எடப்பாடிக்கு கிலியை ஏற்படுத்திய பண்ருட்டி ராமசந்திரன் - சசிகலா சந்திப்பு!

ஜி.சாந்தகுமார்,
எடப்பாடியை சசிகலா டீம் விடவே மாட்டார்கள் என்பதற்கு நேற்று பண்ட்டி ராமசந்திரனுடனான சந்திப்பு நிகழ்வு நிரூபணமாக்கியிருக்கிறது.
அதிமுக உட்கட்சி மோதல்கள் திசைக்கு ஒருபுறமாக வெடித்துக் கொண்டிருக்கும் நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு அனைவரும் இணைய கூடும் என கூறியுள்ளார்
அதிமுக மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனை சென்னை அசோக் நகரில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று (ஜூலை 31) சசிகலா திடீரென சந்தித்து பேசினார்.
அப்போது அவரது உடல் நலன் குறித்தும் சசிகலா கேட்டறிந்தார். சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சசிகலா, “பண்ருட்டி ராமசந்திரனை நேரில் பார்த்து அரசியல் பற்றி இருவரும் பேசினோம். நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு அனைவரும் இணைய கூடும். எனது பயணத்துக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. தொண்டர்களின் எண்ணப்படி எனது தலைமையில் அதிமுக மீண்டும் இணைவதற்கு வாய்ப்பு இருக்கிறது” என்று சொன்னார்.
பண்ருட்டி ராமச்சந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்த போது, “எம்ஜிஆர் உயிருடன் இருந்தபோதே அதிமுகவுக்கு ப.உ.சண்முகம், நெடுஞ்செழியன் உள்பட பலர் பொதுச் செயலாளர்களாக இருந்திருக்கின்றனர். அதேபோன்று, பொதுக் குழு உறுப்பினர்கள் எல்லோரும் ஒன்று சோந்துதான் திமுகவில் இருந்து எம்ஜிஆரை நீக்கினர்கள்.
அதனால், எவர் பொதுச் செயலாளர், பொதுக் குழுவில் எவருக்கு ஆதரவு என்பதெல்லாம் முக்கியமல்ல. யார் மக்களின் நம்பிக்கையைப் பெற்ற தலைவர் என்பதுதான் முக்கியம்.
சாணியில் பிள்ளையார் பிடித்துவிட்டு அதை அவனே வணங்கும் கதைதான் நடக்கிறது.அதிமுக உள்கட்சி விவகாரத்தில் பாஜகவின் தலையீடு உள்ளதாகக் கூறுவது தவறான தகவல்"
தற்போது அதிமுகவில் நிலவி வரும் குழப்பங்கள் வரும் சில காலம் தொடரும். இன்னும் பல பிரச்னைகள் வரும். பிறகுதான் ஒரு தீர்வு கிடைக்கும். தற்போதைய அதிமுகவில் உள்ள நிர்வாகிகள் அனைவரும் நியமனத்தால் பதவிக்கு வந்தவர்களே தவிர தோந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல.
எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் இடையேயான பிரச்னை கடல் நுரையைப் போன்றது. காற்றடித்தால் காணாமல் போய்விடும். அதனால், அதிமுக தொண்டர்கள் பொறுமை காக்க வேண்டும். அதிமுகவில் ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ளனர் என்பதே போலி நம்பிக்கை. முறையாக ஆதார் அட்டை கொண்டு கணக்கிட வேண்டும் என்று சொன்னார். மேலும் ஒரு செய்தியாளரின் கேள்விக்கு பொன்னையனை கேளுங்கள் என்று சிரித்துக்கொண்டே பேட்டியை முடித்தார் பண்ருட்டி ராமசந்திரன்.
இந்த சந்திப்பு என்பது எடப்பாடிக்கு கண்டிப்பாக கிலியை ஏற்படுத்தும் என்பதில் அய்யம் ஏதும் இல்லை. ஏனெனில் பண்ருட்டியார் சாதாரண அரசியல்வாதி இல்லை என்பது அவருக்கும் தெரியும் தானே.
சரி பொறுத்திருந்து பார்ப்போம்.