சிக்கன் பிரியாணி ஷவர்மா சாப்பிட்ட 44 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி! குறட்டைவிடும் உணவுத்துறை அலுவலர்கள்!

வ.மகேசு,
சிக்கன் பிரியாணி மற்றும் ஷவர்மா சாப்பிட்ட இரு வெவ்வேறு சம்பவங்களில் மூன்று மாணவர்கள் உட்பட 44 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் உணவுத்துறை அலுவலர்கள் மெல்ல இப்போதுதான் விசாரணையை துவக்கியிருக்கிறார்கள். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி செந்தமிழ் நகர் பகுதியை சேர்ந்த சித்திரைவேல் என்பவர், தனது வீட்டில் பராமரிப்பு பணிகளை செய்து வருகிறார். அதற்காக கட்டிட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.
மேற்படி வேலை பார்ப்பவர்களுக்கு, வீட்டின் உரிமையாளர் அறந்தாங்கியில் உள்ள ஒரு பிரியாணி கடையிலிருந்து, 40 பிரியாணி பொட்டலங்களை வாங்கி கொடுத்துள்ளார். அதனை சாப்பிட்டதும் கட்டிடத் தொழிலாளர்கள் 11 பேர் வாந்தி எடுத்து மயங்கியுள்ளனர்.
இதனை அடுத்து அதிர்ச்சியடைந்த கட்டிட உரிமையாளர் சித்திரை வேல், உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைத்து அவர்களை அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அப்படியிருக்க, பிரியாணி சாப்பிட்ட மேலும் 13 பேருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நேற்று 27 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ள நிலையில் மேலும் 13 பேர் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பிரியாணி சாப்பிட்டு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 41-ஆக உயர்ந்துள்ளது.
பிரியாணி சாப்பிட்டதால் ஏற்பட்ட பாதிப்பு பற்றி அறந்தாங்கி காவல் துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கட்டிடத் தொழிலாளர்களுக்கு விற்பனை செய்யப்பட்டது கெட்டுப்போன பிரியாணியா என்பது குறித்து உணவுத்துறை அலுவலர்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட மாணவர்கள் பாதிப்பு.
இந்நிலையில் தற்போது தஞ்சை மாவட்டத்தில் ஷவர்மா சாப்பிட்ட 3 கல்லூரி மாணவர்கள் வாந்தி மயக்கம் ஏற்பட்டு பாதிப்புக்குள்ளானது தெரிவந்துள்ளது.
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் அரசு கால்நடை மருத்துவ கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் ஏராளமான மாணவமாணவிகள் படித்து வருகின்றனர். இந்தக் கல்லூரியில் கன்னியாகுமரியை சேர்ந்த பிரவீன் (வயது 22), புதுக்கோட்டையைச் சேர்ந்த பரிமலேஸ்வரன் (21), தர்மபுரியை சேர்ந்த மணிகண்டன் (22) ஆகியோர் விடுதியில் தங்கியிருந்து படித்து வருகின்றனர்.
சில நாட்களுக்கு முன்பு 3 பேரும் விடுமுறைக்காக தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று இருந்தனர். விடுமுறை முடிந்து நேற்று கல்லூரிக்கு வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு 3 பேரும் ஒரத்தநாடு பிரிவு சாலையில் ஒரு பெட்ரோல் பங்க் அருகே உள்ள துரித உணவகத்தில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்டுவிட்டு விடுதிக்கு சென்றனர்.
அப்போது திடீரென பிரவீன் உள்ளிட்ட 3 பேருக்கும் உடல் ஒவ்வாமை ஏற்பட்டு அடுத்தடுத்து வாந்தி எடுத்தனர். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தனர். உடனடியாக கல்லூரி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து 3 மாணவர்களும் சிகிச்சைக்காக ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு மாணவர்கள் 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட ஓட்டலில் உணவுத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனராம்.