கருணாநிதி சிலை முன்பு செலிவியர்கள் போராட்டம்! மீண்டும் மீண்டும் கைது!

ஜி.சாந்தகுமார்,
சென்னையில் உள்ள கருணாநிதி சிலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட செலிவியர்களை காவல் துறையினர் மீண்டும் மீண்டும் கைது செய்தனர்.
2015-ம் ஆண்டில் இருந்து மருத்துவத் தேர்வு வாரியத்தின் தேர்வில் தேர்ச்சி பெற்ற சுமார் 12,000-ம் செவிலியர்கள் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வருவதாகவும், தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரியும் செவிலியர்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் இன்று சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை அருகே 300-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் ஒன்று கூடி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட செவிலியர்களை காவல் துறையினர் தள்ளுமுள்ளுக்கிடையே கைது செய்தனர்.
பின்னர் அவர்களை விடுவித்த போலிசார் ஏமாந்து போனார்கள். காரணம் விடுவிக்கப்பட்ட செவிலியர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது ஒரு பக்கம் இருக்க வெளி மாவட்டங்களிலிருந்து ரயில் மூலம் வந்த செவிலியர்கள் போராட்டக்களத்தை சூடுபடுத்தினர்.
திமுக அரசு தங்களுடைய தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி, எங்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அதற்கான உத்தரவாதத்தை சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவிக்க வேண்டும். காவல் துறையினர் எங்களை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்" என்று போராட்டக்காரர்கள் மீடியாக்கள் முன் தெரிவித்துள்ளார்கள்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், " எம்ஆர்பி செவிலியர்கள் போராட்டம் நடத்துவது தவறல்ல. பணி நிரந்தரம் செய்வது குறித்து தொடர்ந்து அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்கான வழிமுறைகளை சுகாதாரத் துறை தொடர்ந்து பரிசீலித்து வருகிறது.
தேவைப்பட்டால் எம்ஆர்பி செவிலியர்கள் உடன் பேச்சுவார்த்தை நடத்தக் கூட சுகாதாரத்துறை தயாராக உள்ளது. செவிலியர் சங்கங்கள் ஒன்பதுக்கும் மேற்பட்ட சங்கங்கள் உள்ளன. ஒரு சில சங்கங்கள் செவிலியர்களை போராட்டத்திற்கு தூண்டிவிடுகின்றன என்றார்.