புதுப் பிரச்சினையா என்றே தினமும் கண்விழிக்கிறேன்- ஸ்டாலின்! ஏமாந்தால் திராவிடம் காணாமல் ஆகிவிடும்!

புதுப் பிரச்சினையா என்றே தினமும் கண்விழிக்கிறேன்- ஸ்டாலின்! ஏமாந்தால் திராவிடம் காணாமல் ஆகிவிடும்!

  ம.பா.கெஜராஜ்,

 எந்த புதுப் பிரச்சினையையும் உருவாக்கிவிடக் கூடாதே என்ற நினைப்புடன்தான் தினமும் காலையில் கண்விழிக்கிறேன் என்று திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் பேசியிருப்பது பல்வேறு கருத்துக்களை எடுத்துச் சொல்வதாகவே பார்க்கப்படுகிறது.

இது பற்றின விவரம் வருமாறு,

   நேற்று நடந்த திமுக பொதுக்குழுவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 2-வது முறையாகத் திமுக தலைவராக தேர்வு செய்யப்பட்டார் . பொதுச் செயலராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆர்.பாலு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். துணைப் பொதுச் செயலராக கனிமொழி எம்.பி. நியமிக்கப்பட்டார்.

 மேற்படி பொதுக்குழுவில் முதல்வர் ஸ்டாலின் பேசும் உபயோகித்த வார்த்தைகள் அரசியல் நோக்கர்களை திரும்பிப்பார்க்க வைத்துள்ளது.

  அவர் பேசியதாவது, சில சலப்புகளைத் தவிர, உட்கட்சித் தேர்தல் பெரும்பாலும் அமைதியாகவே நடந்து முடிந்துள்ளது. நம்மைவிடத் தகுதியானவர்கள் இல்லை என்பதால், இந்தப் பொறுப்புக்கு வந்துள்ளதாக கருதவேண்டாம். கடந்த 10 ஆண்டுகளாக எதிர்க்கட்சியாக இருந்தபோது பணியாற்றியவர்கள் என்ற அடிப்படையில், சிலர் தொடரட்டும் என முடிவெடுத்தோம். இரக்கத்தால் கூட சிலருக்குப் பொறுப்புகள் நீட்டிக்கப்பட்டு இருக்கலாம். இதன் காரணமாகப் புதியவர்கள் சிலருக்கு வாய்ப்பு அளிக்க முடியவில்லை.

  புதிய நிர்வாகிகள், பொறுப்புக்கு வராத அனைவரையும் அரவணைத்து, அவர்கள் ஆலோசனைகளையும் பெற வேண்டும். சிலர் மற்ற நிர்வாகிகளோடு பேசிக் கொள்வதில்லை எனக் கேள்விப்படுகிறேன். இதைவிட பெரிய துரோகம் எதுவும் இருக்க முடியாது. அனைவரது செயல்பாடுகளும் கண்காணிக்கப்படும்.

எந்த ஒரு தனி மனிதரையும்விட, கட்சியும், கொள்கையும்தான் பெரிது. தமிழகத்தை திமுகதான் இனி நிரந்தரமாக ஆளப்போகிறது.

  ஒரு பக்கம் திமுக தலைவர் பதவி, மறுபக்கம் தமிழக முதல்வர். மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் அடி என்பதைபோல என் நிலை எனக்கு உள்ளது. இந்த சூழலில், நம்மவர்கள் யாரும் எந்த புதுப் பிரச்சினையையும் உருவாக்கிவிடக் கூடாதே என்ற நினைப்புடன்தான் தினமும் காலையில் கண்விழிக்கிறேன்.

பொது இடங்களில் சிலர் நடந்துகொண்ட முறை காரணமாக, பழிகளுக்கும், ஏளனத்துக்கும் கட்சி உள்ளானது. தற்போது கழிப்பறை,படுக்கை அறையைத் தவிர அனைத்தும் பொது இடமாகிவிட்டது. மூன்றாவது கண்ணாக செல்போன் முளைத்துவிட்டது.

   ஒவ்வொருவரும் பயன்படுத்தும் சொற்கள் மிக முக்கியமானவை. எனவே, பொது மேடைகளில் மட்டுமின்றி, அடுத்தவரிடமும் எச்சரிக்கையாகப் பேசுங்கள். சொன்னதை வெட்டியும், ஒட்டியும் பரப்பிவிடுவார்கள். இதற்கு பதில்சொல்வதற்கே நேரம் சரியாகிவிடும். கொச்சைப்படுத்தி, குளிர்காயப் பார்ப்பவர்களுக்கு நம்மவர்கள் இடம் தரக்கூடாது. இவ்வாறு முதல்வர் பேசினார்.

    பொது இடங்களில் தி.மு.க அமைச்சர்கள் தொடங்கி பல்வேறு மட்டத்தினரும் மக்களிடம் நடந்து கொள்ளும் விதம் குறித்துப் பல சந்தர்ப்பங்களில் முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை செய்திருக்கிறார். ஆனாலும் பல கட்ட தலைவர்கள் அதை தொடர்ந்து செய்துக் கொண்டேதான் இருக்கிறார்கள்.

 நேற்றுகூட அந்த பொதுக்குழு மேடையில் டி.ஆர்.பாலு அவரது செருப்பை வேறு ஒருவரை எடுத்து வரச்சொல்வதையும் அப்படி செருப்பு எடுத்து வரப்படுவதையும் மீடியாக்கள் பார்த்தன. பலரும் அதை கவனித்தனர்.

 உங்ககட்சித்தலைவர் எதற்காக எச்சரிக்கை மணி அடிக்கிறார் என்பதை சற்று சிந்தியுங்கள். நீங்கள் பழுத்த அரசியல்வாதியாக இருக்கலாம், ஆனால் 25 வயது பையன் மீம்ஸ் போட்டு ஜோலியை முடித்துவிடுகின்றான்.

 திமுக வை பொருத்தவரைக்கும், மாநிலம் மிகவும் சங்கடமான சூழல் இருக்கும் போது ஆட்சிக்கு வந்தது. அது அதன் ஹனிமூனைக்கூட சரியாக கொண்டாட முடியவில்லை. ஆட்சிக்கு வந்தவுடன் முதல் அறிவிப்பே லாக்டவுன் தான். அதைக்கூட வெகு சாமர்த்தியமாக கையாண்டு மாநிலத்தை வளர்ச்சிப்பாதைக்கு அழைத்துச்சென்று கொண்டிருக்கிறது.

 இந்த இடத்தில் பா.ஜ.க. சோஷியல் மீடியா என்கிற வெப்பனை மிகவும் ஸ்டாராங்காக பிடித்துக் கொண்டு கையால்கிறது.

 சோஷியல் மீடியாவை வைத்துக் கொண்டு ஆளும் கட்சியை விளாசிக்கொண்டிருக்கிறது. அதைத்தான் முதல்வர் ஸ்டாலின் கழிவறையையும் படுக்கை அறையையும் சுட்டிக்காட்டி பேசியிருக்கிறார்.

 திமுக வினர் பல மட்டத்தில் தவறாக நடந்துக் கொள்வதை அதன் தலைவர் பகிரங்கமாக ஒப்புக் கொண்டிருப்பதாகவே அவரது பேச்சு பார்க்கப்பட்டாலும், அது சரிதான். ஏனெனில் திமுகவை, பாஜக மக்கள் மத்தியிலிருந்து பிரித்து எடுக்க முயற்சிகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

  அது ஆபத்தாக போய் முடியும் என்பதில் எந்த அய்யமும் இல்லை. ஏன்னா ஏற்கனவே அடிதட்டு மக்கள் மனதில் திமுக வுக்கு எதிரான விதைகள் ஊன்றப்பட்டு தற்போது அது துளிர்க்க துவங்கியிருக்கிறது.

  அதையெல்லாம் அறிந்த பின்னரே முக ஸ்டாலின் இப்படி மேடையில் வெளிப்படையாக பேசியிருக்கிறார். அவர் ஒரு பழுத்த அரசியல்வாதி என்பதை நிரூபித்துள்ளார். அதாவது எமெர்ஜென்சி காலத்தில் பருக் அப்துல்லா, நிதிஷ்குமார் போன்ற தலைவர்களைப் போல் மு.க.ஸ்டாலினும் பாடுகளை அனுபவத்தவர் ஆவார். அவர்களில் தற்போது ஸ்டாலின் மட்டுமே ஆக்டிவ்வாக உள்ளார்.

   ஆகவே அவர் மேடையில் பேசியது எச்சரிக்கை மணியாகும். அதிமுகவை குடையும் பாஜக நாளைக்கு திமுகவை அசைத்துப் பார்த்து ஆட்சிக்கட்டிலில் ஏறூமானால் திராவிடத்துக்கு அதோடு மூடுவிழாதான்.

  ஆகவே ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் முதல்வரின் வருத்தமான பேச்சை வெறும் மேடை பேச்சாக கருதாமல் எதிர்கால திராவிட நாடு என்கிற சிந்தனையில் பார்க்க வேண்டும். மக்களை வெறுப்பேற்றக்கூடாது. குறிப்பாக  ஓசி என்று நலத்திட்டங்களுக்கு சொல்லக்கூடாது என்கிற வழக்கில் தன்னை திமுக இணைத்துக் கொண்டிருப்பதை அறிந்த பொன்முடி போன்றவர்கள் ஓசி பஸ் பயணம் என்பதை தவிர்க்க வேண்டும்.

 அப்போதுதான் கட்சியின் அடுத்த மேடையில் உங்கள் தலைவர் வருத்தம் இல்லாமல் மகிழ்ச்சியாக பேச முடியும்.