சீண்டுவார் அற்ற சின்ன வெங்காயம்! 700 மூட்டை வேஸ்ட்!

சீண்டுவார் அற்ற சின்ன வெங்காயம்! 700 மூட்டை வேஸ்ட்!

 பா.முனுசாமி,

  சின்ன வெங்காயத்திற்கு உரிய விலை கிடைக்காததால் 700 மூட்டை சின்ன வெங்காயத்தை விவசாயி ஒருவர் கண்ணீரோடு குட்டையில் கொட்டி அழித்தார்.

 கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் நிலங்களில் முட்டைகோஸ், காலிஃபிளவர், சௌசௌ, உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ், உள்ளிட்ட காய்கறிகளை விளைவிக்கப்படுகிறது.

 மேலும், கொத்தமல்லி, புதினா, சின்ன வெங்காயம், வெள்ளரிக்காய் பல ஆயிரம் ஏக்கரில் பயிர் செய்து சென்னை, கோவை, மதுரை, கேரளா, உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

 இதற்கு வசிதியாக விவசாயிகள் பயிர் செய்தவுடன் நிலங்களில் வந்து வியாபாரிகள் காய்கறிகளை வாங்கிச் செல்வது வழக்கம். குறிப்பாக ஓசூரிலிருந்து தினமும் 150-க்கும் மேற்பட்ட லாரிகளில் பல்வேறு இடங்களுக்கு காய்கறிகள் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.

 இதில், சின்ன வெங்காயத்திற்கு நல்ல விலை கிடைப்பதால் இப்பகுதியில் ஏராளமான விவசாயிகள் சின்ன வெங்காயம் பயிரிட்டுள்ளனர்.

   ஆனால். தற்போது அறுவடைக்கு தயாராக இருக்கும் சின்ன வெங்காயம் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர்மழையால் அழுகும் நிலையில் உள்ளது.

   சின்ன வெங்காயத்தை வாங்க வியபாரிகள் யாரும் முன்வரவில்லை. 50 கிலோ கொண்ட ஒரு மூட்டை சின்னவெங்காயம் 5 ஆயிரம் முதல் 8 ஆயிரம் வரை விற்பனையான நிலையில் மழையால், தற்போது 50 கிலோ கொண்ட ஒரு மூட்டை சின்ன வெங்காய் 500 முதல் 750 ரூபாய்க்கு விற்பனையானது.

   அப்படியிருக்க, ஓசூர் அருகே சானமாவு கிராமத்தைச் சேர்ந்த அனில்குமார் என்பவர் 5 ஏக்கரில் உள்ள சின்ன வெங்காயத்தை அறுவடை செய்து விற்பனைக்கு வைத்திருந்தார்.

  அவர் தயாராக வைத்திருந்த 700 மூட்டை வெங்காயத்தை வாங்க வியாபாரிகள் யாரும் வராததால், வெங்காயம் மூட்டையிலே அழுகியது.

   இதனால் உரிய விலை கிடைக்கவில்லை என விவசாயி அனில்குமார் 700 மூட்டை சின்னவெங்காயத்தை அவருடைய விவசாய நிலத்தில் இருந்த குட்டையில் கொட்டி அழித்தார். இதனால் 35 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

   இது பற்றின தகவல் அதிகாரிகளுக்கு தெரிந்தும் கூட எவரும் அந்தப்பக்கம் எட்டிப் பார்க்கவில்லை.

  அவர்கள் வராமல் போனது இருக்கட்டும், ஒரு ஸ்டாக் குடோன் அமைத்து விவசாய பொருட்களை பாதுகாக்க ஏற்பாடு செய்யலாமே.