துப்பாக்கி குண்டில் உயிரை விடவும் தயார்:- ப்ரியங்கா காந்தி! நானே முதல்வர்:- பொம்மை!

ஆர்.செல்வராஜ்,
ராகுல் காந்தி, நாட்டுக்காக துப்பாக்கி குண்டு வாங்கி உயிரை விடவும் தயாராக உள்ளார்' என்று சகோதரி ப்ரியங்கா காந்தி கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தின் போது பரபரப்பாக பேசியிருக்கும் நிலையில் அடுத்த முதல்வர் நான் தான் என்று பசவராஜ் பொம்மை மார்தட்டியிருக்கிறார்.
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பாகல்கோட்டை மாவட்டம் ஜமகண்டி தாலுகாவில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், பிரதமர் மோடி தன்னை பற்றி 91 முறை அவதூறாக பேசியதாக கூறி உள்ளார்.
அந்த அவதூறு புகார்கள் ஒரே பக்கத்தில் அடங்கிவிடும். ஆனால் காங்கிரஸ் கட்சியினர் குறித்து கூறப்பட்ட அவதூறுகளை பட்டியலிட்டால் புத்தகங்களாக தயாரிக்கலாம். பொதுமக்களை சந்திக்கும் பிரதமர்கள், மக்களின் பிரச்சினைகளை குறித்து கேட்காமல், தனது வேதனைகளை மட்டுமே கூறுகிறார்.
முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோர் நாட்டுக்காக குண்டு பாய்ந்து உயிரிழந்தனர். பி.வி.நரசிம்ம ராவ் மற்றும் மன்மோகன் சிங் போன்ற பிரதமர்கள் நாட்டிற்காக கடினமாக உழைத்தனர். ஆனால் பிரதமர் மோடி மட்டுமே மக்கள் முன்பு தன்னை பற்றி கூறி அழுகிறார்.
தைரியம் இருக்கிறதா. எனது சகோதரர் ராகுல் காந்தியிடம் கற்று கொள்ளுங்கள். நீங்கள் வேதனையாக பேசினாலும், துப்பாக்கியால் சுட்டாலும், கத்தியால் குத்தினாலும் எனது சகோதரர் ராகுல் காந்தி சத்தியத்தின் வழியில் செல்வார். ராகுல் காந்தி, நாட்டுக்காக துப்பாக்கி குண்டு வாங்கி உயிரை விடவும் தயாராக உள்ளார்' என்றார்.
நானே முதல்வர்,
பசவராஜ் பொம்மை தலைமையிலேயே சட்டசபை தேர்தல் எதிர்கொள்ளப்படும் என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, இதற்கு முன்பாக அறிவித்திருந்தார். இந்த நிலையில், கர்நாடக சட்டசபை தேர்தலில் பசவராஜ் பொம்மை தலைமையில் சட்டசபை தேர்தலை சந்திப்பதாகவும், பா.ஜனதா வெற்றி பெற்றால் அவர் மீண்டும் முதல்-மந்திரி ஆவார் என்றும் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவித்துள்ளார்.
இது குறித்து தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் நேற்று முதலமைச்சர் பசவராஜ் பொம்மை நிருபர்களிடம் கூறியதாவது:- என் மீது இருக்கும் நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்பு காரணமாக எங்கள் கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா, அவ்வாறு கூறி இருக்கிறார். அதனை பூர்த்தி செய்ய அனைத்து விதமான நடவடிக்கைகளையும் எடுப்பேன். பா.ஜனதா கட்சியை மீண்டும் ஆட்சி கட்டிலில் அமர்த்த கடுமையாக உழைப்பேன். பா.ஜனதா வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிப்பது உறுதி. பா.ஜனதா கட்சியை பொறுத்தமட்டில் யார் முதல்-மந்திரியாக இருக்கிறாரோ, அவரது தலைமையில் தேர்தலை சந்திப்பது தான் வாடிக்கையாக நடந்து வருகிறது என்று சொன்னார்.