அமைச்சர் பெயரை சொல்லி லஞ்சம் கேட்ட திமுக பிரமுகர்! டப்பிங் எடிட்டாம்!!

அமைச்சர் பெயரை சொல்லி லஞ்சம் கேட்ட திமுக பிரமுகர்! டப்பிங் எடிட்டாம்!!

Ma.ba.Gajaraj,

   அமைச்சர் பெயரை  தவறாக பயன்படுத்தி லஞ்சம் கேட்ட திமுக பிரமுகரின் வீடியோ தென்மாவட்டங்களில் வைரலானது.

   தேனி அருகே வடபுதுபட்டியைச் சேர்ந்தவர் சூர்யா பாலமுருகன்.இவர் திமுக தேனி நகர பொறுப்பாளராக உள்ளார்.

   அவர் டிரான்ஸ்பர் கோரும் ஆசிரியர்களிடம் பணம் வாங்குவதாகவும், அதற்காக அமைச்சர் பெயரை தவறாக பயன்படுத்துவதாகவும் புகார்கள் எழுந்து வந்தது.

  இந்நிலையில் அரசுப் பணியிடம் மாறுதல் பெற வேண்டும் என்றால், அமைச்சர் அலுவலகத்திற்கு 5 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும். அதற்கு முன்பணமாக 3 லட்ச ரூபாயும், இரண்டு லட்சத்தை காசோலையாக வழங்க வேண்டும் எனவும், பணியிட மாறுதலுக்கான ஆணை கிடைத்ததும், காசோலையை வங்கியில் செலுத்தி பணமாக மாற்றிக்கொள்வதாக ஒருவரிடம் கேட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

    மேலும் அரசுப் பணியிடம் மாறுதல் பெறுவதற்கு இதைவிட வேறு எவரும் குறைவாக பணம் வாங்குவதில்லை. இது போன்று பத்து நபர்களின் பணியிட மாறுதலுக்காக அமைச்சா் அலுவலகத்திற்கு 30 லட்சம் ரூபாயை முதலில் செலுத்த வேண்டும். நம்பிக்கையுடன் வந்தால் மட்டுமே இந்த வேலைகளை செய்து தர முடியும் என பேரம் பேசுகிறார்.

  இது தொடர்பாக, மூவேந்தர் முன்னேற்ற கழக கட்சியை சேர்ந்த ஜெயகாளை என்பவர் புகார் அளித்துள்ளார். அதில் திமுக தேனி நகர பொறுப்பாளர் பணம் பறிப்பதாக தெரிவித்துள்ளார்.

டப்பிங் எடிட்டிங் சார்.

ஜெயகாளை என்பவர், ஒரு வீடியோ எடுத்து அதில் நான் பேசும் குரல்களை டப்பிங் எடிட்டிங் செய்து என்னை மிரட்டி 5 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டிக் கொண்டிருக்கிறார் . இந்தப் பொய்யான வீடியோவை சோசியல் மீடியாக்களில் போட்டுள்ளார்.

அதேபோல் ஒரு பெண் குரல் போல் பேசி வேலை வாங்கித் தருவதாக சொல்லி நான் அந்தப் பெண்ணிடம் பணத்தை பெற்றுக் கொண்டதாக ஒரு ஆடியோ ரெக்கார்டிங் தயார் செய்துள்ளார். அந்த ஆடியோவை என் வாட்ஸ்-அப் நம்பருக்கு போட்டு என்னிடம் 3 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டுகிறார்.

அதேபோல் நான் கேட்கும் பணத்தை கொடுக்கவில்லை என்றால் தேனி நகர் மன்ற தலைவருக்கு போட்டியிடும் உங்களை குறித்து வீடியோ, ஆடியோக்களை போட்டு உங்கள் பெயரை அசிங்கப்படுத்திவேன் என்று என்னை பயமுறுத்துகிறார் .

எனவே என் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும், இவரை போன்ற நபர்கள் மீது உடனடியாக சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

  சூர்யா பாலமுருகன் ரியல் எஸ்டேட் தொழில் மற்றும் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். இவருடைய மனைவி வடபுதுபட்டி ஊராட்சிமன்ற தலைவராக உள்ளார். தேனி நகராட்சித் தலைவராக வேண்டும் என்ற இலக்குடன் சூர்யா பாலமுருகன் இயங்கி வந்தார்.

தேனி மாவட்டத்தில் இரண்டு இடங்களில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அதில் வடபுதுபட்டியும் ஒன்று அப்போதே மு.க.ஸ்டாலினிடம் மனதில் இடம் பெற வேண்டும் என பெரும் செலவு செய்து தனது அரசியல் பலத்தை காட்டியவர். இந்நிலையில் இவர் பணியிடமாறுதல் பணம் கேட்பதாக வெளியாகியுள்ள விடியோ தேனியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  எஸ்.பி.யிடம் புகார் அளிப்பேன்

இதுகுறித்து பேசிய ஜெயகாளை நான் தேனி மாவட்ட மூவேந்தர் முன்னேற்றக் கழக செயலாளராக உள்ளேன். மூவேந்தர் புயல் மீடியா நடத்தி வருகிறேன். சூர்யா பாலமுருகன் பேசிய விடியோ பதிவு உண்மையானது. பாதிக்கப்பட்ட நபர் வீடியோ பதிவு செய்து என்னிடம் ஒப்படைத்தார்.

  நான் என்னுடைய யூடியூப் சேனலில் அதை வெளியிட்டேன். வேறு மீடியாக்களிடமும் அவர் கொடுத்துள்ளார். ஆசிரியர் பணியிடமாறுதலுக்கு திருவண்ணாமலையில் இருந்து தேனிக்கு ஒரு ஆசிரியை மாறுதல் கேட்டார்.

   இடமாறுதலுக்காக சூர்யா பாலமுருகனிடம் பேசியவர் அரண்மனைப்புதூரைச் சேர்ந்த பெயிண்டர் வேலை செய்யும் நபர் ஆவார். பாலமுருகன் இடமாறுதல் மட்டுமில்லாது அரசு வேலை வாங்கி தருவதாகவும் பலரிடம் பணம் பெற்றுள்ளார்.

  இதையும் உரிய ஆதாரங்களுடன் மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் அளிக்க உள்ளதாகதெரிவித்தார்