிலையே தொடர வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களும் தற்போது மோதிக் கொண்டிருக்கிறார்கள். இதனால் வருகிற 23-ந்தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெறுமா? என்ற கேள்வி தொண்டர்கள் இடையே எழுந்துள்ளது.
அப்படிப்பட்ட சூழலில் ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் ஆதரவாளர்கள் ஜே.சி.டி. பிரபாகர், மனோஜ் பாண்டியன், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் நிருபர்களை சந்தித்து எடப்பாடி பழனிசாமிக்கு ஓ.பன்னீர்செல்வம் எழுதிய கடிதத்தை படித்து விளக்கம் அளித்தனர்.
அதில், 23.6.2022 அன்று நடைபெற உள்ள கழகப் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களை அழைப்பது குறித்து விவாதித்து முடிவு எடுக்க அ.தி.மு.க.வின் தலைமையகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் 14.6.2022 அன்று மாவட்டக் கழக செயலாளர்கள் மற்றும் சில கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. பொதுக்குழு நடைபெற உள்ள மண்டபத்தில் நிலவும் இடப்பற்றாக்குறை காரணமாக சிறப்பு அழைப்பாளர்களை அழைக்க வேண்டாம் என்ற தகவலை தாங்கள் தெரிவித்தீர்கள்.
கூட்டம் அழைக்கப்பட்டதன் பொருள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டு முடிந்ததற்கு,முன், அறிவிப்பு இல்லாமல் ஒற்றைத் தலைமை, இரட்டைத் தலைமை குறித்து கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. பொதுவாக கழக பிற அணி நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.பி.க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் மாவட்ட கழக செயலாளர்கள், முன்னாள் வாரிய தலைவர்கள் மற்றும் கட்சிக்காக தியாகம் செய்து உழைத்த மூத்த முன்னோடிகள் ஆகியோரை சிறப்பு அழைப்பாளர்களாக பொதுக்குழுவிற்கு அழைப்பது நமது கழகத்தால் ஆண்டாண்டு காலமாக கடைபிடிக்கப்படும் நடைமுறை.
இந்த நடைமுறை 23.6.2022 அன்று நடைபெற உள்ள பொதுக்குழுவில் பின்பற்றப்படாது என்ற தகவலை அறிந்த கழக உடன்பிறப்புகள் எங்களைத் தொலைபேசி வாயிலாகவும், நேரிலும் சந்தித்து சிறப்பு அழைப்பாளர்களாக தங்களையும் அழைக்க வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்து வருகிறார்கள்.
"புரட்சித்தலைவர் மற்றும் அம்மா அதே மண்டபத்தில் பலமுறை கழகத்தின் பொதுக்குழுவை நடத்திய போதெல்லாம் சிறப்பு அழைப்பாளர்கள் அழைக்கப்பட்டனர்" "இப்போது அதே மண்டபத்தில் இடமில்லை என்று கூறுவது ஏற்புடையதாக இல்லை என்று தங்களது ஆதங்கத்தை தெரியப்படுத்துகின்றனர்"
முன் அறிவிப்பு இல்லாமல், ஒற்றைத் தலைமை மற்றும் இரட்டைத் தலைமை குறித்து 14.6.2022 அன்று நடைபெற்ற கூட்டத்தில் சில மாவட்ட கழக செயலாளர்கள் மற்றும் சில கழக நிர்வாகிகள், கழக சட்ட விதிகளை உணராமலும், அறியாமலும் கருத்து தெரிவித்துள்ளனர். அத்தகைய கருத்தால் கழகத் தொண்டர்கள் கொதித்துப் போயுள்ளனர்.
கழக நிர்வாகிகள் மத்தியிலும், கழக தொண்டர்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் குழப்பமான சூழ்நிலை நிலவுகிறது. அத்தகைய கருத்தால் கட்சியில் குழப்பமும், கட்சியின் நற்பெயருக்கு களங்கமும் ஏற்பட்டுள்ள இந்த அசாதாரண சூழ்நிலை காரணமாக சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
இதையடுத்து கழக தொண்டர்கள் அனைவரும் அமைதி காக்குமாறு டுவிட்டர் மூலம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள அசாதாரண சூழ்நிலையில் அமைதி காப்பது அவசியம். பொதுக்குழு கூட்டம் தொடர்பான பொருள் அடங்கிய விவரம் கிடைக்க பெறவில்லை என கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், பல மாவட்ட கழக செயலாளர்கள் மற்றும் தலைமை கழக நிர்வாகிகள் முறையிட்டுள்ளனர்.
கூட்டத்திற்கான பொருள் நிர்ணயம் செய்து கூட்டத்தை நடத்துவது அவசியமாகிறது என சட்ட வல்லுனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
எனவே மேற்காணும் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு கழகத்தின் நலன் கருதி 23-ந்தேதி அன்று நடைபெற உள்ள செயற் குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தினை தற்போதைக்கு தள்ளி வைக்கலாம் என்றும் அடுத்த கூட்டத்திற்கான இடம், நாள் மற்றும் நேரத்தை கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய நாம் இருவரும் கலந்து ஆலோசித்து பின்னர் முடிவு செய்யலாம் என்றும் தெரிவித்துக் கொள்கிறோம் என அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் 30 மாவட்ட செயலாளர்கள் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஓ.பன்னீர்செல்வம் கையெழுத்து இல்லாமல் பொதுக்குழுவில் ஒற்றை தலைமை தீர்மானம் கொண்டு வர முடியாது என்று பேட்டியின் போது குறிப்பிட்டனர்.
அப்படியிருக்க எடப்பாடிக்கு எழுதிய கடிதம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்துதான் பொதுக்குழுவை கூட்ட முடியும் என்றும், தள்ளி வைக்க ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓபிஎஸ் கடிதம் எழுதியதாக நீதிமன்றத்தில் அவரது வழக்கறிஞர் குறிப்பிட்டார்.
அதனைத்தொடர்ந்து பொதுக்குழு கூட்டத்தை தள்ளிவைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை முன்கூட்டியே விசாரிக்கக் கோரிய மனு மீதான விசாரணையை நாளைக்கு தள்ளி வைத்த நீதிபதி, இந்த மனுவுக்கு நாளை பதில் அளிக்கும்படி எதிர்மனுதாரர்களுக்கு உத்தரவிட்டு விசாரணையை நாளைக்கு தள்ளி வைத்தார்.
இது ஒருபுறம் இருக்க எடப்பாடி பழனிசாமி தரப்பில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, ஓபிஎஸ் அனுப்பிய கடிதம் குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது என்றார். திட்டமிட்டபடி அதிமுக பொதுக்குழு 23ந் தேதி நடைபெறும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் அழைப்பு அனுப்பப் பட்டுள்ளதாகவும், அதிமுக பொதுக் குழுவில் என்ன தீர்மானம் கொண்டு வருவது என்பது குறித்து ஆலோசனையின் போது ஓபிஎஸ் கலந்து கொண்டதாகவும், இதற்கான ஆதாரம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதிமுக பொதுக்குழுவுக்கு ஒருங்கிணைப்பாளர் ஓபன்னீர் செல்வம் உறுதியாக வருவார் என்றும், பொதுக்குழுவில் பங்கேற்று தனது கருத்துக்களை அவர் எடுத்துரைப்பார் என்றும் முனுசாமி கூறினார்.
பொதுக்குழுவில் ஒற்றைத்தலைமை தீர்மானம் கொண்டு வரப்படுமா என்பது குறித்து இப்போது எதுவும் கூற முடியாது, பொதுக் குழுவில் எடுக்கும் முடிவுகளை ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகிய இரு தலைவர்களும் ஏற்றுக் கொள்வார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இவர் ஓ.பி.எஸ். வுடன் கைகோர்த்துக் கொண்டிருந்தவர் மற்றும் வழக்கறிஞர் ஆவார்.
எது எப்படியோ அ.தி.மு.க. ஒற்றை தலைமை விவகாரம் நீதிமன்றத்தை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது?