எட்டுமாத குழந்தை விபத்தில் பலி!

க.பாலகுரு,
மயிலாடுதுறை, மல்லியம் அருகே அரசு பேருந்து உரசிய விபத்தில் 8 மாத பெண் குழந்தை உயிரிழந்தது. மயிலாடுதுறை மயிலாடுதுறை மாவட்டம், மூவலூர் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் கூலி வேலை செய்து வருகிறார்.இவரது மனைவி புவனேஸ்வரி தனது இரண்டு பெண் குழந்தைகளான சஹானா(3), 8 மாத குழந்தை பவுன்சிகாவை அழைத்து கொண்டு தந்தை நடராஜனுடன் இரு சக்கர வாகனத்தில் சொந்த ஊரான தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை அருகே மேலையூரில் உள்ள உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்றார்.
அப்போது மயிலாடுதுறை - கும்பகோணம் சாலை மல்லியம் மெயின் ரோட்டில் செல்லும் போது பின்பக்கமாக வந்த அரசு பேருந்து இருசக்கர வாகனத்தை முந்தி செல்லும் போது பேருந்து உரசியதில் நிலை தடுமாறி கீழே விழுந்தனர்.
இதில் நடராஜனுக்கு தலையில் லேசான காயமும், புவனேஸ்வரிக்கு காலில் காயமும் ஏற்பட்டுள்ளது. சகானா என்ற பெண் குழந்தை உயிர் தப்பியது. ஆனால் துரதிஷ்டவசமாக 8 மாத கைக்குழந்தையான பவுன்சிகா மீது அரசு பேருந்து சக்கரம் ஏறியதில் சம்பவ இடத்திலேயே குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குத்தாலம் போலீசார் விபத்து ஏற்படுத்திய பேருந்தை காவல் நிலையம் எடுத்துச் சென்று காயம் அடைந்தவர்களையும் மீட்டு 108 வாகனம் மூலம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இறந்த குழந்தை பவுன்சிகாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து குத்தாலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.