சீட்டுக்கட்டு போல் சரிந்த மாடி குடியிருப்புகள்! அதிர்ஷ்டவசமாக தப்பித்த மக்கள்!!

சீட்டுக்கட்டு போல் சரிந்த மாடி குடியிருப்புகள்! அதிர்ஷ்டவசமாக தப்பித்த மக்கள்!!

  ம.பா.கெஜராஜ்,

  சென்னை, திருவொற்றியூரில் உள்ள அரிவாக்குப்பத்தில் குடிசை மாற்று வாரியத்தால் அமைக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் பல ஆண்டுகளாக மக்கள் குடியிருந்த வந்தார்கள்.

  இந்நிலையில், இந்த அடுக்குமாடி குடியிருப்பு இன்று காலை திடீரென இடிந்து விழுந்தது. இதனால், அதில் இருந்த 24 வீடுகளும் தரைமட்டமாகின. நேற்று இரவே கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டதாகவும், இதனால் இன்று காலை கட்டிடத்தில் அதிர்வுகள் ஏற்பட்டதாலும், பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக குடியிருப்பை காலி செய்துள்ளனர்.

   பொதுமக்கள் அவரவர் வீடுகளில் இருந்து வெளியேறிய சில நிமிடங்களில் கட்டிடம் இடிந்து விழுந்து தரைமட்டமாகியது. இதனால், உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. இருப்பினும், கட்டிட இடிபாடுகளில் யாரேனும் சிக்கி உள்ளனரா என்பது குறித்து தீயணைப்பு படை வீரர்கள் தேடி பார்த்து, இடிபாடுகளை அகற்றும் பணியிதீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.  

   சென்னை புறநகர் பகுதியான திருவெற்றியூரில்  4 மாடிகள் கொண்ட 336 குடிசை மாற்று வாரிய வீடுகள் உள்ளன. 1998 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த வீடுகள், தேனாம்பேட்டை திருவொற்றியூர் உள்பட சென்னை மாநகரின் பல்வேறு பகுதி மக்களுக்கு வழங்கப்பட்டன.

  கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் இந்த வீடுகளில் கடுமையான விரிசல் ஏற்பட்டதாக இங்குள்ள பொதுமக்கள் அதிகாரிகளிடம் புகார் கொடுத்திருந்தனர். இதையடுத்து குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் சிறுசிறு பணிகளை மேற்கொண்டிருந்தனர். நேற்று இரவு 24 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு லேசாக விரிசல் ஏற்பட்டது.

    இது குறித்து திமுக பகுதி செயலாளர் அரசு என்பவரிடம் பொதுமக்கள்  புகார் சொன்னார்கள்.

   அவர் குடிசை மாற்று அதிகாரி மற்றும் வருவாய் துறையினர் ஆகியோருக்கு தகவல் அளித்ததன் பேரில், இன்று காலை அந்த கட்டிடத்தின் உள்ளே இருந்தவர்கள் அவசர அவசரமாக  வெளியேற்றப்பட்டனர்.

   அதன் பின்னர் காலை சுமார் பத்து முப்பது மணி அளவில் திடீரென பெரிய சத்தத்துடன் அந்த வீடுகள் இடிந்து விழுந்தன.

  கட்டிடம் இடிந்து சரிந்த போது அதை பகுதிச் ன்செயலாளர் அரசு வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்.

 அரசு அவர்களின் தகவலின் பேரில் அலுவலர்கள் எடுத்த முயற்சியால் இன்று பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டிருக்கிறது.

  இந்நிலையில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

திருவொற்றியூரில் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தினால் கட்டப்பட்ட பழைய குடியிருப்பு ஒன்று இடிந்து விழுந்ததில் 24 வீடுகள் முழுவதுமாக சேதமடைந்து அதனால் மக்கள் பாதிப்படைந்த செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறேன்.

விபத்து நடந்த பகுதிக்கு உடனடியாக நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட அமைச்சர் தா.மோ.அன்பரசனை அனுப்பி வைத்து, விபத்தில் வீடிழந்த குடும்பத்தினருக்கு உடனடியாக மாற்று குடியிருப்புகள் வழங்கவும் அறிவுறுத்தியுள்ளேன்.

பாதிக்கப்பட்ட மக்கள், மீண்டும் புதிய வாழ்க்கையைத் தொடங்க 24 குடும்பங்களுக்கும் தலா ரூபாய் ஒரு லட்சம் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

இதுபோன்ற விபத்து ஏற்படாத வகையில் பழைய குடியிருப்புகளின் விபரங்களைச் சேகரிக்கவும் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளேன்.

இவ்வாறு முதலமைச்சர்.மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.