ஸ்பீட் பிரேக் அமைக்க மறுப்பு:- அதிகாரிகளை கண்டித்து மக்கள் மறியல்!

ஸ்பீட் பிரேக் அமைக்க மறுப்பு:- அதிகாரிகளை கண்டித்து மக்கள் மறியல்!

 கு.அசோக்,

 தேசிய நெடுஞ்சாலையில் பள்ளிக்கு அருகே விபத்துகளை தடுக்கும் வகையில் வேகத்தடை அமைக்க பொதுமக்கள் வைத்த கோரிக்கையை ஏற்க மறுத்த நெடுஞ்சாலை துறையை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியல் நடத்தினர்.

 திருப்பத்தூர் அடுத்த விஷமங்கலம் பகுதியில் திருப்பத்தூர் திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் புதிய தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

 இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலை அருகே அரசு பள்ளி மற்றும் வங்கிகள் அமைந்துள்ளதாலும், பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள காரணத்தாலும், பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சாலையை கடக்கும் பொழுது  தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக செல்லும் வாகனங்களால் அடிக்கடி விபத்து நேரிடும் சூழல் உள்ளது.

 இதனால் பள்ளிக்கு அருகில் ஒரு வேகத்தடை அமைக்க கோரி பொதுமக்கள் நெடுஞ்சாலை துறையிடம் கோரிக்கை வைத்தனர்.

 பொதுமக்களின் கோரிக்கையை கண்டு கொள்ளாமல் தார் சாலை அமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 தகவல் அறிந்து  சம்பவ இடத்திற்கு வந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பொதுமக்களின் கோரிக்கை ஏற்க மறுத்து வேகத்தடை அமைக்க முடியாது எனக் கூறியதால் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

 இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்பத்தூர் கிராமிய காவல்துறை ஆய்வாளர் மற்றும் காவல்துறையினர் பொதுமக்களிடையே சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வேகத்தடை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

 இதனால் திருப்பத்தூர் திருவண்ணாமலை நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.'