சதியால் திமுக வேட்பாளர்கள் மனு தள்ளுபடி - அமைச்சர் கீதாஜீவன் கொதிப்பு!

கே.ஏ.ஜெகதீஸ்வரி,
ஒரு குடும்பத்தின் ஆதிக்கம், சதி, பாகுபாடு காரணமாக 3 வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் மனு தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது என அமைச்சர் கீதாஜீவன் கொதித்து பேட்டிக் கொடுத்துள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு , தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மெயின் ரோடு காமராஜர் சிலை அருகே திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடந்தது.
நிகழ்ச்சிக்கு, திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளரும், சமூக நலன் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமை வகித்து, தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார்.
பின்னர் அமைச்சர் கீதாஜீவன் செய்தியாளர்களிடம் பேசுகையில் அதிமுக ஆட்சியில் 5 ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தாத நிலை இருந்தது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி இல்லாத நிலை இருந்தது. மக்கள் பிரதிகள் இருந்தால் மட்டும்தான் அனைத்து திட்டங்களும் மக்களுக்கு எளிதில் கிடைக்கும் என்பதால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை அரசு அறிவித்துள்ளது.
தமிழக முதல்வர் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார்.
தமிழர்களுக்கு அரசு வேலை உறுதி செய்தது போல இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்பு உருவாக்கி தந்துள்ளார்.
தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட முதல்வர்கள் பெரும் முயற்சி எடுத்து வருகிறார் .தமிழக வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபட்டு வரும் முதல்வருக்கு ஆதரவு தர மக்கள் தயாராக இருக்கிறார்கள்.
அதனை வாக்காக மாற்றிட திமுக தொண்டர்கள் பணி செய்யவும் தயாராக இருக்கிறார்கள்.
கடம்பூர் பேரூராட்சியில் 55 ஆண்டுகளாக ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தாத நிலை இருந்தது, அதனை திமுக கூட்டணி கட்சிகள் முறியடித்துள்ளது.
திமுக கூட்டணி சார்பில் 9 இடங்களில் போட்டியிடுகிறது.
இந்தச் சூழ்நிலையில் ஒரு குடும்பத்தின் ஆதிக்கம் மற்றும் சதியின் காரணமாக 3 வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்றும், திமுக கூட்டணி கடம்பூர் பேரூராட்சியில் நிச்சயமாக வெற்றி பெறும் என்றும் சொன்னார்.