திருவண்ணாமலை திமுக கூல்!! கருணாநிதிக்கு சிலை வைக்கும் இடம் கிரிவலப்பாதையில் இல்லை!

திருவண்ணாமலை திமுக கூல்!! கருணாநிதிக்கு சிலை வைக்கும் இடம் கிரிவலப்பாதையில் இல்லை!

ம.பா.கெஜராஜ்,

  முன்னாள் முதல்வர், மறைந்த கருணாநிதி சிலை அமைக்க திருவண்ணாமலை திமுகவினர் மும்முரமாக ஏற்பாடுகளை செய்தனர்., இந்நிலையில் கார்த்திக் என்பவர் மேற்படி கருணா நிதி சிலை அமைக்க தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில்  மனு தாக்கல் செய்தார்.

  அந்த மனுவில் திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் பொது இடத்தை ஆக்கிரமித்து கருணாநிதி சிலை வைக்க திமுகவினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர், திருவண்ணாமலைக்கு பல்வேறு மாநிலத்தை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர் எனவும், கிரிவலப்பாதையில் மாநில நெடுஞ்சாலையில் இணையும் இடத்தில் சிலையை நிறுவ தற் காலிக பில்லர்கள் அமைத்து அவசர அவசரமாக பணிகள் நடந்து வருகிறது.

 இந்த சிலை அமைக்கப்பட்டால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். பக்தர்களுக்கு பாதிப்பு ஏற்படும் எனவே சிலை வைப்பதற்கு தடை விதிக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியன், சத்யநாராயண பிரசாத் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் இது தனியாருக்கு சொந்தமான இடம் என்பதால் அந்தப் பகுதியில் சிலை வைக்கப்படுவதை எதிர்த்து வழக்குத் தொடர மனுதாரருக்கு எந்த முகாந்திரமும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

 மேலும், வழக்கை விசாரித்த நீதிபதிகள் சம்பந்தப்பட்ட இடத்தை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை 19.05.2022 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

 மேலும் அதுவரை சிலை அமைக்கும் விவகாரத்தில் தற்போதைய நிலைதொடர வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

  அப்படியிருக்க, நீதிமன்ற உத்தரவின்படி மாவட்ட ஆட்சியர் முருகேஷ் சிலை அமைக்க இருந்த இடத்தினை வருவாய்த்துறை அதிகாரிகளுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதே நேரத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிக்கை சமர்பிக்க, நீதிமன்றத்தில் கால அவகாசம் கோரப்பட்டது. இதனால் அதிருப்தியடைந்த நீதிமன்றம் விரிவான அறிக்கை அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.

 இது குறித்த திமுக தரப்பில் பேசினோம், அவர்கள் ரொம்ப கூலாக சில விஷயங்களை சொன்னார்கள். சம்மந்தப்பட்ட இடம் 215 சதுர அடியாகும். இதை பேட்டரி கடைக்காரர் ஒருவரிடமிருந்து மாவட்ட திமுக கிரையம் பெற்றுள்ளது. இதனுடன் ஜீவா அறக்கட்டளை சார்பில் 95 சதுர அடி வழங்கப்படுகிறது.  இது திருவண்ணாமலை டு காஞ்சிபுரம் சாலையில் உள்ளது.  இந்த இடம் கிரிவலப்பாதையில் இல்லை. அதே போல் அது பொது இடமும் இல்லை, அங்கு நீர்நிலையும் இல்லை.

 அப்படியிருக்க அந்த இடத்தை ஏற்கனவே விற்றுவிட்டு சென்றவரின் மகன் தரப்பில் ஏதோ விஷயம் உள்ளது. அதனால் இந்த வழக்கு தொடரப்பட்டிருக்கலாம்.

  திமுகவைப் பொறுத்தவரை நீதிக்கு தலைவணங்கும், எனவே மாவட்ட செயலாளரும், அமைச்சருமான எ.வ.வேலுவும், அவரது மகன் மேற்பார்வையிலுள்ள ஜீவா அறக்கட்டளையும் இந்த வழக்கில் பதிலளிக்க நீதிமன்றம் அதன் உத்தரவில் குறிப்பிட்டுள்ளது. அந்த பதிலில் உரிய விளக்கம் அளித்து இது கிரிவலப்பாதையில் இல்லை என்பதையும், திமுக சார்பில் கிரையம் பெறப்பட்ட இடம் என்பதற்கான ஆவணங்களை சமர்ப்பிப்போம்.

 வழக்கு நடைமுறையில் உள்ளதால் மேற்படி எதையும் சொல்ல இயலாது என்றார்கள்.