அடிப்படைத் தேவையை பூர்த்தி செய்வதில் அலட்சியம் காட்டும் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர்!

அடிப்படைத் தேவையை பூர்த்தி செய்வதில் அலட்சியம் காட்டும் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர்!

  ஜி.கே.சேகரன்,

   பொதுமக்களின் அடிப்படைத் தேவையை பூர்த்தி  செய்வதில் அலட்சியம் காட்டும் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மக்கள் குடியிருப்பு பகுதியை சீர்படுத்தி தூய்மையாக்க கோரிக்கை.

  திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகரத்தின் மையப்பகுதியில் இருக்கும் போஸ்கோ நகர்.இந்தப் பகுதியில் சுமார் 800 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனர்.

  தினந்தோறும் மூட்டை தூக்கி  வாழ்க்கையை நடத்தி வரும் இங்குள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லாமல்  வாழ்ந்து வருகின்றனர்.

 திருப்பத்தூர் நகரத்தில் பேருந்து நிலையம் ரயில் நிலையம் தூய நெஞ்சக் கல்லூரி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் இவைகளுக்கு நடுவில் மையப்பகுதியாக  போஸ்கோ நகர் இருந்தும் இந்தப் பகுதியில் வாழும் மக்கள் அடிப்படைத் தேவையான கழிவறை கூட இல்லாமல் அவதிப்படுகின்றனர்.

  இதுபற்றி அவர்கள் தெரிவிக்கையில், சுமார் 50 ஆண்டு காலமாக வசிக்கும் எங்களுக்கு எந்த அதிகாரியும் எந்த மக்கள் பிரதிநிதிகளும் அரசின் மூலமாக கிடைக்கும் சலுகைகளையும் உதவிகளையும் செய்ய இதுவரை முன்வரவில்லை.

  போஸ்கோ நகர் சிவராஜ் பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 800 குடும்பங்கள் உள்ளன. அதில் சுமார் 350க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வீட்டு பட்டா இல்லை. அந்த காலத்தில் இருக்க இடம் இல்லை என்பதற்காக ஏரியின் ஓரமாக குடிசைகள் அமைத்து வாழ ஆரம்பித்தோம், இன்றுவரை அதே நிலையில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

  வீட்டு பட்டா இல்லாததால் வங்கிகளுக்கு சென்று கடன் வாங்கி கழிவறையுடன் கூடிய வீட்டைக் கட்டிக் கொள்ள எங்களால் இயலவில்லை.

   அரசு திட்டங்களின் மூலமாக கட்டப்பட்ட கழிவறை தண்ணீர் பிரச்சனையால்  பயன்பாட்டில் இல்லாமல் உள்ளது. அது தற்பொழுது பன்றிகளுக்கு தான் இருப்பிடமாக மாறியுள்ளது. முன்பெல்லாம் நாங்கள் காலை கடனை கழிக்க பக்கத்தில் உள்ள ஏரி போன்ற பகுதிகளில் செல்வோம். ஆனால் தற்பொழுது கடந்த சில தினங்களுக்கு முன்பு பருவமழையின் சீற்றத்தால் ஏரி நிரம்பி அந்த நீர் எங்கள் குடிசைகளிலும் புகுந்து சேதம் அடைந்ததால் காலைக்கடன் கழிக்க பக்கத்தில் உள்ள பேருந்து நிலையத்திற்கு சென்று 10 ரூபாய் கொடுத்து தான் கழிவறையை பயன்படுத்தி வருகிறோம்.

   இதனால் பெண்களுக்கு பெரும் சிரமமாக உள்ளது. சிறியவர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் இதே நிலைதான்.

  அதுமட்டுமல்லாமல் குடிசைகளுக்குள் ஏரி நீர் புகுந்து சேதமடைந்ததால் இரவு நேரங்களில் குழந்தை குட்டிகளுடன் உறங்க முடியாமல் தவித்தோம்.

  கொசுக்களின் தொந்தரவினால் நோய்த்தொற்று உருவாக்கி வியாதிகளில் அவதிப்படுகிறோம் வீட்டைச் சுற்றியும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் பல்வேறு விஷப்பூச்சிகள் நடமாடுவதால் இரவு நேரங்களில் தூங்கும் பொழுது பயத்துடனும் பதட்டத்துடனும் உறங்குகிறோம்.

  அந்த நிலையில் கூட யாரும் வந்து எங்களை எட்டிப் பார்க்கவில்லை.

திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி தேர்தல் வரும்போது மட்டும் ஓட்டுக்காக எங்களை நாடி வருகிறார்அதை செய்கிறோம் இதை செய்கிறோம் என்று கூறுகிறார்கள். அதற்குப் பிறகு அவர்களிடம் கேட்டால் நீர்பிடிப்பு பகுதிகளில் நீங்கள் வசித்துக் கொண்டிருக்கிறீர்கள் எங்களால் எதுவும் செய்ய முடியாது என்று கூறுகிறார்கள்.

   ஓட்டு போட மட்டும் நாங்கள் வேண்டும். எங்கள் வீட்டின் ஓட்டையை சரி செய்ய உதவி கேட்டால் அச்சமயத்தில்  நாங்கள் வேண்டாதவர்களாக  மாறி விடுகிறோம்.

   எங்களுடைய இயலாமையை கூறி நிராகரித்து விடுகிறார்கள். இதுதான் ஜனநாயகமா. மாவட்ட ஆட்சியரிடமும் சம்பந்தப்பட்ட அதிகாரியிடமும் பலமுறை மனு கொடுத்தும் இதுவரைக்கும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

  எனவே மாவட்ட ஆட்சித் தலைவரும் முதலமைச்சரும் எங்கள் பகுதியில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட மக்களின் மீது கருணைகொண்டு எங்களுக்கென்று ஒரு இலவச வீட்டு மனை பட்டாவை வழங்கினால் நாங்களும் சக மனிதர்களை போல் வாழ்வதற்கு உதவியாக இருக்கும்.

  நாய்களுக்கும் பன்றிகளுக்கும் கூட இருக்க ஒரு கூடாரம் தேவைப்படுகிறது. நாங்கள் எல்லாம் மனிதர்கள் என்பதை இந்த அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும்,  சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பூர்த்தி செய்து தருமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.